அடாவடி இலங்கை ராணுவம்; அச்சத்தில் தமிழ் மக்கள்.! - கச்சத்தீவில் இருந்து நேரடி ரி...
தேர்தல்: ``அவசரமாக நேற்று டெல்லி சென்றது ஏன்?" - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தீவிரமாகிவருகிறது. தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரசாரம் என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து நேற்று மாலை எடப்பாடி பழனிசாமி அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில், இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``டெல்லியிலிருந்து முறையான அழைப்பு வந்ததால்தான், டெல்லி வந்தேன். நேற்று இரவு அமித் ஷாவை சந்தித்து, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் விரிவாக ஆலோசித்தோம். தேர்தலில் இரு கட்சிகளும் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தற்போதுள்ள கூட்டணி மிகவும் சுமூகமாகவும் வலுவாகவும் உள்ளது. சில புதிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவை அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முறைப்படி அறிவிக்கப்படும்.

சசிகலா குறித்தும், அவரின் புதியக் கட்சி குறித்தும், அவர் கூட்டணியில் இணைவாரா என்பது குறித்தும் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. அது தேவையற்ற கேள்வி, அதை இத்துடன் விட்டுவிடுங்கள். ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது, தி.மு.க கூட்டணியில்தான் குழப்பம் நிலவுவது தெரிகிறது. ஆனால், அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எவ்விதக் கவலையுமின்றி மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வரவிருக்கும் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று, அ.தி.மு.க ஆட்சி அமைக்கும்." என்றார்.











