காவிரி விவகாரம்: ``மாநில உரிமைகளை அடகு வைத்துவிட்டு இன்னும் மௌனம்" - கனிமொழி
கொல்கத்தாவில் வரலாற்று நிகழ்வு: கால்பந்து போட்டியில் பிரேசிலை எதிர்கொள்ளும் இந்தியா!
ஐந்து முறை FIFA உலகக் கோப்பையை வென்று உலக கால்பந்தை தன் விரல் நுனியில் ஆட்டி வைக்கும் பிரேசில் அணி, முதன் முறையாக இந்திய ஆண்கள் தேசிய கால்பந்து அணியை, அதிகாரபூர்வ சர்வதேச நட்புப் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.
அக்டோபர் 3-ம் தேதி கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, இந்திய கால்பந்து வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் பிரேசிலின் மூத்த ஆண்கள் தேசிய அணிகள் அதிகாரபூர்வ சர்வதேச போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதன்முறை. அதேபோல், இந்திய மண்ணில் பிரேசில் ஆண்கள் தேசிய அணி கால் பதித்து விளையாடுவதும் இதுவே முதன்முறை.

FIFA அறிமுகப்படுத்தியுள்ள 'Super FIFA International Window'-இன் ஒரு பகுதியாக நடைபெறும் ஆசிய-ஓசியானியா சுற்றுப்பயணத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளுக்குப் பிறகு பிரேசில் அணி கொல்கத்தா வருகிறது.
பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு உறுதி
ஐந்து முறை உலகக் கோப்பையை முத்தமிட்ட சாம்ராஜ்யத்தை இந்தியா எதிர்கொள்கிறது என்பதாலேயே இந்தப் போட்டி உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. FIFA தரவரிசை முறை அறிமுகமான 1992-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய அணி எதிர்கொள்ளும் மிக உயர்ந்த தரவரிசை கொண்ட அணிகளில் ஒன்றாக பிரேசில் மிளிர்கிறது. உலகின் அசைக்க முடியாத முன்னணி அணிக்கு எதிராக நம் இந்திய வீரர்கள் களமிறங்கிப் போராடும் பொன்னான வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது.
பிரேசிலின் புதிய பயணம் மற்றும் முந்தைய மோதல்கள்
பிரேசில் அணிக்கும் இந்தச் சுற்றுப்பயணம் மிக முக்கியமானது. 2026 உலகக் கோப்பைக்குப் பிறகு, தலைமைப் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி (Carlo Ancelotti) தலைமையில் அடுத்த தலைமுறை அணியை உருவாக்கும் பணியில் பிரேசில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஆண்கள் தேசிய அணிகள் மோதிக்கொள்வது இதுவே முதன்முறை என்றாலும், இதற்கு முன்னரும் இந்திய - பிரேசில் அணிகள் மோதிய கணங்கள் உண்டு. கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச தொடரில் இந்திய மற்றும் பிரேசில் மகளிர் அணிகள் மோதின.
அதனைத் தொடர்ந்து, 2022 FIFA U-17 பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரிலும் இரு நாட்டு இளையோர் அணிகளும் நேருக்கு நேர் மோதின. ஆனால், ஒட்டுமொத்த கால்பந்து உலகமும் உற்றுநோக்கும் ஆண்கள் தேசிய அணியின் அதிகாரபூர்வ மோதல் இப்போதுதான் அரங்கேறுகிறது.
சால்ட் லேக் மைதானத்தில் தொடரும் உலகளாவிய கால்பந்து சரித்திரம்
இந்த வரலாற்றுப் போருக்கு நம் நாட்டின் 'கால்பந்தின் தலைநகரம்' கொல்கத்தாதான் களமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 1977-ஆம் ஆண்டு ஜாம்பவான் பீலே தலைமையிலான 'நியூயார்க் காஸ்மாஸ்' அணி மோஹன் பகானுக்கு எதிராக விளையாடிய களம் முதல், 2011-ஆம் ஆண்டு லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கொல்கத்தாவில் கால் பதித்தது வரை பல சரித்திரத் தருணங்களுக்கு இந்த மைதானம் சாட்சியாக இருந்துள்ளது. அந்தப் பொன்விழா பட்டியலில் இப்போது பிரேசில் தேசிய அணியின் பெயரும் பெருமையுடன் இணைகிறது.

இந்தப் போட்டி வெறும் நட்பு ரீதியிலான சந்திப்பு மட்டும் அல்ல. உலகின் அதிநவீன உத்திகளைக் கொண்ட முன்னணி அணிக்கு எதிராக விளையாடும் அனுபவம், சர்வதேச அளவிலான ஆட்ட வேகம் மற்றும் தொழில்நுட்ப நுணுக்கங்களை நம் வீரர்கள் நேரில் கற்கும் மாபெரும் வாய்ப்பாக இது அமையும் என்று கால்பந்து வல்லுநர்கள் கணிக்கின்றனர்.




















