Gold Rate உயருமா? | Commodity நிபுணர் ஷியாம் சுந்தர் Interview | Vikatan
அடாவடி இலங்கை ராணுவம்; அச்சத்தில் தமிழ் மக்கள்.! - கச்சத்தீவில் இருந்து நேரடி ரிப்போர்ட்
தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்காக முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி முதல் தவெக தலைவர் விஜய் வரை கச்சத்தீவு அரசியலை பேசி வருகிறார்கள். இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா கடந்த பிப்ரவரி 27, 28 தேதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்தத் திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
இந்தாண்டு இந்தியாவில் இருந்து 3,996 பக்தர்கள், இலங்கையில் இருந்து சுமார் 7,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் என மொத்தம் 12,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொதுவாக கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் சராசரியாக 6,000 - 7,000 பக்தர்கள் தான் கலந்து கொள்வார்கள்.

கச்சத்தீவு வரலாற்றிலேயே அதிக பக்தர்கள் கலந்துகொள்வது இதுதான் முதல்முறை. இந்தியாவில் கச்சத்தீவு அரசியல் பரபரக்க தொடங்கியுள்ளதால், இந்தாண்டு திருவிழா மூலம் இலங்கை அழுத்தமான செய்தியை அனுப்பியுள்ளது.
கச்சத்தீவு எல்லையை சுற்றி வழக்கம் போல இலங்கை கொடி நடப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் ராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் படகுகளில் இந்திய நாட்டின் கொடி இருக்கும். இந்த முறை ஒரு படகில் கூட இந்திய கொடி இல்லை.

கச்சத்தீவு திருவிழாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசும் நிதி வழங்குகிறது. அதன்படி இந்தாண்டும் ரூ.1 கோடி நிதி பங்களித்துள்ளது. ஆனாலும் நட்புணர்வின் அடிப்படையில் கூட இந்தியா கொடி எங்கும் இடம் பெறவில்லை.
கச்சத்தீவு இந்தியா வசம் இருந்தபோது அந்தோணியார் திருவிழாவுக்கு பெரும்பாலும் நம் நாட்டு பக்தர்கள் தான் அதிகம் செல்வார்கள். இலங்கை வசம் சென்ற பிறகு இரண்டு நாடுகளில் இருந்தும் சரி சமமாக பக்தர்கள் பங்கேற்று வந்தனர். முதல்முறையாக இலங்கையில் இருந்து அதிக பக்தர்களுக்கு அதிகளவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு சிங்கள பக்தர்களும் அதிகளவு வந்திருந்தனர். அந்தோணியார் ஆலயத்தில் ஆரம்பத்தில் இருந்து தமிழ் மொழியில் மட்டுமே கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டு வந்தது.
கடந்த சில ஆண்டுகளாக சிங்கள மொழியிலும் கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியர்களை உள்ளே அனுமதிப்பதில் தொடங்கி, கச்சத்தீவில் இருந்து புறப்படும் வரை எல்லாவற்றிலும் இலங்கை ராணுவம் ஒடுக்கு முறையை கையாண்டது.

இலங்கை தூதரகத்திடம் அதிகாரபூர்வமாக ஒப்புதல் பெற்று சென்ற பெரும்பாலான செய்தியாளர்களை, தங்களுக்கு வழங்கிய பட்டியலில் உங்கள் பெயர் இல்லை. அனுமதிக்க முடியாது என அவர்களின் ராணுவம் பல மணி நேரம் காக்க வைத்தனர்.
சாமானிய மக்களிடம் அவர்களின் அதிகாரத்தை இன்னும் அதிகமாகவே செலுத்தினார்கள். இந்திய பக்தர்கள் உள்ளே செல்லும்போது தொடங்கி, அங்கிருந்து புறப்படும் வரை பல வகையில் இலங்கை ராணுவத்தின் அடக்குமுறையை எதிர் கொண்டனர். பக்தர்களை முட்டித்தள்ளி, அடிக்கவும் பாய்ந்தனர்.

இதே நிலை நீடித்தால், எதிர்காலத்தில் கச்சத்தீவு வரும் எண்ணத்தையே மக்கள் விட்டுவிடுவார்கள் என்று பலரும் நேரடியாக தங்கள் வேதனைகளை வெளிப்படுத்தி சென்றனர். “கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. யாராலும் மீட்க முடியாது” என இலங்கை அமைச்சர் ராமலிங்கம் திட்டவட்டமாக கூறினார்.
கச்சத்தீவு உரிமையில் இரண்டு நாடுகள் இடையே அரசியல் இருந்தாலும், தங்கள் தொப்புகள் கொடி உறவுகளை சந்தித்து அன்பைப் பரிமாறும் ஒரு நிகழ்வாகவும் இதை இரு நாட்டு பக்தர்கள் பார்கின்றனர். கச்சத்தீவிற்குள் நுழைவதற்கு முன்பே, இலங்கை தமிழ் இளைஞர்கள் சிலர் தங்கள் விசைப்படகில் தவெக கொடியை காண்பித்து ஆரவாரம் செய்தனர்.

“தமிழ்நாடு தேர்தல் நிலவரம் எப்படி, விஜய் சாதிப்பாரா” என இலங்கை தமிழர்களும், “புதிய அதிபர் வந்த பிறகு அமைதி திரும்பியுள்ளதா, நிலைமை எப்படி இருக்கிறது’ என இந்திய தமிழர்களும் நலம் விசாரித்து கொண்டனர்.
கச்சத்தீவில் சந்திக்கும் மக்கள் தங்களின் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு அவ்வபோது பேசவும் செய்வார்கள். திருவிழாவுக்கு வரும் முன்பு இந்தியாவில் தங்களுக்கு தேவையான பொருள்கள் குறித்து இலங்கை தமிழர்களும், இலங்கையில் தங்களுக்கு தேவையானது குறித்து நம்மவர்களும் சொல்வார்கள்.

தமிழ்நாட்டில் தயாரிக்கும் கடலை மிட்டாய் என்றால் இலங்கை தமிழர்களுக்கு உயிர். இந்தியர்கள் என தெரிந்தாலே, “கச்சா அல்வா (கடலை மிட்டாய்) இருக்கா அண்ணா” என்று கேட்பார்கள்.
அதேபோல இங்கிருந்து லுங்கி, உடைகள் ஆகியவற்றை விரும்பி கேட்பார்கள். தமிழ்நாட்டில் இருந்து கச்சத்தீவு செல்லும் பெரும்பாலானோரின் பைகளில் கடலை மிட்டாய் மற்றும் லுங்கிகளை காணலாம். இலங்கையில் தயாரிக்கும் ராணி சோப் மிகவும் பிரபலம்.

அந்த சோப், தேங்காய் எண்ணெய், பிஸ்கட் ஆகியவற்றை அங்கிருந்து இலங்கை தமிழர்கள் எடுத்து வருவார்கள். திருவிழாவில் பண்டமாற்றம் நடக்கும். கூடவே இருவரும் எடுத்து வரும் உணவையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வார்கள். இந்த முறையும் அந்த அன்புப் பரிமாற்றம் நிகழ்ந்தது.
ஏற்கெனவே இரண்டு நாட்டு மீனவர் பிரச்னை ஆறாத ரணமாக உள்ளது. இலங்கை ராணுவத்தின் அடக்குமுறை, இந்தியாவின் புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு நடுவே தமிழ்நாட்டு மீனவர்கள் தினம் தினம் சிக்கி தவிக்கிறார்கள். இலங்கை தமிழ் மீனவர்களின் கோரிக்கைகளையும் பேசி தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிலும் இந்திய பக்தர்களின் வருகையை படிப்படியாக குறைத்து, இலங்கை மக்களை மட்டுமே வைத்து நடத்தும் எண்ணம் இலங்கை அரசுக்கு வந்துள்ளதாகவே நம் பக்தர்கள் அச்சப்படுகிறார்கள்
கச்சத்தீவு வெறும் அரசியல் களம் இல்லை. அது தமிழ் மக்களிடம் பிரிக்க முடியாத பிணைப்பு என்பதை உணர்ந்து 2 நாட்டு அரசுகள் செயல்பட வேண்டும்.




















