ஆட்டிசம் சிகிச்சைக்கான 'ஸ்டெம் செல் தெரபி' - மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... வி...
சிவகங்கை: கண்மாய்க்குள் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்ட இருவர்; 5 பேர் அதிரடி கைது!
சிவகங்கை அருகே செப்டம்பர் 16 அன்று 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில், தொடர்புடைய 5 நபர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
கொலை பின்னணி
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள குருந்தனிவாரியேந்தலைச் சேர்ந்த தெய்வேந்திரன் (27) மற்றும் சிறுவேலங்குடியைச் சேர்ந்த பூப்பாண்டி (25) ஆகிய இருவரும், சிவகங்கை - காளையார்கோவில் சாலையில் உள்ள பழமலைநகர் - கொடிக்காடு கண்மாய் பகுதியில் தெய்வேந்திரனின் புதிய காரை நிறுத்திவிட்டு மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், தெய்வேந்திரன் மற்றும் பூப்பாண்டியை கண்மாய்க்குள் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும், அவர்களின் புதிய காரையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கிச் சிதைத்துவிட்டுத் தப்பியோடியது.
போலீஸாரின் அதிரடி விசாரணை - கைது:
தகவலறிந்து வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையிலான போலீஸார் உடல்களைக் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மோப்ப நாய் 'லைலா' மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இக்கொலை தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், கொலையில் தொடர்புடைய 5 பேரைக் காவல்துறையினர் தற்போது கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்:
பாலமுருகன் (24)
தனராஜ் (19)
சந்தோஷ் (19)
சதீஷ்குமார் (25)
காளீஸ்வரன் (23)
முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய மீதி பேரைக் கைது செய்யப் தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



















