`இந்தியாவைப் பார்த்து ஐரோப்பா இதைக் கற்றுக்கொள்ள வேண்டும்' - வெளிநாட்டுப் பெண் ப...
"அடுத்த சூர்யா சார் படங்களுக்கும் இதையே யூஸ் பண்றதாக சொல்றாங்க!" - டிரெண்டிங் டிசைனர் அம்பானி பேட்டி
நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்கள் எப்போதுமே அவர்களுக்கெனப் பிரத்தியேகமாக டைட்டில் கார்டை உருவாக்குவார்கள். இது அந்த நடிகரின் ரசிகர்களுக்குப் பெரும் கொண்டாட்டத்தை அளிக்கக்கூடியதாகவும் மாறும்.
ஒவ்வொரு காலங்களிலும் ஒவ்வொரு வடிவத்தில் இருந்த அந்த டைட்டில் கார்டு இன்று பல்வேறு வடிவங்களை எட்டிவிட்டது. எழுத்து வடிவில் மட்டுமே இருந்த அந்த டைட்டில் கார்டுகள் இன்று அனிமேஷன் டிரெண்டிற்கு மாறிவிட்டன.

சமீபத்தில் 'கருப்பு' படத்தில் இந்த அனிமேஷன் வகையில் டைட்டில் கார்டை டிசைன் செய்திருந்தது பெரியளவில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த டைட்டில் கார்டை டிசைன் செய்தவர் சென்னையைச் சேர்ந்த அம்பானி என்பவர்தான்.
'கருப்பு' மட்டுமல்ல, 'ரெட்ரோ', 'கோட்' என பல நட்சத்திரங்களுக்கும் அனிமேஷன் வடிவத்தில் டைட்டில் கார்டுகளை டிசைன் செய்திருக்கிறார் அம்பானி. 'கருப்பு' படத்துக்கு விஷஸ் சொல்லி அவரிடம் சின்னதாகச் சாட் போட்டோம்.
நம்மிடையே பேசிய அம்பானி, "'கருப்பு' படத்தில், சூர்யா சாருக்கான டைட்டில் கார்டு நான்தான் டிசைன் பண்ணினேன்.
அந்த டைட்டில் கார்டுக்குக் கிடைச்ச வரவேற்பைத் தொடர்ந்து அதைப் படக்குழுவினரும் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் பண்ணியிருக்காங்க. சூர்யா சார் ரசிகர்களுக்கும் 'கருப்பு' திரைப்படம் பயங்கர கொண்டாட்டமானதாக மாறியிருக்கு. சூர்யா சாருக்கு பெஸ்டான டைட்டில் கார்டாகவும் இந்தப் படத்துல அமைஞ்சிருக்கு.

அடுத்து வரக்கூடிய சூர்யா சார் படங்கள்ல இதைத்தான் பயன்படுத்தப்போவதாகவும் சொல்றாங்க. கேட்கிறதுக்கே இதெல்லாம் பயங்கர சந்தோஷமா இருக்கு!" என்றவர், "'ரெட்ரோ' படத்துக்கும் நான்தான் டைட்டில் கார்டு பண்ணியிருந்தேன். அதைவிட இன்னும் பிரம்மாண்டமாக பண்ணணும்கிறதுதான் 'கருப்பு' படத்துக்கான ஐடியாவாக இருந்துச்சு.
அப்படி எனக்குத் தோணின ஐடியாவை ஆர்.ஜே. பாலாஜி சார்கிட்ட சொன்னேன். அவருக்கும் அது பிடிச்சுப் போக நீங்க இப்போ பார்க்கக்கூடிய டைட்டில் கார்டை டிசைன் பண்ணினோம். சூர்யா சாருக்கும் இந்த டைட்டில் கார்டு ரொம்ப பிடிச்சதாகவும் சொன்னாங்க." என்றார்.
தொடர்ந்தவர், "'ரெட்ரோ' படத்தின் டைட்டில் கார்டை ரொம்பக் குறைவான நேரத்துல டிசைன் பண்ணினோம். டைரக்டர் சார், அதுக்கான ஐடியாவை சொல்லிட்டாரு. உடனடியாக வேலைத் தொடங்கி நான்கு நாட்கள்ல அந்த டைட்டில் கார்டை பண்ணி முடிச்சிட்டோம்.
அதுல பயன்படுத்தின 'தி ஒன்'ங்கிற டைட்டிலை 'கருப்பு' படத்துக்கும் யூஸ் பண்ணலாம்ங்கிறது இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி சாரோட ஐடியாதான்." என்றவர், "படத்தின் டைட்டில் கார்டுல எப்போதுமே நிறைய ஆச்சரியங்கள் இருக்கும்.

அதனால, நானும் அதை ரொம்ப வியந்து பார்ப்பேன். நான் சினிமாவுக்குள் வந்த பிறகு டைட்டில் கார்டு டிசைன் பண்றதுலதான் அதிகமாகக் கவனம் செலுத்தவும் தொடங்கினேன்.
அப்படி நான் பண்ணத் தொடங்கின வேலை இன்னைக்குச் சினிமாத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் பிடிக்குதுனு நினைக்கும்போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு." என்றவரிடம், "டைட்டில் கார்டுகளில் எழுத்துகளைத் தாண்டி அனிமேஷனையும் கொண்டு வரலாம் என்கிற டிரெண்டை உருவாக்கியிருக்கிறீர்கள். இதற்குப் பின்னின்று இயங்கிய ஐடியா?" எனக் கேட்டோம்.
அவர், "எப்போதுமே ஒரு டைட்டில் வெறுமனே எழுத்துகள் நிறைஞ்சதாக மட்டுமில்லாம, அனிமேஷன் உள்ளிட்ட விஷயங்களும் இருக்கணும்னு நினைப்பேன்.
இந்த ஐடியாவை முதலில் 'துணிவு' படத்துக்குப் பண்ணி பார்த்தோம். அஜித் சாருடைய ஐகானிக் கேரக்டர்களை வச்சு அந்த கார்டு டிசைன் பண்ணலாம்னு பிளான் பண்ணினோம்.
அதன் பிறகு, 'கோட்' படத்துல பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. விஜய் சாருடைய முக்கியமான கேரக்டர்கள் வச்சு அவருக்கு டைட்டில் கார்டு பண்ணினேன். அது பெரியளவில் எனக்குப் பெயரை வாங்கித் தந்தது.
என்னுடைய கரியர்ல முக்கியமான வொர்க்காகவும் என்னைக்கும் இருக்கும். அது பெரியளவில் ஹிட்டாக, அடுத்தடுத்து எல்லா படத்துக்கும் அதைத் கேட்கத் தொடங்கிட்டாங்க.
அது இப்போ ஒரு டிரெண்டாகவே மாறியிருக்கு. பர்சனலாக எனக்கு இது பெருமையான தருணமாகவும் இருக்கு. சின்ன வயசுல இருந்து நடிகர்களுடைய டைட்டில் கார்டை நான் ரசிச்சுப் பார்ப்பேன்.
அதுக்காகவே ரசிகர்கள் ஆவலோட வெயிட் பண்ணுவாங்க. அவங்களுக்கு அந்த டைட்டில் கார்டு பெரிய கொண்டாட்டத்தைக் கொடுக்கும். இன்னைக்கு நான் செய்யுற ஒரு டைட்டில் கார்டு அனைவரும் விசில் அடிச்சுக் கொண்டாடுற தருணமாக மாறுவது பயங்கர ஹாப்பி!" என உற்சாகமானார்.
மேலும் அவருடைய தொடக்கம் பற்றிப் பகிர்ந்தவர், "நான் முதல்ல மொபைல் பேக் கேஸ் டிசைன் பண்ற கம்பெனில வொர்க் பண்ணிட்டு இருந்தேன். நான் வேலை செய்த நிறுவனம் சி.எஸ்.கே அணிக்கு மெர்சண்டைஸ் பார்ட்னராகவும் இருந்தது.
அதற்காக நான் சி.எஸ்.கே அணிக்கு ஸ்பெஷல் வீடியோ பண்ணினேன். அதுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு சார் குரல் கொடுத்திருந்தார். அங்கிருந்துதான் எனக்குச் சினிமாவுக்கான வாசலும் திறந்துச்சு. இப்போ அடுத்தடுத்து புராஜெக்ட்ஸ் பண்ணிட்டு இருக்கேன்." என முடித்தார் ஹேப்பியாக.!




















