'Keep the body guessing': கோலியின் புறக்கணிப்புக்கு இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத...
`பிராமணர் என்கிற காரணத்திற்காக அறநிலையத்துறை அமைச்சர் பதவியா?' - அமைச்சர் ரமேஷ் விளக்கம்
தமிழக அமைச்சரவையில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ரமேஷ் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பலரும் இதை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்நிலையில், `பிராமணர் என்கிற காரணத்திற்காக அறநிலையத்துறை அமைச்சர் பதவியா?' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரமேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், " சாதிக்கு எதிராக போராடிய பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றவன் நான். சாதி பார்த்து யாருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி எதுவும் வழங்கப்படவில்லை.
மதச்சார்பின்மை தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை. எங்களுக்கு மதமோ, சாதியோ, இனமோ, பணமோ, மொழியோ, பாலினமோ எந்தவித பாகுபாடும் கிடையாது என்பதை உறுதியாக ஏற்றுக்கொண்டு தான் தவெகவில் சேர்ந்திருக்கிறோம்.
அதனால் எதைப் பார்த்தும் தலைவர் விஜய் வாய்ப்பு கொடுக்கவில்லை. சேவை செய்யக்கூடிய மனநிலை இருக்கிறதா? என்பதை பார்த்து தான் வாய்ப்பு வழங்கினார். சாதியை வைத்து பேச வேண்டிய அவசியம் இல்லை.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய எண்ணம் இருப்பதை மட்டும் பாருங்கள். மக்கள் ரமேஷ் என்ற எம்.எல்.ஏ-வுக்காக வாக்களிக்கவில்லை. அனைவரும் எங்கள் தலைவர் விஜய்க்காக தான் வாக்களித்தார்கள். திரையில் அவர் வரும்போது யாரும் சாதி, மதம் அடிப்படையில் பார்க்கவில்லை.

அவர்களை தங்கள் வீட்டில் ஒருவராக தான் பார்த்தார்கள். விஜய் நிறுத்திய வேட்பாளர்களையும், அமைச்சர்களையும் அப்படித்தான் மக்கள் பார்க்கிறார்கள். அவருக்கு இதுபோன்று பிரிவினை பார்க்கக்கூடிய எண்ணம் துளியும் கிடையாது" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
















