`தளபதி விஜய்...'- பேசிய காங்கிரஸ் கவுன்சிலர்; கூச்சலிட்டு அவையை முடக்கிய திமுகவி...
நோயாளிகளுக்குப் பஸ் செலவு கொடுத்த உத்தமர் - லுங்கியோடு வந்து மருத்துவம் பார்த்த அந்த ஒரு கணம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
திருத்துறைப் பூண்டியின் நடுநாயகமாக இருக்கும், நகரின் பெரிய சிவன் கோயிலின் சிவபெருமானே, ஔஷதீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார்.அதாவது பிறவி மருந்தீஸ்வரர்!மனிதர்களின் நோய்,நொடிகளைப் போக்கும் மருந்தாக இருந்து அவர்களைக் காப்பாற்றுவதோடு,பிறவிப் பிணியையும் அறுக்கும் ஆற்றல் பெற்றவர் என்பதே இதன் பொருள்.
மகேசனே அப்படியென்றால்,மருத்துவர்கள் பற்றிக் கேட்கவா வேண்டும்? டாலுக் ஹெட் க்வார்ட்டர்ஸ் அரசு மருத்துவமனையோடு பல தனியார் மருத்துவமனைகளும் சிறிதும்,பெரிதுமாய் இயங்கி வரும் இந்த டவுனில்,பல வருடங்கள் முன்பு எளிமைக் கோலோச்சி வாழ்ந்த டாக்டர் லெனினைப் பற்றிச் சொல்லாமல் விட்டால்,புனிதமான மருத்துவத்துறைக்கே நாம் இழைக்கும் பெரும் தீங்காகும்!உடல் நோய்வாய்ப்பட்டு விடும்போதுதான் மருத்துவர்கள் மகேசன்களாக நமது கண்களுக்குக் காட்சி அளிக்கிறார்கள்.

எளிய குடும்பத்தில் பிறந்த இவருக்கு,கம்யூனிச சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்ட இவர் தந்தை, லெனின் என்று பெயர் வைத்தாராம்.ரஷ்யப் புரட்சியைச் சித்தரிக்கும் ஒரு வரலாற்று ஆசிரியர் அக்கால நிலையை இப்படி எழுதுகிறார்!”மக்கள் 18 மணி நேரம் உழைத்தாலும்,அவர்களின் அரை வயிற்றுக்கே ப்ரட்கள் கிடைத்தன.மீதி அரை வயிற்றை லெனின் அவர்களின் பேச்சுதான் நிரப்பி அவர்களை உற்சாகப்படுத்தியது!”என்று.அந்த லெனினைப் போல் இவரும் மக்கள் பணியாற்ற வேண்டுமென்று கருதியே அந்தப் பெயர்சூட்டப்பட்டதாம்.
சூட்டப்பட்ட பெயருக்கும்,சூட்டியவர்களுக்கும்,லெனினுக்கும் துரோகம் இழைக்காமல் அவர் முன்னேறி, மருத்துவரானார்.திருத்துறைப் பூண்டியில் கிளினிக்கும் ஆரம்பித்தார்.க்ளினிக்கில்,வீட்டில்,வெளியில் என்று எல்லா இடத்திலும் தனது மருத்துவப் பணியை நேரம்,காலக் கணக்கெல்லாம் பாராது தொடர்ந்தார்.
அனைத்துச் சாலைகளும் ரோமை நோக்கி,(All Roads lead to Rome) என்று கூறுவதைப் போல,சுற்றுப்பட்ட அனைத்துக் கிராமங்களில் இருந்தும் நோயுற்றவர்கள்அவர் க்ளினிக்கை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தார்கள்.அங்கு வர முடியாத வயதான அவசர நோயாளிகள் வீட்டிற்கு அழைத்தாலும்,அங்கும் சென்று பார்த்து வருவாராம்.அவர் முதலிரவன்று கூட,அவசர அழைப்பு வந்து விட,உடனடியாகச் சென்று அந்த நோயாளியைப் பார்த்த பிறகுதான் வீடு திரும்பினாராம்.நோயாளிகளின் நிலைமை அறிந்து செயல்படுவாராம்.பலரிடம் பணமே வாங்க மாட்டாராம்.சிலருக்கு மருந்துகளை அவரே இலவசமாக வழங்கி விடுவாராம்.சுமார் 10 கி.மீ.,தள்ளியுள்ள எங்கள் கீழப்பெருமழையிலிருந்து பலர் ரெகுலராக அவரிடம்தான் செல்வார்கள்.அவர்களில் சிலருக்குப் பஸ் செலவைக் கூடக் கொடுத்து விடுவாராம்.பிணியாளரின் நோயை மட்டுமல்ல,அவர்களின் பொருளாதாரத்தையும் எடை போட்டு,அதற்கேற்றாற் போல் செயல்பட்ட உத்தமர் அவர்.

திருச்சி தேசீயக் கல்லூரியில் எம்.ஏ., படித்துக் கொண்டிருந்த நேரம்.விடுதி மாணவன் நான்.விடுமுறையில் ஊருக்கு வந்த எனக்குக் கைகால்களில் அரிப்பு.
சொரியச் சொரிய தடிப்பு.குறைவான விடுமுறைதான்.சரி!காலை!டாக்டரிடம்
காட்டி வந்து விடலாம் என்று சைக்கிளை எடுத்துக் கொண்டு நேராக அவர் வீட்டிற்குப் போனேன்.அழைப்பு மணியை அடித்து விட்டு உள்ளே பார்த்தேன்.லுங்கியுடன் அவர் தலை தெரிந்தது.அவர் குளிக்க ஆயத்தமாகியிருக்க வேண்டும்.ஸ்லாக் சர்ட்டின் பட்டனைப் போட்டபடி அவரே வந்து கதவைத் திறந்தார்.முன் அறையில் இருந்த க்ளினிக்கில் அமர வைத்துச் சோதித்த பின் ப்ரிஸ்கிரிப்ஷனை எழுதிக்கொண்டே,’சாதாரணந்தான்!சரியாயிடும்.நல்லாப் படிக்கணும்!’என்று கூறியபடி ப்ரிஸ்கிரிப்ஷனை நீட்டினார்.
பாக்கட்டுக்கு விரைந்த என் கையைப் பார்த்து,’ஒண்ணும் வேண்டாம்!’ என்று சிரித்தபடி வழியனுப்பினார்.
அன்று அவர்,’குளிச்சிட்டு வரேன்!வெயிட்!’என்று சொல்லியிருந்தால் கூட,காலப் போக்கில் நான் அதை மறந்திருப்பேன்!ஆனாலும் உடன் வந்து அட்டெண்ட் செய்தது உள்ளத்தில் கற்சிற்பமாகப் பதிவாகி விட்டது.
அவ்வளவு சிறந்த மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதுதான் கொடுமையின் உச்சம்!திருத்துறைப் பூண்டி நகரில் அவரின் இறுதிச் சடங்கிற்குக் கூடிய மாபெருங் கூட்டம் அதற்கு முன்பும் யாருக்கும் வந்ததில்லையாம்!அதற்குப் பின்பும் எவருக்கும் கூடியதில்லையாம்!
எமன் இரக்கமில்லாதவன்தானோ?!
-ரெ.ஆத்மநாதன்,
கூடுவாஞ்சேரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ



















