'பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு வேண்டாமா?'- ஆளுநரின் `வைகை' பேச்சுக்கு அமைச்சர் வன...
NHAI: விரைவில் 3 மணி நேரத்தில் சென்னை டு திருச்சி - ரூ20,000 கோடியில் உருவாகிறது புதிய விரைவுச்சாலை!
இன்னும் சில ஆண்டுகளில் சென்னையில் இருந்து திருச்சிக்கு வெறும் 3 மணி நேரத்தில் செல்லும் வகையில், 300 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய பசுமைவழி விரைவுச்சாலை திட்டப் பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தொடங்கியுள்ளது. ரூ.20,000 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டம், சென்னை - பெங்களூரு (NE-7) விரைவுச்சாலைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது தேசிய விரைவுச்சாலையாக அமையவுள்ளது. இந்தச் சாலையில் வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படும்.
சமீபத்தில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று, இரு நகரங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்த இத்திட்டத்திற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் எம்.எஸ்.சைதன்யா கூறுகையில், ``நிலம் கையகப்படுத்துதல், சாலை சீரமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகள் தொடர்பாக மாநில அரசு நிறுவனங்களுடன் முதற்கட்ட ஆலோசனைகளை அண்மையில் நடத்தியுள்ளோம்.
தற்போது 5 முதல் 6 மணி நேரமாக உள்ள பயண நேரத்தை இத்திட்டம் 3 மணி நேரமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, பரனூர் முதல் செங்கல்பட்டு வரையிலான நான்கு வழிச்சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக, செங்கல்பட்டை கடப்பதற்கே வாகனங்களுக்குப் பொதுவாக இரண்டு மணி நேரம் வரை ஆகிறது.
மாநில சுற்றுச்சூழல், வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆலோசித்த ஆரம்பக்கட்ட வடிவமைப்பின்படி, இந்த கட்டுப்பாடான அணுகல் கொண்ட விரைவுச்சாலை வழித்தடம் 12 மாவட்டங்கள் வழியே நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளைக் கொண்டிருக்கும். இந்த மூடிய வழித்தடம் சென்னை வெளிவட்ட சுற்றுச்சாலையின் சிங்கபெருமாள்கோவில் பகுதியில் தொடங்கும். பின்னர் தற்போதுள்ள சென்னை - திருச்சி நெடுஞ்சாலையின் மேற்குப் பகுதியில் இந்த விரைவுச்சாலை அமையும். மேலும், இந்த திட்டத்துக்காக மாவட்டங்களுக்கு இடையே 90 மீட்டர் அகலத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியிருக்கும்." என்றார்.

மேலும், இந்த திட்டம் குறித்து பேசிய அதிகாரிகள், ``இது ஒரு பசுமைவழித் திட்டம் என்பதால், பாதையின் சில பகுதிகள் காடுகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகள் வழியே செல்வதால், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதே இதில் உள்ள முக்கிய சவாலாக இருக்கும். இருப்பினும், மாநில அரசு இதற்கு முன்னுரிமை அளித்து தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. காகிதப் பணிகள் மற்றும் சட்டரீதியான நடைமுறைகள் ஓராண்டிற்குள் முடிக்கப்படும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக காவிரியின் குறுக்கே புதிய பாலம் ஒன்றும் கட்டப்படவுள்ளது." என்றனர்.
வார இறுதி நாட்களில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அதிகளவிலான தனியார் வாகனங்கள் பயணிப்பதால் இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.













