வெங்கட நாராயணா நியமனம்: 'மேகதாது அணைக்கு எதிராகப் போராடுகையில், கர்நாடகாவைச் சேர...
கிருஷ்ணகிரி: இடிந்து விழும் கூரைகள்; மழை வந்தால் குளமாகும் வீடு; பயத்துடன் வாழும் பழங்குடியினர்
"இருபது ஆண்டுகளுக்கு முன் அரசு கட்டிக்கொடுத்த வீடுகள் எல்லாம் இடிந்து விழுந்திடும் என்று பயத்துடன் வாழும் எங்கள் பிரச்சனையை அதிகாரிகள் கண்டுக்கவே இல்லை" என்று வேதனையுடன் கூறுகிறார்கள் பட்டியல் பழங்குடியரான இருளர் சமூக மக்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணை அருகில் சோக்காடி செல்லும் வழியில் வசித்து வந்த 21 இருளர் குடும்பத்தினருக்கு கடந்த 2005-ல் மத்திய மாநில அரசு இணைத்து கொண்டு வந்த திட்டத்தின் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுத்தது.
தற்போது அந்த வீடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் புனரமைத்து தாருங்கள் என்று அங்கு வசிககும் மக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

இது சம்பந்தமாக பலமுறை கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, "இருபது வருசத்துக்கு முன்னாள அரசாங்கம் கட்டி கொடுத்த வீடுதான். ஆனால், சமீபகாலமா கான்கிரீட் கூரை பெயர்ந்து கீழே விழுகிறது. அதன் உள்ளேயுள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது, மழை வந்துவிட்டால் வீட்டின் உள்ளே இருக்க முடியாது, அருவி போல தண்ணீர் கொட்டுகிறது. அதனால் வீட்டில் வசிப்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

நாங்கள் பகல் முழுதும் காடுகளுக்கு சென்று கடினமாக உழைத்து வந்தாலும் கொஞ்ச நேரம் வீட்டுக்குள் வந்து சாய முடியவில்லை. அதைவிட கொடுமையாக கைக் குழந்தைகள், பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு வீட்டுக்குள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சீக்கிரம் சீர் செய்து தரும்படி மாவட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை, , இந்த திட்டத்தில் மேலும் 15 வீடுகள் கட்டித்தருவதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டது, ஆனால், இதுவரை வீடு கட்டிக்கொடுக்கவில்லை, அந்த இடத்தில் ஓலை கூரை போட்டு ஐந்து ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
தற்போது 21 வீடுகளையும் மராமத்து செய்து தரவும், பட்டா கொடுக்கப்பட்ட 15 பேருக்கு வீடுகளை கட்டிக் கொடுக்கவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்" என்றனர்
மாவட்ட நிர்வாகமும், தமிழக முதல்வரும் இவர்களின் பிரச்சனையை தீர்ப்பார்களா?

















