வயநாடு நிலச்சரிவு: உயரும் உயிரிழப்பு எண்ணிக்கை; மாயமானவர்களை மண்ணுக்குள் தேடும் ...
`எனக்கு தனியாக செய்ய துணிச்சல் இல்லை... நீயும் வா!'- புனே தொழிலதிபர் கொலையில் வெளியான `பகீர்' தகவல்
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது நிச்சயிக்கப்பட்ட மனைவி ஷியா கோயலுக்கு, ஏற்கெனவே அவரது காதலன் சேத்தன் சவுத்ரி என்ற நபருடன் ரகசியத் திருமணம் நடந்துள்ளது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஷியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சவுத்ரி ஆகிய இருவரும், தங்களது குடும்பத்தினருக்குத் தெரியாமல் நான்கு மாதங்களுக்கு முன்பே ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 18ம் தேதியன்று புனே லோஹாகட் கோட்டையிலிருந்து தள்ளிவிட்டுக் கொல்லப்பட்ட கேதன் அகர்வால் கொலை வழக்கில் இந்த அதிர்ச்சியூட்டும் டிஜிட்டல் ஆதாரம் கிடைத்துள்ளது. ஷியாவும், சேத்தனும் சேர்ந்து கேதன் அகர்வாலை மலை உச்சியில் இருந்து 400 அடி பள்ளத்தில் தள்ளி கொலை செய்தனர். இதில் கைது செய்யப்பட்டுள்ள இருவரது மொபைல் போன்களில் இருந்து அழிக்கப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்களை மீட்டெடுத்த புனே போலீஸார், இந்த ரகசியத் திருமணத்தை அதிகாரபூர்வமாக கண்டுபிடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண முக்கோணக் காதலாக தோன்றினாலும், போலீஸார் நடத்திய சைபர் தடயவியல் விசாரணையில் வெளிவந்த டிஜிட்டல் சான்றுகள் ஒட்டுமொத்த விசாரணைக் குழுவையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களின் போன்களிலிருந்து கடந்த இரண்டு மாத காலத்துக்கான போன் கால்கள், இருப்பிடத் தரவுகள் (Location Data), சாட்டிங்குகள் மற்றும் இணைய தேடல் வரலாறு ஆகியவற்றை போலீஸார் மிகத் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
இந்த டிஜிட்டல் தரவுகளை ஆய்வு செய்தபோதுதான், ஷியாவும் சேத்தனும் தங்களது குடும்பத்தினருக்குப் பயந்து, நான்கு மாதங்களுக்கு முன்பே ரகசியமாகத் திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் உண்மை போலீஸாருக்குத் தெரியவந்தது.
திருமணத்திற்குப் பிறகு கொலை சதி
இந்த ரகசியத் திருமணத்திற்குப் பிறகுதான், தங்களது ரகசிய வாழ்க்கை வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, கேதனைத் தீர்த்துக்கட்ட ஷியாவும் சேத்தனும் சதித்திட்டம் தீட்டியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கேதன் அகர்வாலைக் கொல்வதற்கான முதல் முயற்சி ஜூன் 14 அன்றே செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அன்று ஷியா கோயல், கேதனை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், கடைசி நிமிடத்தில் ஷியாவிற்குத் துணிச்சல் இல்லாததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்தத் தோல்விக்குப் பிறகு, சியா உடனடியாகக் காதலர் சேத்தன் சவுத்ரிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், “எனக்கு தனியாக இதைச் செய்யத் துணிச்சல் இல்லை, நீயும் வா — நாம் இருவரும் சேர்ந்து அவனைப் பள்ளத்தில் தள்ளிவிடுவோம்” என்று அவர் அனுப்பிய மெசேஜை, சைபர் போலீசார் மீட்டெடுத்துள்ளனர்.
போலீஸார் நடத்திய டிஜிட்டல் தடயவியல் ஆய்வில், ஷியா கோயல் மற்றும் அவரது காதலர் சேந்தன் சவுத்ரி ஆகியோர் இந்தக் கொடூரக் கொலையைச் செய்வதற்கு முன்பாக, இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மற்றொரு கொலை வழக்கைப் பற்றி மிகத் தீவிரமாக இணையத்தில் ஆராய்ச்சி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோனம் ரகுவன்சி தனது கணவன் ராஜாவை மேகாலயா அழைத்துச் சென்று கொலை செய்த விவகாரத்தில் சோனம் செய்த தவறுகளை தாங்கள் செய்து விடக் கூடாது என்பதற்காக அக்கொலை வழக்கை முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். சோனம் திருமணத்திற்குப் பிறகு கணவனை கொலை செய்தார். ஆனால் ஷியா திருமணத்திற்கு முன்பே வருங்கால கணவனை கொலை செய்துள்ளார்.
















