"உனக்கு என்ன நஷ்டம்? அவர் என் கணவர்" - நடிகர் கோவிந்தா குறித்த கேள்விக்கு மனைவி ...
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. காலை இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகளுடனும், பின்னர் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்த ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எம். சுகுமார், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்து செயல்பட்டத்காலும், தவெக அரசிற்கு ஆதரவாக வாக்களித்ததாலும் அவரிடமிருந்து மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக சுமைதாங்கி ஏழுமலை புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரவி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது இடத்தில் லோகநாதன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட இரு மாவட்ட செயலாளர்களும் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட செயலாளராக இருந்து வந்த முன்னாள் அமைச்சரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.சி. வீரமணியிடமிருந்தும் மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக டாக்டர் பசுபதி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், மாவட்ட செயலாளர் பதவிக்கு மாற்றாக எஸ்.எம். சுகுமாருக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியும், கே.சி. வீரமணிக்கு அமைப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. எனினும், இந்த பொறுப்புகளை ஏற்க இருவரும் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எம். சுகுமார் மற்றும் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. கே.சி. வீரமணி ஆகியோர் பங்கேற்கவில்லை. இதில் கே.சி. வீரமணி தற்போது அமெரிக்கா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செயலாளர் பதவி மாற்றத்தைத் தொடர்ந்து இருவரும் கூட்டத்தை புறக்கணித்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.











