``சஞ்சு சாம்சனின் 97 ரன்களுக்கு இணையானது, துபே அடித்த அந்த இரண்டு பவுண்டரிகளும்!...
நெல்லை: போதையில் கண்ணில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாக வெட்டி கும்பல் - அச்சத்தில் பொதுமக்கள்!
மது போதையில் இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியதோடு சாலையோரம் நின்ற அப்பாவிகளை சரமாரியாக வெட்டியது. இதில் வட மாநிலத் தொழிலாளி உள்ளிட்ட இருவர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயம் அடைந்ததால் பதற்றம் நீடிக்கிறது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் சரகம் , பெரும்பத்து பஜாரில் உள்ள டீக்கடையில் நேற்று (2-ம் தேதி) இரவு 9 மணிக்கு சிலர் பேசிக்கொம்டிருந்தனர். அப்போது மது போதையில் மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் திடீரென பெட்ரோல் குண்டுகளை வீசினர். பின்னர் டீக்கடையில் பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது அரிவாளால் வெட்டத் தொடங்கினர். அதனால் அங்கிருந்தவர்கள் உயிர் தப்புவதற்காக அலறியடித்து ஓடினார்கள்.

அப்போது அங்கிருந்த பெரும்பத்து கிராமம் இந்திரா காலனியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆன ஜான் மார்க் என்ற 49 வயது இளைஞரை அந்தக் கும்பல் கொடூரமாக வெட்டியது. அதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த சமயத்தில் அங்குள்ள செங்கல் சூளையில் பணியாற்றும் வட மாநில தொழிலாளி ஒருவர் சைக்கிளில் வந்துள்ளார் அவரை வழிமறித்த அந்த கும்பல் அவரையும் சரமாரியாக வெட்டியதில் அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பின்னர் களக்காடு சாலை வழியாக அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. அப்போது அந்த வழியில் புளியங்குளம் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து வெளியே வந்த சசிகுமார் என்பவரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பெரும்பத்து கிராமத்தைச் சேர்ந்த நெல்சன் (58), பிரபாகரன், ராமசாமி, வீராங்குளம் பகுதியைச் சேர்ந்த கணேசன் (53) ஆகியோர் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் நல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் உயிருக்குப் போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பெரும்பத்து கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக நல்லி சரக்க டி.ஐ.ஜி-யான சரவணன், நெல்லை மாவட்ட எஸ்.பி-யான பிரசன்ன குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
கொடூர தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை படிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 6 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் நாங்குநேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

















