`என் கார்ல வருகிறேன்' - அனிதா ராதாகிருஷ்ணன்; `போலீஸ் வாகனத்துல ஏறுங்க.!' - கைதின...
தஞ்சாவூர்: `கோயில் புதுபிக்கும் பணிக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்' - தோழியுடன் இணை ஆணையர் கைது!
தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் மண்டலத்தின் அறநிலையத்துறை இணை ஆணையராக இருந்தவர் ஜோதிலட்சுமி. இவரது தோழி கிரிஜா.
ஜோதிலட்சுமி கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம், கோயில் புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட அனைத்துக்கும் முறைகேடாக லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதே போல் கோயில் நிர்வாக அலுலர்களிடம் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்து முறைகேடாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு கிளம்பியது. எப்போதும் ஜோதிலட்சுமியுன் உடன் இருக்கும் கிரிஜா ஆல் இன் ஆளாக இருந்து வசூலிப்பை கவனித்து வந்துள்ளார். மேலும் அவர் அரசு நிர்வாகங்களில் தலையிட்டுள்ளார்.

இணை ஆணையர் அறையில் அமர்ந்து கொண்டு கிரிஜா வரம்பு மீறி அதிகாரம் செய்வதாகவும், ஜோதிலட்சுமி கிரிஜாவிற்கு விதியை மீறி அதிகாரத்தை கொடுத்திருப்பதால் நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுவதாகவும் அறநிலையத்துறை அலுவலர்கள் புலம்பி வந்தனர். இவர்களது அட்ராசிட்டி குறித்துதோழியை வைத்து அரசு நிர்வாகம்? சர்ச்சையில் இணை ஆணையர் என்ற தலைப்பில் கடந்த 21.6.2026 தேதியிட்ட ஜூவி இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதழ் வெளியான பிறகு இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி அன்பரசன், ஆய்வாளர்கள் பத்மாவதி, அருண் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் இணை ஆணையர் அலுவகத்தில் சோதனை நடத்தினர். இதில் கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜோதிலட்சுமி அவரது தோழி கிரிஜா ஆகிய இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர். இது அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில் பழமையான வன்மீகநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஒப்பந்ததாரரான நாகையைச் சேர்ந்த மதியழகன் என்பவர் திருப்பணிக்கான டெண்டர் எடுத்து பணியினை மேற்கொண்டார். அவரிடம் இணை ஆணையர் ஜோதிலட்சுமி ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதை கொடுத்தால் நீங்கள் எவ்வித இடையூறுமின்றி வேலை செய்யலாம் இல்லை என்றால் சிரமங்களுக்கு ஆளாவீர்கள் என்று மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத மதியழகன், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார்.
பின்னர் போலீஸாரின் ஆலோசனையின்படி, மதியழகன் பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளுடன் தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு இணை ஆணையர் ஜோதிலட்சுமி, அவரது தோழி கிரிஜா ஆகியோரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டீம் அவர்களை கைது செய்து பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பிலோமினா நகரில் உள்ள ஜோதிலட்சுமியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். பின்னர் இருவரையும் கும்பகோணம் சிறையில் அடைத்தனர். இவர் திருவண்ணாமலையில் பணியாற்றிய போதும் இருவர் குறித்தும் சர்ச்சை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.



















