ECO India : இறால் பண்ணை முதல் Pizza வரை... வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - ...
உட்கட்சிப் புயல்:``மணி சங்கர் அய்யர் தனிப்பட்ட ஆதாயத்திற்காக..." - கே.சி வேணுகோபால்!; என்ன நடந்தது?
கேரள சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்திருக்கும் வார்த்தைப்போர் அரசியல் வட்டத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.
கேரளாவின் இடதுசாரி அரசு ஏற்பாடு செய்திருந்த ‘விஷன் 2031’ மாநாடு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

அந்த மாநாட்டில் உரையாற்றிய மணிசங்கர் அய்யர், ``கேரளாவின் முன்னேற்றம் பாராட்டத்தக்கது. காந்தியின் திசையில் முன்னேறிய ஒரே மாநிலம் கேரளா. இந்த மாநாட்டில் என் கட்சி (காங்கிரஸ்) தோழர்கள் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. கேரளாவில் பினராயி விஜயன்தான் மீண்டும் ஆட்சிக்கு வருவார்." என உரையாற்றினார். அவரின் உரை காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.
கடந்த சில மாதங்களாகவே மணிசங்கர் அய்யர் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. சசி தரூர், பவன் கேரா உள்ளிட்ட மூத்த தலைவர்களை கடுமையாக விமர்சித்து வரும் அவர், நேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபாலை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அவர் அளித்திருந்த பேட்டியில், ``காங்கிரஸ் கட்சி வெளியுறவு அமைச்சராக்கவில்லை என்பதற்காக, இப்போது மோடியின் வெளியுறவு அமைச்சராக முயலும் சசி தரூரை விட கொள்கையற்ற, பதவியைத் தேடுபவரை நான் பார்த்ததில்லை. காங்கிரஸ் கட்சி கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது, சந்தர்ப்பவாதத்தின் அடிப்படையில் அல்ல.

கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா ஒரு பொம்மை மட்டுமே. ஜெய்ராம் ரமேஷ் என்ன சொல்கிறாரோ அதைச் சொல்லும் கிளிப்பிள்ளை. கே.சி. வேணுகோபால் போன்ற ஒரு ரவுடியை சர்தார் படேல் அளவிற்கு உயர்த்தும் கட்சியின் நிலையை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? நான் இதை மட்டுமே சொல்ல விரும்புகிறேன். நான் ஒரு காந்தியவாதி, நேருயவாதி, ராஜீவியவாதி. ஆனால் நான் ஒரு 'ராகுலியன்' அல்ல.
ராகுல் காந்தி நான் கட்சியில் இருப்பதை மறந்துவிட்டார் போலும். கேரளாவின் எதிர்க்கட்சித் தலைவர் சதீசன்தான் முதலமைச்சராவார் என்று எனக்கு வாக்குறுதி அளித்தால், பினராயி தான் அடுத்த முதல்வர் என்ற எனது கருத்தை வாபஸ் பெறத் தயாராக இருக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் மதச்சார்பற்ற சோசலிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியுடையவர்கள் நானும் அவரும் மட்டும்தான். மதச்சார்பின்மை மற்றும் சோசலிசத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்வதில்லை" எனத் தெரிவித்தார்.

மணி சங்கர் அய்யரின் இந்தக் கருத்துக்கள் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த பவன் கேரா, ``மணி சங்கர் அய்யருக்கு கடந்த சில ஆண்டுகளாக காங்கிரசுடன் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் தெரிவித்தவை அவரின் தனிப்பட்டக் கருத்து." என்றார்.
கே.சி வேணுகோபால், ``மணிசங்கர் அய்யர் கடந்த சில ஆண்டுகளாகக் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இல்லை. அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாத சூழலில், திடீரென வந்து இடதுசாரிகளுக்கு ஆதரவாகப் பேசுவது அவரது தனிப்பட்ட ஆதாயத்திற்காக இருக்கலாம்.
காங்கிரஸ் கட்சியோ அல்லது ஐக்கிய ஜனநாயக முன்னணியோ (UDF) அவரது பேச்சை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. கேரள மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. மணிசங்கர் அய்யரின் தனிப்பட்டக் கருத்துகள் கட்சியின் நிலைப்பாட்டை பாதிக்காது." என்றார்.












