`கொலை குறித்த பாடல்' இன்ஸ்டாவில் வெளியிட்ட சிறிது நேரத்தில் ஹரியானா பாடகர் உ.பி....
"தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுங்கள்; முதலமைச்சர் விளக்கம் வேண்டும்!" - பெ.சண்முகம் கடிதம்
இடதுசாரி அமைப்புகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுத்து நிறுத்த அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
அந்தச் சுற்றறிக்கைக்கு எதிர்ப்புகள் எழுந்ததும், அது திரும்பப் பெறப்பட்டது.
ஆனாலும், இந்த உத்தரவு பிறப்பிக்க காரணமாக இருந்த சாய்குமாரைத் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

தலைமைச் செயலாளரின் முடிவு அரசின் முடிவே!
இதை வலியுறுத்தி, கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 22), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இன்று (ஆகஸ்ட் 27), இந்தப் பிரச்னையை மையப்படுத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்.
“தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமாரின் சுற்றறிக்கை சட்டவிரோதமானதும், அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள போராட்ட உரிமையை மறுப்பதும் ஆகும்.
இது திட்டமிட்டு இடதுசாரி அமைப்புகளைக் குறிவைக்கிற செயல் என்கிற முறையில் எங்களது கடும் கண்டனத்தைத் தெரியப்படுத்துகிறோம்.
அரசின் அதிகாரக் கட்டமைப்பில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் தலைமைச் செயலாளர் எடுக்கும் முடிவு அரசின் முடிவாகவே கருதப்படும். எனவே, இதுகுறித்துத் தாங்கள் விளக்கம் அளிப்பது அவசியம்.
தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை வேண்டும்
இடதுசாரி அமைப்புகள் மட்டுமல்ல, எந்தவொரு அமைப்பும் போராடுவதற்கு உரிமை உண்டு.
அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை ஒடுக்குவதற்கு, பல்துறை ஒருங்கிணைப்பைச் செயல்படுத்துவது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதாகும்.
எனவேதான், தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால், உயர் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவர்களின் முடிவைக் கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்த இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்டுவிட்டோம் என்று சொல்வது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல; பொருத்தமானதும் அல்ல.

நாங்கள் மன்னிப்பு கேட்கவில்லை
மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் மன்னிப்புக் கோரியிருக்கிறார். நாங்கள் யாரிடமும் மன்னிப்புக் கோர வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை.
மாறாக, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை என்பதையே வலியுறுத்தியிருக்கிறோம்; இப்போதும் வலியுறுத்துகிறோம். இதுகுறித்து அரசு தரப்பிலிருந்து இதுவரையிலும் பொறுப்பான பதில் ஏதும் சொல்லப்படவில்லை.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாட்சியர், அந்த வட்டத்திற்குட்பட்ட CPI(M), CPI கட்சிகளின் உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கக் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இது நேரடியான அச்சுறுத்தல் மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதும், தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்துவதும் ஆகும்.
17 A-யின் கீழ் விளக்கம்
இதுகுறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாமல் அவரது பயிற்சிக் காலம் முடிந்ததால் இடமாறுதல் செய்வதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்திருந்தார்.
பிறகு அவருக்கு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 17 A-யின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதாவது இது சிறு குற்றமாக மட்டுமே அரசால் கருதப்பட்டு மென்மையாக அணுகப்படுகிறது.
மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு சி.டி.ஆர்.நிர்மல்குமார் அவர்கள், வட்டாட்சியரின் கடிதத்திற்கும், அரசுக்கும் சம்பந்தமில்லை; சொந்த விருப்பு, வெறுப்பு அடிப்படையில் அவர் அந்தச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.


சுற்றறிக்கையை முழுமையாக திரும்பப் பெறுங்கள்
வட்டாட்சியரின் சட்டவிரோதமான இந்தச் செயலுக்கு அமைச்சரின் பதிலும், துறையின் நடவடிக்கையும் எந்தவகையிலும் பொருத்தமானதல்ல. அரசுப் பதவியில் உள்ள ஒருவர் தனிப்பட்ட நோக்கத்திற்காகச் செய்தார் என்றால் அது கடுமையான குற்றமாகும்.
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் உட்பட தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தலைமைச் செயலாளர் பங்கேற்ற கூட்டத்தின் முடிவு ரத்து செய்யப்பட்டு, அந்தச் சுற்றறிக்கை முழுமையாகத் திரும்பப் பெறப்பட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.












