நீலகிரி: பள்ளத்தில் சரிந்த யானை; இரண்டு தந்தங்களை மட்டும் மீட்ட வனத்துறை; என்ன ந...
கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர்: வளம் பல தரும் மாசிச் சதுர்த்தி கரும்புச்சாறு அபிஷேகம்!
பகவான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து அசுரனை சம்ஹாரம் செய்தபின்பு கும்பகோணத்தில் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி அதில் நீராடி அதன்பின் அந்தத் தீர்த்தக் கரையில் ஒரு விநாயகர் திருமேனியை பிரதிஷ்டை செய்துவழிபட்டார் என்கிறது திருக்குடந்தை புராணம்.
அப்படி வராக சுவாமி வழிபட்ட விநாயகரை, 'வராக விநாயகர்' என்றே மக்கள் அழைத்துவந்தனர். கும்பகோணத்தின் ஆதிக்கோயில்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் கோயில் விநாயகரின் திருநாமம் காலப்போக்கில், 'கரும்பாயிரம் கொண்ட விநாயகர்' என்று மாறிவிட்டது.
இதன் காரணம் என்ன... அந்தத் தல சிறப்பு என்ன என்பன குறித்து அறிந்துகொள்வோம் வாருங்கள்.

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலுக்கு வடக்கே திருமஞ்சன வீதி செல்லும் வழியில், வராகர் கோயிலுக்கு மேற்கில் கரும்பாயிரம் கொண்ட கணபதி கோயில் அமைந்துள்ளது.
மிகவும் அழகிய திருமேனியோடு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு இனிப்பான வாழ்வை அருள்கிறார் இந்தக் கணபதி. இந்த விநாயகரின் சந்நிதியில் வைக்கும் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
சுவாமிக்கு அறுகம்புல் சாத்தி வேண்டிக்கொண்டாலே அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்கிறார்கள்.
ஒரு மகாமகத் திருவிழாவின்போது இந்த விநாயகர் நிகழ்த்திய திருவிளையாடலே இவரது திருநாமம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் என்று மாறக் காரணமானது. வாருங்கள், அந்தச் சுவையான வரலாற்றை அறிந்துகொள்வோம்.
ஒருமுறை, மாசி மகம் அன்று முனிவர்கள் பலர் கும்பகோணம் மகாமக தீர்த்தத்தில் நீராட வந்தனர். அப்போது, அங்குள்ள கோயில்களில் உத்ஸவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கரும்பு வியாபாரி ஒருவர் பெரிய வண்டியில் ஆயிரம் கரும்புகளை ஏற்றிக்கொண்டு வந்து வராக தீர்த்தக்கரையில் தங்கி கரும்பு வியாபாரம் செய்ய முற்பட்டார்.
அதை, அங்கே இருந்த வராகப் பிள்ளையாரும் கவனித்துவிட்டார். உடனே ஒரு திருவிளையாடலை நிகழ்த்தத் திருவுளம் கொண்டார் விநாயகர்.

ஒரு சிறுவனைப் போன்று உருமாறி கரும்பு வியாபாரி அருகில் வந்தார். கரும்பு வியாபாரியிடம் பேச்சுக் கொடுத்தார். வியாபாரம் ஏதும் நடக்காததால் சலிப்போடு இருந்த வியாபாரி,
''காலையில் இருந்து இதுவரை ஒரு கரும்புகூட வியாபாரம் ஆகவில்லை. முடிந்தால், கரும்பை விலைக்கு வாங்கு. காரியம் இல்லாமல் உன்னிடம் என்னால் பேச இயலாது'' என்றார் வியாபாரி.
விநாயகரும் வியாபாரியை விடுவதாக இல்லை. ''ஐயா! நானோ சிறு பிள்ளை; என்னிடம் காசு எதுவும் இல்லை; கரும்பைக் கண்டவுடன் வாய் ஊறுகிறது. ஒன்று கொடுத்தால் போதும். உமக்கும் வியாபாரம் நன்றாக நடக்கும்'' என்றார்.
''கரும்பை விற்று நாலு காசு பார்க்கத்தான் இங்கே வந்தேன். உன்னைப் போன்ற சிறு பிள்ளைகளுக்கு இலவசமாகக் கொடுப்பதற்கு அல்ல. முதலில் இங்கிருந்து ஓடிவிடு!'' என்று விரட்டினார் கரும்பு வியாபாரி.
விநாயகரும், 'கரும்பு வாங்காமல் இங்கிருந்து போகமாட்டேன்' என்று சொல்லி சிரித்தார்.
அதைக் கண்டு கோபமுற்ற வியாபாரி விநாயகரைக் கடிந்துகொண்டான். அப்போது விநாயகர் ஒரு கரும்பைத் தொட்டார். வியாபாரி கோபம் அதிகரித்து, விநாயகரைப் பிடிப்பதற்காக விரட்ட... அங்கே இங்கே என்று ஓடி, கடைசியில் தனது கோயிலுக்குள் புகுந்துவிட்டார் விநாயகர்.
சிறுவன் போன இடம் தெரியாமல் தவித்த வியாபாரி களைத்துப்போய் தன் கரும்புக் கடை இருந்த இடத்துக்கு வந்து பார்த்து அதிர்ந்துபோனான்.

வியாபாரி விற்பனைக்காக வைத்திருந்த ஆயிரம் கரும்புகளின் சாரத்தையும் விநாயகர் அதற்குள் உறிஞ்சியிருந்தார். கரும்புகள் சக்கையாகக் கிடந்தன. கலங்கிப் போனார் வியாபாரி.
நேராக விநாயகர் கோயிலுக்குச் சென்றவர், 'ஒரேயொரு கரும்பு தா என்று கேட்ட சிறுவனை விரட்டினேனே! இப்போது ஆயிரம் கரும்பும் வாங்குவார் இல்லாமல் சக்கையாகிவிட்டதே!’ என்று விநாயகர் சந்நிதி முன்பு வீழ்ந்து அழுது புரண்டார்.
பக்தன் கதறினால் சும்மா இருப்பாரா விநாயகர்? அக்கணமே வியாபாரி விற்பனைக்காகக் கொண்டு வந்த அத்தனை கரும்புகளின் சாரத்தையும் மீண்டும் அளித்தார். இந்த முறை கரும்புகள் முன்னைவிட சத்தாகவும் சுவையாகவும் மாறின.
விநாயகரிடம் முறையிடப்போய்தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது என்பதை உணர்ந்த வியாபாரி, கணபதிக்குப் பிடித்த பலவகை பணியாரங்களைக் கொண்டு போய் நிவேதனம் செய்து மகிழ்ந்தார். அன்று முதல் அந்த விநாயகருக்குக் 'கரும்பாயிரம் கொண்ட விநாயகர்’ என்ற பெயர் உண்டாயிற்று.
இந்த விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் வெகுவிமர்சையாக நடைபெறுகின்றன. மக்கள் கூட்டம் அந்த நாளில் மிகுந்திருக்கும். மேலும் வராக சுவாமிக்கு உகந்த மாசி மாதத்தில் வரும் சதுர்த்தி நாளில் கரும்புச்சாற்றினால் இந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்து சர்க்கரைப் பொங்கல் நிவேதித்து வழிபடுகிறார்கள் அதைக் கண்டாலே வாழ்க்கை வளமாகும், பிரச்னைகள் தீரும் என்கிறார்கள் பக்தர்கள்.
குடந்தை செல்பவர்கள் தவறாமல் கரும்பாயிரம் கொண்ட விநாயகரைத் தரிசித்து வாருங்கள். சத்தில்லாமல் சக்கையான கரும்புகள் முன்னைவிட சுவையாகச் சத்தாக மாறியதுபோல் சுவாரஸ்யமில்லாமல் கழியும் வாழ்க்கையும் இனிப்பாக மாறும் என்பது நம்பிக்கை.




















