மொத்தம் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - தமிழ்நாட்டில் வெளியான இறுதி வாக்காளர...
VIT CHENNAI : “எனக்கு ரோல்மாடல் என்னுடைய அம்மா தான்' - Vibrance 2026-ல் நடிகை ச்ரிலீலா
வி.ஐ.டி சென்னையில் `வைப்ரன்ஸ் 2026' என்ற சர்வதேச மாணவ மாணவியர் கலைத் திருவிழாவின் நிறைவு விழா 21.02.2026 அன்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார், விஐடி துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தார். பிரபல திரைப்பட நடிகையும் மருத்துவருமான ஸ்ரீலீலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நடிகை ஸ்ரீலீலா பேசும்போது, ”கல்லூரி வாழ்க்கை அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. அதை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். மாணவர்கள் தங்களது இலக்குகளில் தெளிவாக இருத்தல் வேண்டும். மாணவர்கள் வாழ்வில் முன்னேற ஒவ்வொரு வருடமும், அல்லது குறைந்தபட்சம் கல்லூரியை விட்டு வெளியேறும்போதாவது என்னென்ன விஷயங்களை செய்ய விரும்புகிறோம் என்ற பட்டியலை தயாரித்து அதன் படி செயல்பட வேண்டும்” என்று கூறினார்.
பின்னர் மாணவர்கள் எழுப்பிய கேள்விளுக்கு ஸ்ரீலீலா பதிலளித்து பேசுகையில், “எனக்கு ரோல்மாடாலாக இருப்பவர் என்னுடைய அம்மா தான். மாணவர்களாகிய நீங்களும் உங்களுடைய பெற்றோரை ரோல்மாடாலாக ஏற்று கொள்ள வேண்டும். நமக்கு உத்வேகம் அளிக்கும் முன்மாதிரிகளை வீட்டில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

வாழ்வில் வெற்றி பெற நேர மேலாண்மையில் ஒழுக்கமாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். நான் சினிமா துறையில் இருந்தாலும் உறுதியாக கூறுகிறேன் அனைவரின் வாழ்விலும் மிகவும் முக்கியமானது கல்வி ஒன்று தான். எனவே, மாணவர்கள் அனைவரும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து நன்றாக படிக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்று மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தமிழில் சிவகார்த்திகேயனை பிடிக்கும் என்று ஸ்ரீலீலா கூறினார்.
விழாவில், விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் பேசுகையில், “ இந்த ஆண்டு விஐடி சென்னை வைப்ரன்ஸ் விழாவின் ஒரு அங்கமாக 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்ற டெண்டு கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது, அதில் மீண்டும் திரைப்படம் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போதைய இளம் தலைமுறையினரும் டெண்டு கொட்டகையை பார்த்து ரசித்துள்ளனர். விஐடி கல்வியில் மட்டுமல்ல மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதிலும் முன்னிலை வகிப்பதை இதுபோன்ற விழாக்கள் நிருபிக்கின்றன. மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து உள்நாட்டில் மட்டுமின்றி உலக அளவில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு சிறப்பான வேலைவாய்ப்பை வழங்கி உயர்ந்த நிலையை அடைய விஐடி உதவி வருவது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
வைப்ரன்ஸ் 2026 கலை விழாவில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நடிகை ஸ்ரீலீலா, விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் மற்றும் விஐடி துணைத்தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் கோப்பையை வழங்கி கவுரவித்தனர்.
நிறைவு விழாவில், விஐடி சென்னையின் இணை துணை வேந்தர் முனைவர் டி.தியாகராஜன், இயக்குநர் முனைவர் சத்தியநாராயணன், கூடுதல் பதிவாளர் முனைவர் பி.கே.மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வைப்ரன்ஸ் திருவிழானை பளுதூக்கும் வீராங்கானை டாக்டர் ஆர்த்தி அருண் 18.02.2026 அன்று தொடங்கி வைத்தார். பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் பிரேம்ஜி உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகள் 19.02.2026, 20.02.2026 மற்றும் 21.02.2026 ஆகிய நாட்களில் சிறப்பாக நடந்தது. 200-க்கும் மேற்பட்ட கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது. 4 நாட்கள் நடந்த வைப்ரன்ஸ் விழாவில் இலங்கை, மலேசியா, பிரேசில், ஜப்பான், சிங்கப்பூர், தான்சானியா, கம்போடியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்களும், இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் 30,000-த்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
வைப்ரன்ஸ் திருவிழாவில், பழங்காலத்தை நினைவு கூறும் வகையில் டெண்டு கொட்டகை தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில், தமிழ், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களை மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















