நீலகிரி: ஒற்றை மாணவர் சேர்க்கைகூட நடைபெறாத அரசு தொடக்கப் பள்ளிகள்! - அதிகாரிகள் ...
புத்தி சுவாதீனம் இல்லை என்றார்கள்... இன்று பால் பண்ணை பொறுப்பாளர்! |வழி காட்டிய மருத்துவர்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
என்னை பெண் பார்க்க வந்த நாளில்தான் குமாரை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நான் முதன் முதலாகப் பார்க்கிறேன். சுமார் 20 வயது இருக்கும். மாப்பிள்ளையின் உறவு தான். குழந்தை போல வாயில் விடாது நீர் வடிந்து கொண்டே இருந்தது. கைக்குட்டை யால் வாயைத் துடைத்தபடியே இருந்தான்.
மீண்டும் குமாரை 20 வருடங்களுக்குப் பிறகு தான் பார்த்தேன். இன்னும் திருமணம் ஆகவில்லை. அம்மா இறந்துவிட்டார். படிப்பறிவு இல்லாத ஏழைகள். பையனுக்கு புத்தி சுவாதீனம் இல்லை. பிராப்தம் அவ்வளவுதான் என்று மகனின் குறையோடே வாழ்ந்து பழகி விட்டார் குமாரின் அப்பா.
நாங்கள் அப்போது மதுரையில் இருந்தோம். அங்கு பிரபலமான மனநல மருத்துவரான சி. ராமசுப்பிரமணியம் அவர்களிடம் ஆலோசனைக் கேட்க முடிவு செய்தோம்.
மருத்துவரிடம் நியமன நேரம் பெற்று, அவரை சந்தித்தபோது தான் தெரிந்தது, குமாரின் நாக்கு கீழ் அன்னத்தோடு ஒட்டி உள்ளது என்று. சிறிய அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து "பேச்சுப் பயிற்சி"யும் அளிக்கப்பட்டது. தனது முற்பதுகளில்தான் முதன்முறையாக "அப்பா, அக்கா, மாமா, அத்தை" என்று ஒற்றை வார்த்தைகளைச் சொல்ல குமாருக்கு முடிந்தது.

அன்றைக்கு குமாரின் முகத்தில் நான் பார்த்த சந்தோஷத்தை, வெறும் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. அது, "ஹியரிங் ஏய்டு" மூலம் முதன்முதலாக அம்மா குரல் கேட்ட ஒரு குழந்தையின் சந்தோஷம், "அறுவை சிகிச்சைக்குப் பிறகு" பார்வை கிடைத்தவன் சந்தோஷம் போல, தனது குரலைத் தானே கேட்டு மகிழ்ந்த அந்த சந்தோஷம்......
இதைவிட பேரின்பம் என்னவென்றால், கட்டணம் ஏதும் வசூலிக்காமல் தனக்குப் பேச்சு கொடுத்த மருத்துவருக்கு பிரதிபலனாக அவருடனேயே இருந்து அவருடன் சேவை செய்ய முடிவு செய்து, மருத்துவரின் அழகர் கோவிலில் உள்ள அவரது 'போதி வளாகத்தில்' சிகிச்சை பெற்று வருபவர்களை கண்காணிக்கும் பொறுப்பை ஏற்று இன்றுவரை செவ்வனே செய்து வரும் குமாருக்கு, அதே வளாகத்தில்
"பால் பண்ணை" அமைத்து அதற்கு அவரை பொறுப்பாளராகவும் நியமனம் செய்துள்ளார் மருத்துவர்.
குமார் மட்டுமல்ல, பல குமார்களும், குமாரிகளும் அங்குத் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கும் தோட்டவேலை, அடுமனை வேலை என அவரவருக்குப் பிடித்த வேலைகளில் சிகிச்சையோடு பயிற்சியும் அளித்து அதன் மூலம் அவர்கள் சம்பாதிக்கவும் ஏற்பாடுகள் செய்கிறார் மருத்துவர்.
போதி வளாகத்தைப் பார்த்த பிறகு (2004-ல்) அங்குள்ள 'Visitor's Notebook' -ல் நான் எழுதி வந்தது:
அக்கரை பச்சையை
இக்கரையில் இருந்து ரசித்தேன்.
அருகில் சென்று பார்க்க
இருகை தட்டி பரிசல்காரனை அழைத்தேன்.
அந்திமாலைப் பொழுது அது
இதமாய் வீசிய தென்றலில் நனைந்தேன்
அக்கரை இக்கரையானது.
அக்கரையில் இருந்து நான் கண்டது
இக்கரையில் வாழும் பசுமையான உள்ளம் கொண்ட
நல் இதயங்களை - என்பதை உணர்ந்தேன்.
உடலுக்கு தான் வயது
உள்ளத்துக்கு அல்ல -
உள்ளதை உள்ளபடி
ஏற்றுக்கொள்ளவும் வெளிப்படுத்தவும்
நல்ல உள்ளம் வேண்டும்.
நல்ல உள்ளங்களை இனம் கண்டு
சேவை செய்யும் நல் இதயங்களில்
'செல்லமுத்து அறக்கட்டளையும்' ஒன்று.
நல்ல உள்ளங்களை
நல்வழி கொண்டு செல்லும்
நல் இதயத்திற்கு
நன்றி கலந்த வணக்கங்கள்.
மருத்துவரின் சேவை இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
-இளவேணி இராசேந்திரன்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ




















