செய்திகள் :

எம்.ஆர்.விஜயபாஸ்கர்: 'MLA பதவி ராஜினாமா' - `நாங்க வெயிட்டிங்' எனக் கொண்டாடிய கரூர் அ.தி.மு.க-வினர்!

post image

தமிழக சட்டசபையில் புதியதாக அமைந்த த.வெ.க அரசு ஆட்சி அமைவதற்கு அ.தி.மு.க-வை சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு அளித்தனர். இதனை தொடர்ந்து, த.வெ.க-வுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 5 பேர் அடுத்து ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், கடந்த மே 25 - ல் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா, மே 26 - ல் , அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, ஜூன் 16 - ம் தேதி விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

m.r.vijayabaskar

இப்படி, தமிழக சட்டசபையில் ஆதரவளித்த அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில், ஆறாவதாக கரூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்து உள்ளார். இதனை தொடர்ந்து, தமிழக சட்டசபையில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 41 ஆக குறைந்துள்ளது.

இதனிடையே, இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் பட்டாசு வெடித்து, தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அப்போது, அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி கரிகாலன் என்பவர், செய்தியாளர்களிடம்,

"எம்ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் கவுன்சிலராக கூட போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் அ.தி.மு.க-வில் தான் உள்ளனர்" என்றார்.

இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் , அ.தி.மு.க கரூர் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன்,

"அ.தி.மு.க கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு சென்றவர்கள் யாரும் அரசியலில் நீடித்ததில்லை. எம்.ஆர்.விஜயபாஸ்கர் அ.தி.மு.க தொண்டர்களின் மனநிலை அறியாமல், தனிச்சையாக செயல்பட்டார். தன் பெயரில் தொண்டு நிறுவனம் தொடங்கியது முதல் மாவட்ட செயலாளர் பதவி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவி என அனைத்தையும் அ.தி.மு.க எனும் கட்சி மூலம் அனுபவித்து வந்தார்.

அதேபோல் அவர் , ஐந்தாண்டுகள் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது, அ.தி.மு.க எனும் கட்சி தேவைப்பட்டது. ஆனால், இன்று கரூர் அ.தி.மு.க கட்சி தொண்டர்கள் உழைப்பில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுவிட்டு, இப்போது ஆளும் கட்சியின் குதிரை பேரத்திற்கு துணையாக, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

kamalakkannan

அவர், இதே தொகுதியில் மீண்டும் கரூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கரூர் சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டால், அ.தி.மு.க தொண்டர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். த.வெ.க தலைவர் முதலமைச்சர் விஜய், சினிமா வசனத்தில் கூறுவதைப் போல, 'ஐயம் வெயிட்டிங், நாங்களும் வெயிட்டிங்'" என்றார்.

இதனைத் தொடர்ந்து, கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையில் உள்ள அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கடந்த ஜூன் 3-ம் தேதி திறக்கப்பட்டது முதல் தினந்தோறும் அலுவலகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் நேற்று காலை முதலே திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருந்தது. கரூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சட்டமன்ற உறுப்பினர் பதவி ராஜினாமா செய்துள்ளதால் விரைவில் கரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாராகியுள்ளது.

த.வெ.க கரூர் மேற்கு மாவட்டச் செயலாளராக உள்ள வி.பி.மதியழகன், த.வெ.க கூட்ட நெரிசல் சிபிஐ வழக்கில் அதிகம் பேசப்பட்டவர் என்பதால் அவருக்குத்தான் கரூர் இடைத்தேர்தலில் போட்டியிட தவெக தலைமை வாய்ப்பு வழங்கும் என சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மறுபுறம் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட தி.மு.க தொண்டர்கள் இம்முறை எப்படியாவது மீண்டும் கரூர் சட்டமன்ற தொகுதியை கைப்பற்றும் வேகத்தில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் த.வெ.க-வில் இணையும்பட்சத்தில் அவரும் சீட் கேட்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், த.வெ.க தலைமை யாருக்கு சீட் தரும் என்பது தெரியவில்லை. இதனால், கரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் பொழுது கடுமையான போட்டி இம்முறை இருக்கும் என கூறப்படுகிறது.

இதனிடையே, த.வெ.க கட்சியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதாரவாளர்களுடன் வரும் 2 - ம் தேதி இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. கரூர் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம், கரூர் மாவட்ட அரசியலில் மட்டத்தில் அனலை கிளப்பியிருக்கிறது.

"மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி பேச்சை காங்., கேட்டிருந்தால் இந்நேரம்..." - விஸ்வநாதன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (ஜூன். 29) பதவி ஏற்றுக்கொண்டார். இந்தப் பதவியேற்பு விழாவில் கா... மேலும் பார்க்க

`கமிஷன் மோதலால் கட்சிக்கு அவப்பெயர்’ - அறிவாலயத்தில் `மன்னிப்பு’ கேட்ட வேலூர் மேயர், துணை மேயர்!

வேலூர் மாநகராட்சியில் மேயர், துணை மேயர், மண்டலக்குழுத் தலைவர்கள் என அனைவருமே தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள்தான். ஆனாலும் இவர்களுக்குள், `வேலூர் தி.மு.க Vs காட்பாடி தி.மு.க’ என்ற பாகுபாடு பகையாகப் பற்றியெர... மேலும் பார்க்க

ஆந்திர மாணவி தவறவிட்ட சான்றிதழ்கள்; உதவிய ஏஐ; நூறு பஸ்களில் சோதனை நடத்தி கண்டுபிடித்த கேரள போலீஸ்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜாஷ்னவி என்ற 17 வயது மாணவி, எல்.எல்.பி நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக தனது தாய் லலிதா ராணியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரளாவுக்குச் சென்றிருந்தார். அன்று காலை 10:30 மணிக்கு கா... மேலும் பார்க்க

"பண மதிப்பிழப்பு நாயகர், நிதி அமைச்சரானால் இந்தியப் பொருளாதாரம் என்ன ஆகுமோ?" - ரவிக்குமார் MP

மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியனின் ராஜினாமாவிற்குப் பிறகு, மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து பேச்சுகள் எழுந்துகொண்டே உள்ளன. சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஜார்ஜ் குரியன். இவரிடம் மீன்வள... மேலும் பார்க்க

"இடைத்தேர்தலில் ஸ்​டா​லின் நிற்பதற்​கு மறுப்பு தெரிவிக்க விரும்பவில்லை" - மு.வீரபாண்டியன் | Live Updates

ஸ்டாலின் பேச்சுக்கு மு.வீரபாண்டியன் பதில்நேற்று முன்தினம் (ஜூன் 28, 2026) திமுக தலைவர் ஸ்டாலின், 'தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என்று பேசியிருந்தார். ஸ்டாலின் பேச்சுக்குப்... மேலும் பார்க்க