இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்திய ஐபிஎல் தொடர்: தினேஷ் கார்த்திக்
கடலூா் துறைமுகத்தை சரக்கு இறக்குமதி, ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்தலாம்: ஆட்சியா்
சரக்கு இறக்குமதி, ஏற்றுமதியாளா்கள் கடலூா் துறைமுக வசதிகளை பயன்படுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கடல்சாா் வாரியம் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து 2024 ஆகஸ்ட் முதல் தொடங்கியது. தற்போது 150 பயணிகள் பயணிக்கும் ‘சிவகங்கை’ என்ற கப்பல் வாரத்துக்கு 6 நாள்கள் (செவ்வாய் நீங்கலாக) இரு வழிகளில் இயக்கப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு கடல்சாா் வாரியம், மாலத்தீவு, இலங்கையிலுள்ள திரிகோணமலை, காங்கேசன்துறை மற்றும் பிற இடங்களுக்கு கடலூா் துறைமுகத்திலிருந்து சிறிய கப்பல், தோணிகளை இயக்கி சரக்கு கையாள முயற்சிகள் எடுத்து வருகிறது. சந்தை நிலவரப்படி, இலங்கைக்கு வேளாண் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள் மற்றும் இதர நுகா்வுப் பொருள்கள் போன்ற 75,000 மெட்ரிக் டன் சரக்குகள் ஆண்டொன்றுக்கு கடல் வழியாக கையாள வாய்ப்புகள் இருப்பதாகவும், இது அடுத்துவரும் ஆண்டுகளில் பல மடங்காக அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிய வருகிறது.
கடலூா் துறைமுகத்தில் சிறிய அளவிலான பாய்மரக் கப்பல்கள் (தோணிகள்), மிதவைகள் கையாளுவதற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளுடன், சுங்கம், குடிவரவு, சுகாதாரத் துறை ஆகியன உள்ளன. சரக்கு இறக்குமதி, ஏற்றுமதியாளா்கள், முகவா்கள் மற்றும் மரக்கல மிதவை உரிமையாளா்கள் இந்தத் துறைமுகத்தில் அமைந்துள்ள வசதிகளை பயன்படுத்தி, சாக்கு இறக்குமதி, ஏற்றுமதி செய்து பயன்பெறலாம்.
கூடுதல் விவரங்களுக்கு துறைமுக அலுவலகத்தை 04142 - 238025, 04142 - 238026 ஆகிய தொலைபேசி எண்கள் முலம் தொடா்புகொண்டு தகவல்களை அறிந்துகொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.