'விஜய் பிறந்தநாள் விழாவுக்காக 300 பேருந்துகளை காத்திருக்க வைப்பதா?'- அன்புமணி கண...
`தளபதி விஜய்...'- பேசிய காங்கிரஸ் கவுன்சிலர்; கூச்சலிட்டு அவையை முடக்கிய திமுகவினர்! - என்ன நடந்தது?
சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டிருந்தது.

அவையில் நேரமில்லா நேரத்தில் கடைசி ஒரு சிலருக்கு முன்பாக காங்கிரஸ் கவுன்சிலர் சாமுவேல் திரவியத்துக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எழுந்த சாமுவேல், 'பெருந்தலைவர் காமராஜர் வாழ்க... ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு எனச் சொல்லி அதை நிறைவேற்றி எங்களையும் அமைச்சரவையில் இடம்பெற செய்த ஜனநாயகன்... தளபதி ... முதல்வர் விஜய்க்கு நன்றி' எனப் பேச்சை தொடங்க முற்பட்டார்.
அதற்குள்ளாகவே திமுக கவுன்சிலர்கள் கூச்சலிட ஆரம்பித்துவிட்டனர். திமுக கவுன்சிலர்கள் இடையூறு செய்ததால் காங்கிரஸ் கவுன்சிலரால் பேச முடியவில்லை. தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் இருக்கையிலிருந்து எழுந்து வந்து காங்கிரஸ் கவுன்சிலர்களை சூழ்ந்து கொண்டு 'நம்பிக்கை துரோகி காங்கிரஸ்' என கடுமையாக கோஷம் போட்டனர். பதிலுக்கு காங்கிரஸ் கவுன்சிலர்கள், '5 நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூர்ல என்ன ஆச்சு' என ஆவேசமாகப் பேச வாக்குவாதம் முற்றியது.

கிட்டத்தட்ட கைகலப்பை நோக்கி வாக்குவாதம் சென்ற நிலையில், காங்கிரஸ் கவுன்சிலர்கள் அவையை விட்டு வெளியேறினர். இருதரப்பும் மோதிக் கொண்டதால் அவையில் பரபரப்பான சூழல் நிலவியது. மேயர் பிரியா தீர்மானங்களை நிறைவேற்றாமலேயே அவையை முடித்து வைத்து தேசிய கீதம் பாடச் சொன்னார்.














