`இப்படி மென்ட்டல் டார்ச்சர் பண்ணாதீங்க' - கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட அயலக மாண...
ஆட்டிசம் சிகிச்சைக்கான 'ஸ்டெம் செல் தெரபி' - மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... விவரம் என்ன?!
ஆட்டிசம் குறைபாட்டுக்கான 'ஸ்டெம் செல் தெரபி' (Stem Cell Therapy) சிகிச்சையை, முறையான அங்கீகாரம் பெற்ற மருத்துவ மையங்களில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் செப்டம்பர் 16 அன்று புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
கிளினிகல் எஸ்டாப்ளிஷ்மென்ட்ஸ் சட்டத்தைப் பின்பற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.
வழக்கமான சிகிச்சை கிடையாது
உடலில் உள்ள சிறப்பு செல்களைப் பயன்படுத்தி நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஸ்டெம் செல் தெரபி குறித்து பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், இது அனைத்து நோய்களுக்கும் பொதுவான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழக்கமான சிகிச்சை கிடையாது.
மத்திய அரசின் புதிய உத்தரவுப்படி, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டுக்கு இந்தச் சிகிச்சை தற்போதுவரை மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, இதனை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ ஆராய்ச்சிகளின் ஒரு பகுதியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு வணிக ரீதியான சிகிச்சையாக வழங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி
கடந்த ஜனவரி 30 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Yash Charitable Trust & Ors. v. Union of India வழக்கில், ஸ்டெம் செல் தெரபி தொடர்பான சட்ட மற்றும் மருத்துவ விதிமுறைகளை மருத்துவமனைகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விதிகளை மீறினால் என்ன நடவடிக்கை?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை (DBT) இணைந்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, அங்கீகரிக்கப்படாத ஸ்டெம் செல் சிகிச்சைகளுக்கு ஏற்கெனவே கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.

இதற்கிடையே, தேசிய மருத்துவ ஆணையமும் (NMC) ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட பயன்பாடுகளுக்கு அப்பால் ஸ்டெம் செல் சிகிச்சையை வழங்குவது, பரிந்துரைப்பது அல்லது விளம்பரப்படுத்துவது மருத்துவர்களுக்கான தொழில்முறை நெறிமுறை மீறலாகக் கருதப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சிக்குத் தடையா?
இந்த உத்தரவு ஸ்டெம் செல் ஆராய்ச்சிகள் முழுவதையும் தடை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முறையான விதிமுறைகளுக்கு உட்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் (Clinical Trials) மூலம் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம். மாறாக, ஆட்டிசத்திற்கு இன்னும் நிரூபிக்கப்படாத இந்த சிகிச்சையை வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




















