"தம்பி நல்லா பேசுனாரு; கேள்விகள் நியாயமா கேட்டாரு.!" - விஜய் பேச்சு குறித்து தமி...
இன்னும் முடிவாகாத சீட்; வேலைகளை ஜரூராகத் தொடங்கி விட்ட மநீம பிரபலங்கள்! - இவர்கள்தான் வேட்பாளர்களா?
திமுக கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தது.
அக்கட்சி சார்பில் பொதுச் செயலாளர் அருணாச்சலம் உட்பட சில நிர்வாகிகள் வந்து திமுக-வின் குழுவோடு பேசினார்கள். பேச்சுவார்த்தைக்கு பிறகு அருணாச்சலம் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது,
''பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்தது. 'திமுக கூட்டணிக்கு ம.நீ.ம எப்படி வலுசேர்க்கும்' என்கிற விபரங்களை தரவுகளோடு ஒப்படைத்திருக்கிறோம். எந்தெந்த தொகுதிகளில் எங்கள் கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது என்கிற விபரங்களையுமே ஆதாரங்களுடன் கொடுத்திருக்கிறோம்.
இது முதல் கட்டப் பேச்சு வார்த்தைதான். எந்தெந்த தொகுதிகள் கேட்டோம் என்பதை இங்கு பகிர முடியாது. கோழி அடைகாப்பது போல் காத்து வருகிறோம். குஞ்சு பொரிக்கும் போது உங்களுக்குத் தெரியத்தான் போகிறது' என ஜாலி மூடில் பேசிவிட்டுச் சென்றார்.
இதற்கு முந்தைய, அதாவது மநீம தனது சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்ட போது, அதன் தேர்தல் அறிக்கையே அவ்வளவு சூடாக இருந்தது.

''அதிமுக, திமுக கட்சிகளின் மோசமான ஆட்சியாலும், தவறான நிதி நிர்வாகத்தாலும் தமிழகத்தின் கடன் சுமை 1 லட்சம் கோடியிலிருந்து, 5.75 லட்சம் கோடியாய் பெருகியது.
இந்த இரு கட்சிகளும் வரி வருமானத்தை மட்டுமே நம்பி, மாநில நிர்வாகத்தை நடத்துவதற்கு கடன் வாங்கித்தான் நடத்த முடியும் என்ற நிலையில் தான் இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இக்கட்சிகளின் தலைவர்களால் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துச் செல்ல முடியாது'' என ஆவேசமாக அறிக்கை தயாரித்திருந்தார் கமல்.
ஐந்தாண்டு கால திமுக ஆட்சி முடிந்த இன்றைய தேதியில், தமிழக அரசின் கடன் அப்படியே இரட்டிப்பாகியிருக்கிறது. இந்தப் பக்கம் கமலுமே அப்படியே தலைகீழாக மாறி இன்று திமுக கூட்டணியில் ஒரு கட்சியாகி விட்டார்.

சரி எல்லோருக்கும் தெரிந்த இந்தக் கதை இப்போது எதற்கு? 'குஞ்சு பொரிக்கும் போது தெரியவரும்' என்கிறார்களே, அந்த மேட்டருக்குச் செல்லலாம்.
'எத்தனை தொகுதிகள் மநீமவுக்குக் கிடைக்கலாம்' என்ற கேள்வியை கட்சியின் உயர்மட்டத்துடன் நெருக்கமான வட்டாரங்களில் காதை தீட்டினோம்.
'ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மௌரியா, கவிஞர் சிநேகன் ரெண்டு பேரு பெயர்களும் பலமா அடிபடுது.
இரண்டு தொகுதிகள் கிடைக்கும்னா இவங்களுக்கு முன்னுரிமை கிடைக்கலாம்னு சொல்றாங்க. இவர்களில் மௌரியாவுக்குக் கிடைத்தால் தலைநகரையொட்டிய ஏதாவது ஒரு தொகுதி இருக்குமாம். சிநேகன் சொந்த ஊர்ப் பக்கம் நிற்பாராம். சின்னம் உதயசூரியன் தான். ரெண்டு பேருமே தேர்தல் வேலைகளை நம்பிக்கையோட தொடங்கிட்டாங்க' என்கின்றனர் அவர்கள்.




















