ஸ்டேஷனில் குற்றங்கள் குறைய ஆடு பலி; சுவற்றில் தெளிக்கப்பட்ட ரத்தம் - சர்ச்சையில்...
கர்நாடக முதல்வர் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைத்து மேகதாது பணியை துவக்க முடியாது -அமைச்சர் விஸ்வநாதன்
மதுரை மாவட்டம், மேலூரில் தமிழக முதல்வர் விஜய் மற்றும் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி ‘போதையில்லாத மேலூர், பெண்கள் பாதுகாப்பு’ என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை தவெக, காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.இந்தப் போட்டியை உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் விஸ்வநாதன் , “ ஐயூஎம்எல் த.வெ.கவுடன் கூட்டணி அமைத்திருப்பது ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறது. மேகதாது அணைப் பிரச்சனை சம்பந்தமாக சட்டமன்ற கூட்டத்தில் முதலமைச்சர் விஜயால் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அந்த தீர்மானத்தில் த.வெ.க , காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல் மற்றும் இதர கட்சிகளும் இதில் கலந்துகொண்டு ஆரோக்கியமான விவாதத்தை செய்திருக்கிறார்கள். அந்த விவாதத்தின் அடிப்படையில் முடிவு எட்டப்பட்டு இருக்கிறது. கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் மேகதாதுவில் அணை கட்டுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். உச்ச நீதிமன்ற வழக்கும், காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் தீர்ப்பும் தமிழக மக்களுக்கு சாதகமாக இருக்கிறது. கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் கர்நாடகா மாநிலம் ஆகிய 5 மாநிலங்களில் கலந்து பேசித்தான் எந்த முடிவும் எடுக்க வேண்டும்.

எந்த விதத்திலும் தன்னிச்சையாக எடுத்த முடிவை ஏற்க முடியாது என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, மக்களினுடைய தீர்ப்பு. ஒரு செங்கல்லை கூட கர்நாடக முதலமைச்சர் எடுத்து வைத்து அதன் பணியை துவங்க முடியாது. காவிரியின் உடைய நீர் வழிந்தோடி வருகிற கடைமடை பகுதியாக சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்கள் இருக்கிறது. எந்த நேரத்திலும் எங்களுடைய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கிற மேகதாது அணை கட்ட முடியாது, கட்டப்படுவதை தடுப்போம்.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயரத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்தவேண்டும். அதை விடுத்து புதிய அணையை கட்டுவது ஏற்புடையதல்ல. கேரள முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான வி.டி.சதிஷன் புதிய அணையை கட்டுவோம் என சொன்னால், அதை நாங்கள் எதிர்க்கிறோம். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால் எங்கள் மக்களின் விவசாயத்திற்கு கூடுதலாக நீர் வரும்.

கேரள முதலமைச்சர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர், நான் தமிழக காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் நான் அவருக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன். அதே போல கர்நாடகா முதலமைச்சர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் அவருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த என்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.


















