அவதூறு வழக்கு: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதும் நள்ளிரவு ஜாமீனும்; எ...
காரில் லேசாக உரசிய பைக்; போலீஸ்காரரை நடுரோட்டில் இழுத்துப் போட்டு அடித்த பைக் கும்பல்; பின்னணி என்ன?
நாக்பூரில் பைக்குகளில் வந்த கும்பல் ஒன்று போலீஸ்காரரின் காரை வழிமறித்து, அவரை நடுரோட்டில் இழுத்துப் போட்டு கொடூரமாகத் தாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, அது சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது. காரில் லேசாக உரசியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அந்தக் கும்பல் பணியில் இருந்த போலீஸ்காரரைத் தாக்கி, அவரது காரையும் அடித்து நொறுக்கியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் 14 பேரைக் கைது செய்துள்ளனர். ஆரம்பக் கட்ட விசாரணையில் 35 வயதான அந்தப் போலீஸ்காரர் தனது பெண் தோழி ஒருவருடன் தனது சொந்த காரில் நாக்பூரின் மங்கப்பூர் சௌக் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் ஏழு முதல் எட்டு இளைஞர்கள் அவரது காரை வழிமறித்ததாகக் கூறப்படுகிறது.

அவர்கள் தங்களது பைக்குகளை காரின் முன்னால் நிறுத்தி, அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டி, பின்னர் வாகனத்தை அடித்து நொறுக்கி, காரில் இருந்த போலீஸ்காரரை வெளியில் இழுத்து நடுரோட்டில் வைத்து அடித்து தாக்கினர்.
பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. படுகாயமடைந்த அந்தப் போலீஸ்காரர், உள்ளூர் மக்களின் உதவியுடன் ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், போலீஸ் விசாரணையைத் தொடங்கியது. சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், போலீஸார் 14 குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹர்ஷ் பவார், கௌரவ் திர்டே, சன்யம் கணேஷ்புரி, யாஸ் பிரதேகி, சத்யம் ஷிர்கே, பிரேம்ராஜ் தாகடே, ஆகாஷ் போகடே, நிதின் கோகலே, விக்கி தெல்காரே, பூமி தேவ் என்கிற சாகர் போக்டே, கணேஷ் உய்கே, பிரீதம் மொடேகர் மற்றும் திகாராம் பாராபத்ரே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் மீது ஏற்கனவே கிரிமினல் வழக்கு உள்ளது. அவர்களிடம் இருந்து ஐந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் சுமார் ரூ. 5.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
















