``ஆத்திரத்தில் அதிமுக-வை உடைத்து சின்னாபின்னமாக்கி வருகிறது தவெக!" - அப்பாவு சொல...
நெல்லை: பழிக்குப் பழியாக தொடரும் கொலைகள் - 20 வருட பகைக்கு தந்தையுடன் 5 வயது மகனும் பலியான சோகம்
நெல்லை மாவட்டம் அருகே உள்ள மூலச் சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. 45 வயதான இவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று (2-ம் தேதி) இவர் தனது மகன்கள் சின்னதுரை (15), ஜெயராஜ் (5) ஆகியோருடன் மாதுடையார்புரம் கிராமத்தில் உள்ள உறவினரின் தோட்டத்தில் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
மூவரும் ஒரே பைக்கில் மூலச்சி கிராமத்துக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த கார் திடீரென பைக் மீது மோதியது. அதனால் பைக்கில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டு, சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்தனர்.
பைக்கில் இருந்து விழுந்தவர்கள் சுதாகரித்து எழுவதற்குள் காரில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய கும்பல் காளிமுத்துவைச் சூழ்ந்து நின்று சரமாரியாக வெட்டத் தொடங்கியது.

பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஐந்து வயது சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காளிமுத்துவின் மற்றொரு மகனான சின்னத்துரைக்கு கால் எலும்பு முறிந்தது.
இந்தச் சூழலில் காளிமுத்துவை அரிவாளால் கொடூரமாக வெட்டிய கும்பல் அவரது தலையைத் துண்டித்தது. பின்னர் தலையைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் உள்ள மூலச்சி கிராமத்துக்குச் சென்று எதிரில் வந்த பெண்களிடம் காளிமுத்து தலையை காட்டியவாறு, " எங்க குடும்பத்தவர்களைக் கொலை செய்த உங்க ஊர்க்காரன் தலையை வெட்டி எடுத்து வந்திருக்கோம்.." என்று கத்தியுள்ளனர். அதனால் பெண்கள் அலறியடித்து வீடுகளுக்குள் ஓடியுள்ளனர். பின்னர் மாநில நெடுஞ்சாலையில் தலையை வைத்துவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றது.
நெல்லை மாவட்டம் மூலச்சி கிராமத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். உறவினர்களான அவர்கள் இடையே கடந்த 2006-ம் ஆண்டு குடிநீர் குழாயில் தண்ணீர் குடிப்பது தொடர்பாக இரு குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
அந்த தகராறு முற்றியதும் இரு குடும்பங்களை சேர்ந்த ஆண்களும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அதுவே கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட சிறிய பிரச்னையே இருதரப்பு மோதலாக மாறியது. இந்தப் பகை காரணமாக 2007-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி சுப்பிரமணியன் என்பவரை எதிர் தரப்பைச் சேர்ந்த பெருமாள் பாண்டியன் கோஷ்டியினர் வெட்டிக் கொன்றனர். அதைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே விரோதம் அதிகரித்தது.
அதன் காரணமாக ஒரு தரப்பைச் சேர்ந்த பெருமாள், பாபநாசம், குமார் ஆகியோர் கொல்லப்பட்டனர். மற்றொரு தரப்பில் சுப்பையா, சின்னத்தம்பி ஆகியோர் வெட்டிக் கொல்லப்பட்டனர். பழிக்குப் பழியாக நடந்த இந்தக் கொலைகளால் கிராமத்தினரின் நிம்மதி பறிபோனது. இது தொடர்பாக கிராம மக்கள் மற்றும் காவல்துறை சார்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடந்தும் பலனளிக்கவில்லை.
தொடரும் கொடூரம்!
இந்த நிலையில், அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கு விசாரணைக்காக பெருமாள் பாண்டியன் என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு நீதிமன்றத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தார். அவரை எதிர் தரப்பினர் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். இது தொடர்பாக காளிமுத்து(தற்போது கொலையானவர்) உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நடந்து வந்த பழிக்குப்பழி சம்பவங்கள் காரணமாக கிராமத்தினர் பலரும் ஊரைக் காலி செய்துவிட்டு வெளியிடங்களுக்குச் சென்று குடியேறினர்.

பெருமாள் பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய காளிமுத்துவும் குடும்பத்துடன் ஊரை விட்டு வெளியேறினார். இரு மாதங்களுக்கு முன்பு மீண்டும் கிராமத்துக்கு வந்த அவர் கூலி வேலை செய்து குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவரது வருகையை அறிந்த எதிதரப்பைச் சேர்ந்தவர்கள், அவரைக் கொல்லத் திட்டமிட்டு அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்துள்ளனர். நேற்று அவர் பைக்கில் வருவதை அறிந்து, திட்டமிட்டு அவரை கொடூரமாக கொலை செய்து தலையை வெட்டி எடுத்துள்ளனர்.
சுட்டுப் பிடிக்க உத்தரவு!
ஐந்து வயதுச் சிறுவனுடன் தந்தை கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த நெல்லை சரக டி.ஐ.ஜி திருநாவுக்கரசு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஸ்வேஷ் சாஸ்திரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். படுகாயம் அடைந்த சின்னத்துரை மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காளிமுத்துவை கொடூரமாக கொலை செய்த கும்பலை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது முதல் கட்டமாக சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை காவல்துறையினர் பிடிக்கும் போது ஆயுதங்களால் தாக்கக்கூடும் என்பதால் அவர்களை சுட்டுப் பிடிக்கவும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 20 வருடங்களாக நீடிக்கும் பகையால் இதுவரை 9 உயிர்கள் பறிபோயுள்ளது. இரு குடும்பங்களுக்கு இடையே நீடிக்கும் பகையைத் தீர்க்க காவல்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.!


















