விஜய்க்காக அலகு குத்தி, கிரேனில் தொங்கி சாகசம்; தவெக தொண்டர் கைது; இன்ஸ்பெக்டரைக...
"என்னைச் சுட வந்தவரைச் சுட்டுக்கொன்றேன்" - நேர்காணலில் மாஜி பாஜக எம்பி பிரிஜ் பூஷன் ஒப்புதல்
இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பிரிஜ்பூஷன் சிங். பா.ஜ.க. முன்னாள் எம்.பியான இவர் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோது வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்காக மல்யுத்த வீராங்கனைகள் இணைந்து போராட்டமும் நடத்தினர். ஆனாலும் இறுதிவரை பிரிஜ்பூஷன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்யவே இல்லை. அவர் தனது பதவிக்காலம் முடிந்த பிறகுதான் பதவி விலகினார். பிரிஜ்பூஷனிடம் பத்திரிகையாளர் ஒருவர் நேர்காணல் நடத்தினார்.
அப்போது உத்தரப்பிரதேசத்தில் நிலவும் கேங்க்வார் குறித்தும், இதில் நீங்கள் யாரையாவது கொலை செய்து இருக்கிறீர்களா என்றும் நிருபர் கேட்டதற்கு, ''என்னுடைய நண்பரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கியால் சுட்ட நபர் தனது துப்பாக்கியை என்னை நோக்கித் திரும்பியவுடன், நான் அவரைத் திருப்பிச் சுட்டேன்.

நீங்கள் அதை தற்காப்பு அல்லது பழிவாங்கல் என்று கூறலாம். ஆனால் நான் ஒருவரைக் கொன்றுவிட்டேன்" என்று பிரிஜ் பூஷண் சிங் கூறினார்.
உடனே கொலைக்காக தண்டனை அனுபவித்தீர்களா அல்லது வருத்தம் தெரிவித்தீர்களா என்று கேட்டதற்கு, எதையும் செய்யவில்லை என்றார். அதோடு, "ஒருவர் உங்களைத் தாக்கினால் நீங்கள் திரும்பத் தாக்கக்கூடாதா? தன்னை அறைந்தால் தானும் அதே வழியில் பதிலடி கொடுப்பேன். கொலைக்காக நான் வருத்தப்படவில்லை" என்றும் தெரிவித்தார்.
பிரிஜ்பூஷன் சிங்கின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிரிஜ்பூஷன் சிங் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட பா.ஜ.கவிடம் சீட் கேட்டார். ஆனால் அவருக்குப் பதில் அவரது மகன் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க வாய்ப்பு கொடுத்தது.



















