`கர்நாடக அரசின் பிராக்ஸி அரசா இந்த அரசு?' - ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நியமனத்திற்...
அங்கீகாரம் விமர்சனம்: விளையாட்டுத்துறையில் அரசியல், வெகுண்டெழும் இளைஞன்; இலக்கை எட்டுகிறதா படம்?
சென்னையில் வசித்து வரும் ஆதிரன் பானுமதி (கோட்டப்பாடி ஜே. ராஜேஷ்) விளையாட்டின் மீது பெரும் ஆர்வத்தைக் கொண்டிருக்கிறார். கடினமான பொருளாதாரச் சூழல் இருந்தாலும், கிடைத்ததை வைத்து ரெக்கார்ட் வைக்கும் ஓட்டப்பந்தய வீரராகவும் உயர்கிறார்.
தேசிய அளவிலான போட்டிக்குச் சென்று, அங்கேயும் வெற்றியைப் பதிக்கும் இவருக்குக் காலில் பயங்கர காயம் ஒன்று ஏற்படுகிறது. இதன் பிறகு ஆதிரனின் வாழ்க்கை என்னவானது, காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்கிற இவரின் கனவு என்னவானது என்பதை விவரிக்கிறது அறிமுக இயக்குநர் தென்பாதியானின் இந்த 'அங்கீகாரம்' திரைப்படம்.

மின்னல் வேகத்தில் ஓடும் தடகள வீரரின் தோற்றத்தைக் கொண்டு வரச் சிரத்தை எடுத்திருக்கிறார் நடிகராக அறிமுகமாகியிருக்கும் கோட்டப்பாடி ஜே. ராஜேஷ். ஆனால், இக்கதாபாத்திரம் கோரும் உணர்ச்சிபூர்வமான நடிப்பை ஓடிப் பிடிக்காததால், ஜஸ்ட் பாஸ் மட்டுமே வாங்குகிறார்.
வழக்கமான, மகன் மீது பாசம் பொழியும் அம்மா கதாபாத்திரத்தில் வருகிறார் ரமா. இவர் அழுத்தமான வசனங்களைப் பேசுமிடத்தில் 'குட்' பெறுகிறார்.
ஹீரோவின் கனவிற்குத் தடைபோடும் வில்லனாக அஜித் அகோஷி, மற்றொரு பக்கம் அவருக்கு ஆதரவாக இருக்கும் சிந்தூரி விஸ்வநாத், வசுந்தரா ஆகியோர் வந்து போகிறார்கள். ஆனால், பல இடங்களில் நடிகர்கள் பேசும் வசனங்கள் லிப் சிங்குடன் இணையாமலும் போயிருக்கிறது. அத்தோடு கதாபாத்திரங்கள் பேசும் வட்டார வழக்கும் மாறிக் கொண்டே இருப்பது ஏனோ!

குறுகிய வீடு மற்றும் தெருக்கள், தடகள வீரர்களின் மைதானம் என ஆதிரனின் போராட்டத்தைக் குறையில்லாமல் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஸ்வநாத். ஒரே இடத்திற்குள் 'ரவுண்டு' வரும் காட்சிகளையும், திசை மாறி ஓடிப் போகும் காட்சிகளையும் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் கட்டுப்பாட்டில் வைக்காமல் விட்டிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கும் பாடல்கள் 'ஓகே' ரகம்! மேலும், ரெக்கார்ட் வைத்துவிட்டு ஓடி வரும் ஓட்டப் பந்தய வீரருக்குப் பின்னணி இசையால் குளுக்கோஸ் கொடுக்காமலும் விட்டிருக்கிறார் ஜிப்ரான்.
திறமையான தடகள வீரராக இருந்தாலும் அவருக்கு எழும் தடைகள், விளையாட்டுத் துறையில் புரையோடிப் போயிருக்கும் ஊழல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, இக்கதையைச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் தென்பாதியான்.

ஆதிரனின் பொருளாதார நிலை மற்றும் சமூகச் சூழல் அவருக்குள் ஏற்படுத்தும் தாக்கங்கள், அதிகாரப் பலம் கொண்டு ஆதிரனின் திறமையை முடக்க முற்படுபவர்கள் என இதனைச் சுற்றிப் படத்தின் முதல் அரை மணி நேரம் கதை நகர்கிறது.
தூய்மைப் பணியாளர்களுக்கு அருவருப்பினால் ஏற்படும் உளவியல் ரீதியிலான பாதிப்பை காட்சிகள் மூலம் உணர்த்திய விதம் பாராட்டுக்குரியது!
இப்படியான நல்ல முன்னெடுப்புகள் இருந்தாலும், அது திரைக்கதையாக விரிக்கப்பட்ட விதமும், காட்சிகளாகத் திரையில் அரங்கேற்றப்பட்ட விதமும் இந்த 'அங்கீகார'த்திற்குத் தடங்களாக மாறியிருக்கின்றன. சில நடிகர்களின் செயற்கையான நடிப்பும், நாடகத்தன்மையான காட்சிகளும் படத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
முதல் பாதியின் 30 நிமிடத்திற்கு மேல், திரைக்கதை ஒரே இடத்திற்குள் 'கோ கோ' விளையாடுவதால் பார்க்கும் நமக்குச் சோர்வு ஏற்படுகிறது. நீளும் கிளைமேக்ஸ், லாஜிக் ஜம்புகளிலும் ரெக்கார்ட் வைப்பது எனப் பலவும் இரண்டாம் பாதியும் தடையோட்டமாகவே மாறியிருக்கின்றன.
இரண்டாம் பாதியில் நீதிமன்றப்படியேறும் திரைக்கதை, நியாயமான கேள்விகளை அதிகாரத்தை நோக்கி கேட்டாலும், அவற்றை கதையின் மையத்திலிருந்து வெளியே வந்தே பேசுகிறது.

சென்னை நகரத்திலிருந்து வெளியேற்றப்படும் பூர்வக்குடிகள், தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தூய்மைப் பணியாளர்கள், போராட்டங்கள் நிறைந்த அவர்களின் உலகம், இந்தத் தலைமுறையிலாவது மேலேறிவிட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு உழைக்கும் குடும்பங்கள் போன்றவற்றை உயிர்ப்போடு ஆங்காங்கே பேசுகிறது படம்.
ஆனால், இவற்றோடு சுவாஸ்யமான திரைக்கதை இல்லாமல் போனதால், நம்மிடையே போதுமான கவனத்தைப் பெறாமல் போகிறது படம்.



















