செய்திகள் :

`இந்தியாவைப் பார்த்து ஐரோப்பா இதைக் கற்றுக்கொள்ள வேண்டும்' - வெளிநாட்டுப் பெண் பகிர்ந்த சுவாரசியம்

post image

நவீன தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் ஐரோப்பிய நாடுகள் உலகிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தாலும், மனித வாழ்க்கைக்குத் தேவையான உண்மையான நிம்மதியும் மகிழ்ச்சியும் இன்றும் அங்கு பலருக்குக் எட்டாக்கனியாகவே உள்ளது.

எத்தனையோ வெளிநாட்டினர் இந்திய கலாசாரத்தை வியந்து பாராட்டியிருந்தாலும், தற்போது இந்தியாவில் வசித்து வரும் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த மோனிகா என்ற பெண் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள பதிவு கவனம் ஈர்த்துள்ளது.

"நான் சொல்லப்போகும் விஷயம் சிலருக்கு சர்ச்சையாகத் தோன்றலாம், ஆனால் மேற்கத்திய உலகம் வேகமாக இழந்து வரும் சில உன்னதமான வாழ்வியல் மதிப்புகளை அவர்கள் இந்தியாவைப் பார்த்துதான் மீண்டும் கற்றுக் கொள்ள வேண்டும்" என்ற அதிரடி அறிமுகத்துடன் அவர் பகிர்ந்துள்ள கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அவர் குறிப்பிட்ட முதல் விஷயம், இந்தியாவின் உன்னதமான விருந்தோம்பல் மற்றும் சமூகக் கூட்டு வாழ்வாகும். ஐரோப்பிய நாடுகளில் உறவினர்களோ நண்பர்களோ ஒருவரது வீட்டிற்கு வருவதற்கு முன்பே பல விதிமுறைகளும் தயக்கங்களும் இருக்கும் சூழலில், இந்தியாவில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை இறைவனுக்குச் சமமாக மதித்து உபசரிக்கும் குணம் உலகிலேயே தனித்துவமானது என்று அவர் நெகிழ்கிறார்.

அதேபோல், பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியாத ஐரோப்பியத் தனிமனித வாதத்தோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் மக்கள் இன்றும் ஒருவருக்கொருவர் இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு, எந்தவொரு அவசரக் காலத்திலும் ஓடிவந்து உதவும் பாதுகாப்பான சூழலைத் தருவதாகப் பாராட்டியுள்ளார்.

அடுத்ததாக, இந்தியர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் தனிப்பட்ட தூய்மையை அவர் சுட்டிக்காட்டுகிறார். ஐரோப்பாவில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளும், உணவகச் சாப்பாடும் கலாச்சாரமாக மாறிவிட்ட நிலையில், இந்தியாவில் இன்றும் தினந்தோறும் வீடுகளில் புதியதாகச் சமைத்து, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கம் மாறாமல் உள்ளது.

இது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் பிணைப்பைத் தக்கவைக்கவும் உதவுகிறது; இதனுடன் சேர்த்து, இந்தியர்களின் தனிப்பட்ட சுத்தப் பழக்கவழக்கங்களும் மேற்கத்தியர்கள் கண்டிப்பாகப் பழக வேண்டிய ஒன்று என அவர் வலியுறுத்துகிறார்.

இறுதியாக அவர் குறிப்பிட்ட மிக முக்கியமான விஷயம், 'சிறு விஷயங்களிலும் மகிழ்ச்சியைக் காணும் குணம்' ஆகும். ஐரோப்பிய மக்கள் தங்களது வாழ்க்கையை அனுபவிக்கப் பெரும் பணத்தையும் ஆடம்பரமான விடுமுறைகளையும் தேடி ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், இந்திய மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையின் மிகச் சிறிய தருணங்களிலும், எளிய பண்டிகைகளிலும் எவ்விதப் ஆடம்பரமுமின்றி மனதாரக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

கிராமப்புற இந்தியாவின் இந்த எளிய முறையை ஐரோப்பா கற்றுக்கொண்டால் மட்டுமே அங்குள்ள மக்களின் மன அழுத்தம் குறையும் என்று மோனிகா தனது பதிவில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.