சூடான சமோசா வாங்க ரயிலை நடுவழியில் நிறுத்திய பைலட் ? - வைரலாகும் வீடியோவின் பின்...
'எம்.ஜி.ஆர் கால தங்க, வெள்ளி நிற ஜரிகை; வேலைவாய்ப்பு.!' - தமிழக அரசின் ஆணையால் நெகிழும் நெசவாளர்கள்
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் இலவச வேட்டி-சேலை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசும் இந்தத் திட்டத்தைத் தொடர்கிறது. கடந்த வாரம் இதற்கான அரசாணையை வெளியிடப்பட்டிருந்தது.

தமிழக அரசின் அரசாணை
அதன்படி 2027 பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய தரத்தில் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளன. வெள்ளி மற்றும் தங்க நிற ஜரிகை பார்டர் உடன் 1,77,64,000 சேலைகளும் சலவை செய்யப்பட்ட உயர்தரத்துடன் 1,77,22000 புதிய வடிவமைப்பில் வேஷ்டிகளும் முழுமையாக உற்பத்தி செய்யும் வகையில் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்காக 642 கோடி ரூபாய் திட்டத்தில் முதற்கட்டமாக 300 கோடி ரூபாய் முன்பணமாக ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்திருந்தது.
தவெக அரசின் இந்த அரசாணையை வரவேற்று தமிழ்நாடு நெசவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.
நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு
இந்நிலையில் தமிழ்நாடு நெசவாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பா.கந்தவேலை தொடர்புகொண்டு பேசினோம்.
நம்மிடம் பேசிய அவர், " எம்.ஜி.ஆர் காலத்தில் கொண்டுவரப்பட்ட இலவச வேட்டி-சேலை திட்டத்தின் முதன்மை நோக்கம், மக்களுக்கு வேட்டி-சேலை வழங்குவதை விட நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதுதான்.
கலைஞர் காலத்திலும் இது சரியாகவே தொடர்ந்தது. பின்னர் 2012-ல் அம்மா (ஜெயலலிதா) ஆட்சியில் துணியின் தரம் 'பாலிகாட்டன்' மெட்டீரியலுக்கு மாற்றப்பட்டது.

கடந்த ஆட்சியில் தேக்கமடைந்த 40 லட்சம் சேலைகள்
ஆனால், காலப்போக்கில் மக்கள் இந்த பாலிஸ்டர் துணிகளை உடுத்த விரும்புவதில்லை. இதன் காரணமாக, கடந்த 2025 பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட்ட இலவச வேட்டி-சேலைகளில் சுமார் 40 லட்சம் சேலைகளை மக்கள் வாங்காமல், அவை கூட்டுறவுச் சங்கங்களில் தேக்கமடைந்தன. துணிகள் தேக்கமடைந்ததால் கடந்த ஆட்சியில் நெசவாளர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்தது.
ஆனால், தற்போதைய அரசு 2027 சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த இலவச வேட்டி-சேலையை அணிந்து வரும் அளவுக்குத் தரம் உயர்த்தப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.
நிரந்தர வேலைவாய்ப்பு
இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வரி வருவாய் என மூன்றும் கிடைக்கிறது. தற்போது வேட்டிக்கான நூல் உற்பத்தி அரசு கூட்டுறவு நூற்பாலைகளிலேயே செய்யப்படுவதால், வருடம் முழுவதும் நெசவாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கு முன்பு பாலிஸ்டர் நூல் வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டதால் உள்ளூர் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது வேட்டி மற்றும் சேலைக்குத் தேவையான சுமார் 5,400 மெட்ரிக் டன் பாலிஸ்டர் காட்டன் நூல் உற்பத்தியை, தமிழ்நாட்டின் 6 அரசு கூட்டுறவு நூற்பாலைகளிலேயே முழுமையாக மேற்கொள்கின்றனர். இதன் மூலம் அந்த நூற்பாலைகளுக்கு வருடம் முழுவதுமே நிரந்தர வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

மிகப்பெரிய வேலைவாய்ப்பு
இத்திட்டத்தின் கீழ் வேட்டிக்கு 3.5 கோடி மீட்டர், சேலைக்கு 9.75 கோடி மீட்டர் என மொத்தம் கிட்டத்தட்ட 12 கோடி மீட்டர் துணி நெசவு செய்யப்பட வேண்டும். இந்த உற்பத்தியை ஈரோடு, திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் மாவட்ட நெசவாளர்களே முதன்மையாகச் செய்கின்றனர், இதில் ஈரோட்டின் பங்களிப்பு மிக அதிகம்.
துணிகளை வெளுப்பதற்கான (Bleaching) பிராசஸிங் மில் தமிழ்நாட்டிலேயே ஈரோட்டில் மட்டும்தான் அரசு சார்பில் உள்ளது. அங்கு நாளொன்றுக்கு 1.5 லட்சம் மீட்டர் துணியை பிளீச் செய்ய முடியும் என்பதால், இந்த 5 மாத கால திட்டத்தில் அங்கேயும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.
எம்.ஜி.ஆர் காலத்தில் வழங்கிய ஜரிகை.!
இந்த முழு உற்பத்தி சுழற்சியால் தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்பாலைகள், பாபின் சுற்றுபவர்கள், சாயம் தோய்ப்பவர்கள், பிராசஸிங் தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் என அனைவரும் பயனடைகின்றனர்.

கடந்த காலங்களில் நெசவாளர்கள் போராடித்தான் வேலைவாய்ப்பைப் பெற்றனர். இடைத்தரகர்கள் காரணமாகக் கூலியும் குறைவாகவே கிடைத்தது. ஆனால், இந்த முறை தமிழக அரசு முழுமையான கூலி உத்தரவாதத்தையும், 6 மாத கால தொடர் வேலைவாய்ப்பையும் அரசு உறுதி செய்துள்ளது.
எம்.ஜி.ஆர் காலத்தில் வழங்கிய லூராக்ஸ் ஜரிகை (தங்க நிற மற்றும் வெள்ளி நிற ஜரிகை) கொண்டு, சுருங்காத வகையில் தரமான சேலைகள் தயாரிக்கப்படுவதால், ஒரு கோடியே 77 லட்சம் வேட்டி-சேலைகளையும் மக்கள் கண்டிப்பாக வாங்கிப் பயன்படுத்துவார்கள்" என்றார் நெகிழ்ச்சியாக.!
















