தட்டுப்பாடு; சிலிண்டரில் சமையல் எரிவாயு அளவு 14.2 கிலோவிலிருந்து 10 கிலோவாக குறை...
'சிரிப்பு, கோபம், அதட்டல்' - எப்படி முடிந்தது திமுக நேர்காணல்!
திமுக நேர்காணல்
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட மொத்தம் 15,372 பேர் விருப்பம் தெரிவித்து விருப்ப மனு கொடுத்திருந்தார்கள். இதில் அதிகபட்சமாக முதல்வர் ஸ்டாலின் தங்கள் தொகுதியில் போட்டியிடவேண்டும் என்று சொல்லி 1,473 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தார்கள்.
அதற்கு அடுத்தபடியாக அதிகப்படியான விருப்ப மனு உதயநிதி ஸ்டாலினுக்கு வந்திருந்ததாக அறிவாலய புள்ளி விவரங்கள் தகவல் தெரிவித்தன. விருப்ப மனு தாக்கல் முடிந்த நிலையில் கடந்த 17-ம் தேதி தொடங்கிய திமுக நேர்காணல் தொடர்ச்சியாக நடைபெறத் திட்டமிட்டிருந்தது.

நடுவில் ரமலான் தினத்தன்று நடைபெறவிருந்த நேர்காணல் திங்கள் நடந்து முடிந்தது. கடைசி தினத்தில் மட்டும் எட்டு திமுக அமைப்பு ரீதியான மாவட்டங்களின் கீழ் வரும் 21 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்டவர்களிடம் காலை, மாலை என இரண்டு பகுதிகளாக நேர்காணலை நடந்து முடித்திருக்கிறது திமுக தலைமை.
முன்பெல்லாம் தொகுதி வாரியாக ஒவ்வொருவராக அழைத்து நேர்காணல் நடத்தப்பட்ட நிலையில், இம்முறை தொகுதியில் பணம் கட்டிய அனைவரையும் ஒன்றாக அழைத்து நேர்காணலை நடத்தியிருக்கிறது திமுக.
எப்படி நடந்தது நேர்காணல்?
ஆறு நாள்களாக காலை, மாலை என்று நடந்து முடிந்த நேர்காணலில் என்ன நடந்தது எனக் கலந்துகொண்ட நிர்வாகிகள் தொடங்கி அறிவாலய சீனியர்கள் எனப் பலரிடமும் பேசினோம்.
"கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்திலும் அதிக விருப்ப மனு வந்திருந்ததால் ஒவ்வொரு தொகுதியிலும் பணம் கட்டியவர்களை மொத்தமாக அழைத்து நேர்காணல் நடந்திருந்தோம். இப்போது 234 தொகுதிகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு 15,372 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தார்கள். அவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக அழைத்து நேர்காணல் நடத்துவது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று. அதனால், தொகுதி வாரியாக அனைவரையும் அழைத்து நேர்காணல் நடத்தத் திட்டமிடப்பட்டது.

முதலில் தனக்காகப் பணம் கட்டியவர்களை மட்டுமே அழைத்து நேர்காணல் நடத்தத் திட்டமிடப்பட்டது. இதிலேயே 5,000 விருப்ப மனு வரை கழிக்கப்பட்டுவிட்டது. அடுத்ததாக, பல தொகுதிகளில் நடப்பு மாண்புமிகுகளின் வாரிசுகள் பணம் கட்டியிருந்தார்கள். அவர்களையும் தலைவர் அழைக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டார். தொகுதி வாரியாக ஒருவர் தொடங்கி 50 பேர் வரை பணம் கட்டியிருந்தார்கள்.
அமைச்சர்களில் உதயநிதி ஸ்டாலின், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சேகர்பாபு, உள்ளிட்ட ஒருசிலர் தொகுதிகளில் மட்டுமே ஒருவர் நேர்காணலில் இடம்பெற்றிருந்தனர். மற்றபடி அமைச்சர்கள் தொகுதிகளில் கூட பலரும் பணம் கட்டியிருந்தார்கள்.
முன்பெல்லாம், மாவட்டச் செயலாளர் தொகுதி, அமைச்சர் தொகுதியில் மற்றவர்கள் பணம் கட்டவே அவ்வளவு யோசிப்பார்கள். அதெல்லாம் இந்தமுறை கொஞ்சம் கூட இல்லை, சேலம் வடக்கு அமைச்சர் ராஜேந்திரன் தொகுதியில் பலரும் பணம் கட்டியிருந்தார்கள். நேர்காணலுக்கு வந்திருந்தவர்களிடம் தொகுதி வாரியாக தலைவர் தொகுதி நிலவரம் எப்படி இருக்கிறது, எஸ்.ஐ.ஆர் எதுவும் பாதிப்பு இருக்கிறதா, திட்டங்கள் மக்களைச் சென்று சேர்ந்திருக்கின்றனவா, சட்டமன்ற உறுப்பினர் செயல்பாடு எப்படி இருந்தது, ஓ.பி.எஸ், வைத்தியலிங்கம் வந்தது, தே.மு.தி.க-வை இணைத்து உங்கள் தொகுதியில் பயன் தருமா, உங்கள் தொகுதியில் கூட்டணிக்குக் கொடுத்தால் வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்ற கேள்விகளையே மாற்றி மாற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதேபோல், கண்டிப்பாகச் சிபாரிசு என்று யாரவது கடிதம் கொடுத்தால் அவர்களைக் கடுமையாக வசை பாடி அனுப்பிவைத்தார். கடைசி நாளில் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டி அனைத்து ஒன்றிய செயலாளர்களும் எனக்குப் பரிந்துரை செய்கிறார்கள் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டதற்கு முகம் சிவந்து கடுமையான பதில்களே வந்தன.
'என்னப்பா எல்லாருக்கும் அறிவாலயத்தில் சீட் கொடுத்துட்டோம். இனிமே தனியா சீட் கேட்க மாட்டீங்க தானே' என்று நகைப்பூட்டும் வகையிலும் பேசினார். அதே நேரத்தில், நாமக்கல் மாவட்டச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி-யுமான ராஜேஷ் நேர்காணலுக்கு வரும்போது 'நீ தான் எம்.பி-யா இருக்கையை அப்பறம் எதற்கு இங்க வந்துருக்கீங்க' என்றும் கோபமாகப் பேசியிருந்தார். அதே போல , பல நிர்வாகிகளிடமும் நலம் விசாரிப்பது தொடங்கிப் பல உணர்வுப்பூர்வமான சம்பவங்களும் நிகழ்ந்தன.
தொடக்க நாள்களில் ஒவ்வொரு தொகுதி முடிந்ததுமே அந்த தொகுதிக்கு உட்பட மாவட்டச் செயலாளர்களை அழைத்து தொகுதிக்கு இரண்டு பெயர்களைக் கொடுங்கள் என்றும் அதில் ஒரு பெண் வேட்பாளர் பெயரையும் கேட்டு வாங்கினார். இந்த தகவல் வெளியில் பரவவே, பலரும் மாவட்டச் செயலாளர்களைப் பிடுங்க ஆரம்பித்த தகவல் தலைமைக்கு வரவே அதையும் ஒருகட்டத்தில் நிறுத்திவிட்டார் தலைவர்.
உதயநிதியிடம் நேர்காணல் நடைபெறும்போது, தொகுதி எம்.எல்.ஏ-வா என்ன செஞ்சீங்க என்று கேள்வி கேட்க, பதிலுக்கு உதயநிதியும் இரண்டு மூன்று நிமிடங்களுக்குத் தொகுதியில் செய்ததைச் சொல்லியிருந்தார். மூத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என்று அனைவரிடத்திலும் இதே மாதிரியே கேள்விகள் கேட்கப்பட்டன.

ஒவ்வொரு தொகுதி நேர்காணல் முடிவிலும் தலைமை சொல்லும் வேட்பாளருக்கு ஒற்றுமையாக வேலை பார்த்து வெற்றியடையச் செய்யவேண்டும். கூட்டணிக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டாலும் அங்கும் கடினமாக வேலைபார்த்து வெற்றிபெற வைக்க வேண்டும் என்பதை அனைத்து தொகுதி நேர்காணலில் மறக்காமல் சொல்லியிருந்தார் தலைவர்.
கனிமொழி நேர்காணலுக்கு அழைக்கப்படுவார், என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவர் நேரடியாக விருப்ப மனு வழங்காத நிலையில் அவர் அழைக்கப்படவில்லை. அதே நேரத்தில், உதயநிதிக்காகப் பலரும் விருப்ப மனு கொடுத்திருந்த நேரத்தில் அவரும் தனக்காக விருப்ப மனு கொடுத்திருந்தார். இதுவரை இல்லாத வகையில் கொத்து கொத்தாக அனைவரும் அழைக்கப்பட்டு நேர்காணலை நடத்தி முடித்திருக்கிறார்கள். ஏற்கனவே தயாராக இருக்கும் பட்டியலில் உள்ள பெயர்களில் ஒருவரைத் தேர்வு செய்யும் வேலை மட்டுமே பாக்கி. அதுவும் முடிவடைந்து இந்த வார இறுதிக்குள் வேட்பாளர் பெயர் பட்டியல் வெளியாகும்" என்றார்கள் விரிவாக.






.jpeg)








