எஸ்.டி.எஸ், பாக்யராஜ் முதல் பண்ருட்டியார் வரை; அடேங்கப்பா! அதிமுக-விலிருந்து எத்...
20 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி; உடன்குடி அனல்மின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடக்கம்!
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்திற்கு கடந்த 2008-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது. முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், ஆட்சி மாற்றத்தினால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2012-ல் உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்தை தமிழக அரசு மேற்கொள்ளும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனையடுத்து இரு அலகுகளைக் கொண்ட 800 மெகாவாட் தமிழ்நாடு மின் தொடர் கழகம், கடந்த 27.03.2012-ல் ஒப்புதல் அளித்தது.

ஆனால், 01.02.2023-ம் தேதி 800 மெகாவாட்டிற்குப் பதிலாக 680 மெகாவாட் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. தொடர்ந்து அனல் நிலையம் அமைக்கும் பணி, கடற்கரையொட்டி நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. அனல் மின் நிலைய வளாகத்தில் கட்டடங்கள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகள் இரவு பகலாக நடந்து வந்த நிலையில், அதுவும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
கடந்த சில மாதங்களாக அனல் மின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புகை வெளியேற்றும் குழாயிலிருந்து புகை வெளியேறி வருகிறது. தற்போது முழுமையாக பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக புகை வெளியேறும் இடத்தில் அதிக அளவு புகை வெளியேறி வருகிறது. அது மட்டுமல்லாமல், இந்த உடன்குடி அனல் மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி இறக்குமதி பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த உடன்குடி அனல் மேல் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி இறக்குமதி செய்வதற்காக இந்தோனேஷியா நாட்டிலிருந்து சரக்கு கப்பல் மூலம் 20 ஆயிரம் டன் நிலக்கரி தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கிருந்து கடல் வழியாக உடன்குடி அனல்மின் நிலையத்திற்காக அமைக்கப்பட்டுள்ள நிலக்கரி இறக்குதளத்திற்கு சரக்கு கப்பல் வருகை தந்துள்ளது. இந்த சரக்கு கப்பலில் இருந்து நிலக்கரிகள் இறங்குதளத்தில் இறக்குமதி செய்யப்பட்டு கன்வேயர் பெல்ட்டுகள் மூலம் அனல் மின் நிலையத்திற்கு கொண்டு வருவதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.



















