`திமுக கூட்டணி குறித்த கேள்விகள்; செலவுக்கு.?' - தே.மு.தி.க நேர்காணலில் பிரேமலதா...
`கேட்ட மூன்றில் இரண்டு அவுட்; அந்த ஒன்று?' - ஶ்ரீதர் வாண்டையார் போடும் கணக்கு திமுக-விடம் பலிக்குமா?
திமுக கூட்டணியில் சமீபத்தில் தேமுதிக இணைந்தது தமிழக அரசியல் வட்டத்தில் பேசு பொருளாக அமைந்தது. கூட்டணி கட்சிகளிடம் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை வேகமாக நடத்தி வருகிறது திமுக தலைமை.
மூவேந்தர் முன்னேற்ற கழகம் திமுக கூட்டணியில் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையும் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஒரு தொகுதியில் ஶ்ரீதர் வாண்டையார் போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இது குறித்து விபரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், `மூவேந்தர் முன்னேற்ற கழகம் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் ஶ்ரீதர் வாண்டையார் சுமார் 75,000 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகனிடம் தோல்வியை தழுவினார்.
எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள, நாங்கள் கேட்ட தொகுதியை அதிமுக எங்களுக்கு ஒதுக்கவில்லை. நாங்கள் விரும்பிய தொகுதியை கொடுத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்னு அப்போது மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினரால் பேசப்பட்டது.
கடந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியை தான் அதிமுக-விடம் ஶ்ரீதர் வாண்டையார் தரப்பில் கேட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் கும்பகோணம் ஒதுக்கினர். இதையடுத்து அதிமுகவுடன் மனகசப்பு ஏற்பட்டு கூட்டணியில் இருந்து விலகினர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தனர்.
தற்போது அந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில், `ஶ்ரீதர் வாண்டையார் நம் குடும்பத்தில் ஒருத்தர் என தாத்தாவும், அப்பாவும் சொல்வார்கள். அவர் குடும்பத்தில் மட்டுமல்ல கூட்டணியிலும் ஒருவர். எங்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்' என ஶ்ரீதர் வாண்டையார் குறித்து துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
சமீபத்தில் ஒன்றிய அரசு பட்ஜெட் குறித்து கண்டன ஆர்பாட்டத்தை நடத்தியது திமுக. இதில் மயிலாடுதுறையில் கலந்து கொண்ட ஶ்ரீதர் வாண்டையார், `ஒன்றிய அரசு பல நெருக்கடிகள் கொடுத்தும் நல்லாட்சி செய்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்காக அவர் இரவு பகல் பாராமல் உழைக்கிறார். தமிழகத்தில் அவர் கால் படாத இடங்களே இல்லை'னு ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார்.

இப்படியாக ஒத்த எண்ணத்தில் இந்த கூட்டணி தொடரும் நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாண்டையார் மூன்று தொகுதிகளை குறிப்பிட்டு அதில் ஒரு தொகுதியை கொடுங்கள்னு கேட்டதாக சொல்கிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, தஞ்சாவூர், திருவையாறு ஆகிய மூன்று தொகுதிகளை குறிப்பிட்டு கேட்டுள்ளார். இதில் முக்குலத்தோர் வாக்குகள் நிறைந்த தொகுதி என்பதால் ஶ்ரீதர் வாண்டையாரின் முதல் சாய்ஸாக ஒரத்தநாடு இருந்தது. முன்கூட்டியே திட்டமிட்டு தொகுதிக்குள் சில நிகழ்ச்சிகளையும் நடத்தினார்.
இப்படியான சூழலில் வைத்திலிங்கம் திமுக-வுக்குள் என்ட்ரி கொடுத்ததால் ஒரத்தநாடு அவருக்கு என்பது உறுதியாகி விட்டது. இந்நிலையில் ஶ்ரீதர் வாண்டையார் தஞ்சாவூர், திருவையாறு என இரு தொகுதிகளில் ஒன்றை கேட்பதாகவும், குறிப்பாக தஞ்சாவூர் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என பேசியதாக சொல்கிறார்கள்.
திருவையாறு மத்திய மாவட்ட செயலாளரான, சிட்டிங் எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் போட்டியிடுவது உறுதி என்பதால் அதை கொடுப்பதற்கு வாய்ப்பில்லாத சூழல். அவர்கள் விரும்பியதில் மிச்சமிருப்பது தஞ்சாவூர் தொகுதி. தஞ்சாவூரில் ஶ்ரீதர் வாண்டையாரின் சொந்தங்கள் நிறைந்திருக்கின்றனர். தனக்கு செல்வாக்கு இருப்பதாகவும் நினைப்பதால் தஞ்சாவூர் தொகுதியில் தான் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என கருதுகிறார்.

2026ல் ஶ்ரீதர் வாண்டையாரை சட்டமன்றத்திற்குள் அனுப்ப வேண்டும் என அக்கட்சியினர் நினைக்கிறார்கள். அதற்கான வேலையை இப்போதே தொடங்கி விட்டனர். திமுக தலைமை அவருக்கு தஞ்சாவூர் தொகுதியை ஒதுக்குகிறதா அல்லது வேறு தொகுதி தருகிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நாம் வலிமையாக இருக்கிறோம் இந்த முறை நாம் வெற்றி பெறுவது உறுதினு நம்பிக்கையுடன் பேசி வருகிறார் ஶ்ரீதர் வாண்டையார்,. தஞ்சாவூர் தொகுதியியை மனதில் வைத்து அவரது மூவ் இருப்பதாக தெரிகிறது" என்றனர்.















