செய்திகள் :

`சிங்கப்பூர் ஏன் உலகில் முன்னோடி நாடு?' | இயக்குநர் சீனு ராமசாமி

post image

நம் தேசத்தில் நாம் 'லஞ்சம்' (Bribery) பற்றி அதிகம் பேசுகிறோம். லஞ்சம் என்பது ஒரு தனிமனிதனின் ஒழுக்கச் சிதைவு; அது திருட்டுத்தனமாக இருட்டில் கைமாறும் ஒரு அழுக்கு நோட்டைப் போன்றது. அதைச் சட்டத்தால் தண்டித்துவிடலாம். ஆனால், லஞ்சத்தை விடவும் விஸ்வரூபம் எடுத்து, ஜனநாயகத்தின் வேரையே அரித்துக்கொண்டிருக்கும் ஒரு 'சட்டப்பூர்வமான வன்முறை' (Legalized Corruption) இப்போது நம்மிடையே வளர்ந்து நிற்கிறது.

அதுதான்—"அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் தொழில் முனைவதும் லாபம் ஈட்டுவதும்".

இதன் பின்னால் இருக்கும் கசப்பான உண்மைகளை நாம் உரக்கப் பேச வேண்டிய தருணம் இது.

ஏன் இது லஞ்சத்தை விடக் கொடுமையானது?

மக்களுக்காக உழைக்க வேண்டிய பிரதிநிதிகள், தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி லாபம் ஈட்டத் தொடங்கும்போது, மக்கள் நலன் என்பது இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு, 'லாபம்' மட்டுமே பிரதானமாகிவிடுகிறது. 

பொதுச் சேவை என்பது அங்கே ஒரு வியாபாரமாகச் சுருங்கிவிடுகிறது.

​வெயிலில் காய்ந்து, வியர்வை சிந்திப் போராடும் சாமானியத் தொழில் முனைவோரின் கனவுகள், அதிகார வர்க்கத்தின் நிழலில் வளரும் பெரும் நிறுவனங்களால் நசுக்கப்படுகின்றன. அவர்கள் சட்டங்களை வளைப்பதும், தங்களுக்குச் சாதகமான அரசாணைகளை (G.O) பிறப்பிப்பதும் எளியவர்களின் வாழ்வாதாரத்தைச் சிறுகச் சிறுகக் கொல்லும் செயலாகும்.

இயக்குநர் சீனு ராமசாமி
இயக்குநர் சீனு ராமசாமி

​கொள்கை முடிவுகளில் ஊழல் (Policy Corruption): அரசியல்வாதிகள் தொழில் முனைவோராக இருக்கும்போது, அவர்கள் எடுக்கும் முடிவுகள் பொதுமக்கள் நன்மைக்காக இருப்பதில்லை. மாறாக, தங்கள் நிறுவனங்களின் வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டிருக்கும்.

 இயற்கை வளங்களைச் சுரண்டுவதும், சுற்றுச்சூழல் விதிகளைத் தளர்த்துவதும் இந்தத் 'தொழில் முனைவு' என்ற பெயரில்தான் நிகழ்கின்றன.

​இங்கு சிங்கப்பூர்  ஒரு நேர்மையான முன்னுதாரணமாக இங்கு பார்க்கிறேன்.

​சிங்கப்பூர் இன்று தொழில் வளத்தில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இருப்பதற்கு அதன் 'நவீன சிற்பி' லீ குவான் யூ (Lee Kuan Yew) உருவாக்கிய கறைபடியாத நிர்வாகக் கோட்பாடுகளே காரணம்.

அவர் முன்னெடுத்த நாட்டை கட்டும்  நான்கு முக்கியத்  தூண்கள்.

​சந்தைக்கு நிகரான ஊதியம் (Peanuts vs Monkeys): "நீங்கள் வேர்க்கடலையை ஊதியமாகக் கொடுத்தால், உங்களுக்குக் குரங்குகள்தான் வேலையாட்களாகக் கிடைக்கும்" என்பது அவரது புகழ்பெற்ற வாசகம். அமைச்சர்களுக்குச் சிறந்த ஊதியத்தை அரசாங்கமே வழங்கிவிட வேண்டும், 

அதன் பிறகு அவர்கள் எவ்வித வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது எனத் தடை விதித்தார்.

​ "நாங்கள் அதிகாரத்திற்கு வந்தபோது வெண்ணிற ஆடை அணிந்தோம். அந்த ஆடை எவ்வளவு தூய்மையானதோ, அவ்வளவு தூய்மையாக எங்கள் நிர்வாகமும் இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார். 

தார்மீக அதிகாரம் இல்லாத தலைவனால் நாட்டை வழிநடத்த முடியாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

​ அமைச்சர்கள் எவ்விதப் பங்குகளை வாங்கவோ, நிலம் மற்றும் சொத்து வணிகத்தில் ஈடுபடவோ அனுமதி இல்லை. ஒரு திட்டத்தினால் தன் உறவினருக்கோ நண்பருக்கோ லாபம் வரும் என்றால், அந்த அமைச்சர் அந்த முடிவிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

சிங்கப்பூர் தந்தை லீ குவான் யூ

1986-ல் தனது நெருங்கிய நண்பரான அமைச்சர் தெக் சீங் வான் மீது ஊழல் புகார் வந்தபோது, லீ குவான் யூ எவ்விதச் சலுகையும் காட்டவில்லை. சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்த அந்த அமைச்சர் தற்கொலை செய்துகொண்டார்.

 "சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்பதே சிங்கப்பூரின் தாரக மந்திரம்.

சில ​உலக நாடுகள் பின்பற்ற தொடங்கியது அவருக்கு கிடைத்த வெற்றி,

 பெரும் தொழிலதிபர்கள் பதவிக்கு வரும்போது, அவர்களின் சொத்துக்களை ஒரு மூன்றாம் நபர் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். பதவியில் இருக்கும் வரை, தனது பணம் எங்கே முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது அந்த அரசியல்வாதிக்கே தெரியாது.

​ஐரோப்பிய நாடுகளில் பதவியிலிருந்து விலகிய உடனேயே, தாங்கள் முன்பு கவனித்த துறையைச் சார்ந்த தனியார் நிறுவனங்களில் பணியில் சேர முடியாது. 1 முதல் 2 ஆண்டுகள் வரை அவர்கள் எவ்வித வணிகத்திலும் ஈடுபடக்கூடாது.

நார்வே, சுவீடன் போன்ற நாடுகளில் அரசியல்வாதிகளின் வரி விவரங்களும் சொத்துகளும் பொதுமக்கள் பார்வைக்கு மிக வெளிப்படையாகத் திறந்த புத்தகமாக இருக்கும்.

​"அதிகாரம் என்பது சேவை செய்வதற்கான கருவி; அதுவே லாபம் ஈட்டும் இயந்திரமாக மாறும்போது ஜனநாயகம் தன் ஆன்மாவை இழக்கிறது."

​இன்று நம் நாட்டில் அதிகாரத்தைப் பயன்படுத்தி நடக்கும் இந்தச் 'சட்டப்பூர்வமான ஊழலை' ஒழிக்க, மேலைநாடுகளில் உள்ளது போன்ற கடுமையான  சட்டங்களும், சொத்துத் தணிக்கைச் சட்டங்களும் காலத்தின் கட்டாயம். அதிகாரம் என்பது தாகம் தீர்க்கும் நீராக இருக்க வேண்டுமே தவிர, அந்தத் தாகத்தையே விலைக்கு விற்கும் வணிகமாக மாறக்கூடாது.

இந்த விழிப்புணர்வு மக்களாகிய நம்மிடமிருந்து தொடங்க வேண்டும். அதிகாரம் என்பது லாபக் கணக்கு பார்க்கும் இடமல்ல, அது மக்களின் கண்ணீர் துடைக்கும் இடம் என்பதை நாம் உரக்கச் சொல்ல வேண்டிய தருணம் இது.

​​வெயிலில் காய்ந்து, வியர்வை சிந்திப் போராடும் சாமானியத் தொழில் முனைவோரின் கனவுகள், அதிகார வர்க்கத்தின் நிழலில் வளரும் பெரும் நிறுவனங்களால் நசுக்கப்படுகின்றன என்பதற்கு நம் மகாகவி பாரதியாரின் தந்தையே ஒரு சாட்சி.

சிங்கப்பூர்

​எட்டயபுர சமஸ்தானத்தில் செல்வாக்குடன் இருந்த பாரதியின் தந்தை சின்னசாமி, சுதேசி உணர்வோடு ஒரு பருத்தி ஆலையை (Spinning Mill) நிறுவ முயன்றார். இயந்திரங்களை இறக்குமதி செய்து, தன் மொத்தச் சொத்தையும், உழைப்பையும் அதில் முதலீடு செய்தார். ஆனால், அன்றைய காலனிய ஆதிக்க அதிகாரமும், உள்ளூர் அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்பின்மையும் அவரது கனவைச் சிதைத்தன.

​அந்தத் தொழில் தோல்வியால் ஏற்பட்ட மன உளைச்சலும், கடன் சுமையும்தான் அவரை மரணப் படுக்கையில் தள்ளியது. இதை பாரதி பின்னாளில், 'யந்திர சாலைகள் இயற்றுவோம்' என்று பாடியதற்குக் பின்னால், தன் தந்தை அதிகாரச் சூழலால் இழந்த அந்தப் பெரும் வலியும் இருந்திருக்கக்கூடும்.

​அன்று அந்நிய ஆதிக்கம் பாரதியின் தந்தை போன்றோரின் கனவுகளைச் சிதைத்தது; இன்று நம் நாட்டு 'சட்டப்பூர்வமான ஊழல்' நவீன காலச் சின்னசாமிகளின் வாழ்வாதாரத்தைச் சிறுகச் சிறுகக் கொன்று கொண்டிருக்கிறது.!

கட்டுரையாளர் : சீனு ராமசாமி 

திரைப்பட இயக்குநர் மற்றும் கவிஞர்

களம் மாறிய அரசியல்... தடம் புரளும் அதிமுக; EPS-க்கு 'செக்'; எம்.ஜி.ஆர் மாளிகையில் என்ன சலசலப்பு?

அ.தி.மு.கவில் தலைமைக்கு எதிராக முன்னணித் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட க... மேலும் பார்க்க

ஸ்டாலின் - விஜய் சந்திப்பு: ஆரத்தழுவி வரவேற்ற உதயநிதி, கைபிடித்து அழைத்துச் சென்ற ஸ்டாலின்!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்... மேலும் பார்க்க

Gold: "ஓராண்டிற்கு தங்கம் வாங்காதீங்க" - மோடியின் ஐடியாவும், அதன் பின்னிருக்கும் உலக அரசியலும் என்ன?

"கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, அத்தியாவசியமற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும். அதனால், தேசத்தின் நலன் கருதி, அடுத்த ஓராண்டிற்குத் தங்கம் வ... மேலும் பார்க்க

சேலம்: மதுபோதையில் மாணவனைக் கொன்று படம் பிடித்த சிறுவர்கள்; போர்க்கால நடவடிக்கை கோரும் அன்புமணி

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை அடுத்த காட்டுவளவு என்ற இடத்தில் மதுபோதையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் ஒன்று சேர்ந்து கோகுல் என்ற சக மாணவரைச் சரமாரியாக கத்தியால... மேலும் பார்க்க

மோடி தங்கத்தை தவிர்க்க சொல்வது ஏன்? தங்கத்துக்கும் அந்நிய செலாவணிக்கும் என்ன தொடர்பு? - முழு விவரம்!

"ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீர்கள்; வெளிநாட்டு பயணங்களை தள்ளி வையுங்கள்; முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள்," என பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வேண்டுகோள், நாடு தழுவிய விவாதத்தை ஏற்படுத்தியு... மேலும் பார்க்க

ஒரு வாக்கில் தோல்வி; பெரியகருப்பனின் புகார் - `ஆதாரம் இல்லை' தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதால், அந்த வாக்கை மீட்டு மறு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட க... மேலும் பார்க்க