EB ஹார்ட் டிஸ்க் விவகாரம்: ``யாரும் யாரையும் காப்பாற்ற முடியாது" - அமைச்சர் நிர்...
சுகாதார சீர்கேட்டின் உச்சம்; சேலம் புதிய பேருந்து நிலைய அவலம் - கேள்விக்குறியா தனிமனித ஒழுக்கம்..?
சேலம் புதிய பேருந்து நிலையமானது, ஓமலூர் பிரதான சாலையில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாட்டின் நான்காவது பெரிய பேருந்து நிலையமாக இயங்கி வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு சுமார் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிகாரபூர்வமாக பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையம் என்று பெயரிடப்பட்டிருந்தாலும், மக்கள் பெரும்பாலும் "புதிய பேருந்து நிலையம்" என்றே கூறிவருகின்றனர்.
இந்தப் பேருந்து நிலையம் 1985-ல் நிறுவப்பட்டுள்ளது. பின்னர் பல்வேறு முறை புத்துருவாக்கமும் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2024 -ல் தி.மு.க ஆட்சிக்காலத்தில் சுமார் 24.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது பேருந்து நிலையத்தில் பல்வேறு சிக்கல்கள் நிலவிவருகின்றன என்ற தகவல் அறிந்து, நேரில் சென்று பார்வையிட்டு மக்களிடம் கருத்துக்களைக் கேட்டோம்.

அங்கு இருந்த பயணிகள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள், தூய்மைப் பணியாளர்கள் எனப் பலரும் பகிர்ந்த கருத்துக்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.
"முக்கிய பிரச்னைகள்..."
பேருந்து நிலையத்தின் சுற்றுப்புற சூழல் தூய்மையற்ற நிலையில் உள்ளது. குப்பை தொட்டிகள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டும், பொதுவெளியிலேயே குப்பைகள் கிடக்கின்றன. மேலும், பேருந்து நிலையத்தில் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மற்றும் கட்டணக் கழிப்பிடங்கள் இருந்தும் பெரும்பாலோனோர் பேருந்து நிலையத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளிலேயே சிறுநீர் கழிப்பது, பெரும் பிரச்னையாக உள்ளது.
இது குறித்து மக்கள் கூறுவதாவது,
பெரும்பாலான மக்களின் பொறுப்பற்ற தன்மையே இதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும், வேறு சில காரணங்களும் உண்டு. சில பேருந்துகள் உள்ளே செல்வதற்கு முன்பு நிலையத்தின் வாசலிலேயே (ஊரகப் பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு வசதியாக ) பயணிகளை இறக்கிவிடுகையில், நிலையத்தின் உள்ளே இருக்கும் கழிவறைகளுக்குச் செல்லாமல், அவசரத்தில் பேருந்து இறக்கிவிடும் இடத்திற்கு அருகிலேயே சிறுநீர் கழிக்கின்றனர்.



காரணம் கழிப்பறைகள் பேருந்து நிலையத்தின் உட்பகுதியில், கடைசியில் உள்ளது. மேலும், கழிப்பறைகள் எங்கு உள்ளன என்ற வழிகாட்டி பலகைகளும் வாசலில் இல்லை. இலவச கழிவறைகள் சற்று தூய்மையற்ற நிலையில் இருக்கின்றன. மேலும், கட்டணக் கழிப்பிடங்களிலும் 5-10 ரூபாய் பெறுகின்றனர்.
இதனால், பொதுமக்கள் அச்சாலையில் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர். ஆட்டோ ஓட்டுநர்கள், கொசுக்கடி பாதிப்புக்கும் உள்ளாகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.
தீர்வு என்ன ?
பேருந்து நிலையத்தின் வாயில்களில் நடமாடும் கழிப்பறைகளை அமைத்தல், உள்ளிருக்கும் கழிவறைக்கான வழிகாட்டி பதாகைகள் வைத்தல், இலவச கழிப்பறைகளை தூய்மையான நிலையில் பராமரித்தல், கட்டண கழிப்பிடங்களில் குறைவான கட்டணம் வசூலித்தல் போன்றவை முன்னெடுக்கப்பட்டால், இந்நிலை மாறக்கூடும் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
தூய்மை பணியாளர்கள் கூறுவதாவது, தினமும் அனைத்து கழிவறைகளுமே தூய்மைப்படுத்தப்படுகின்றன என்கின்றனர்.
இது குறித்து, அங்குள்ள போக்குவரத்து ஊழியர்களிடம் கேட்கும்போது, ``எங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை ! பேருந்தை இயக்குவது தான் எங்கள் பணி ! இதையெல்லாம் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கின்றனர்.





மேலும், சேலம் மாநகராட்சியின் சூரமங்கலம் மண்டல உதவி ஆணையர் திரு.ஏகராஜை தொடர்பு கொண்டு பேசினோம். அவர், ``மாநகராட்சியின் சார்பில் இருந்து தொடர் தூய்மைப் பணிகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. தினந்தோறும் குறைந்தது 7- 10 பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
சுமார் ஏழு இடங்களில் கழிப்பறைகளும் உள்ளன. சமீபத்தில் மக்களின் குறைவான வருகையினால் 1 இடத்தில் கழிப்பறை மூடப்பட்டும் உள்ளது, மேலும் ஒரு கழிப்பறை மீட்டுருவாக்கமும் செய்யப்பட்டு வருகிறது. அதிக கட்டணம் வசூலித்தல் தொடர்பாக வந்த புகாருக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பதாகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆகையால் அரசின் சார்பிலிருந்து தொடர் பணிகள் நடைபெற்று கொண்டேதான் இருக்கின்றன. மக்களின் பொறுப்பற்றத் தன்மையே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
அடுத்தக்கட்ட நடவடிக்கைகள்..
மக்களின் கோரிக்கையின் படி வாயிலில் நடமாடும் கழிப்பறை வைப்பது பற்றி ஆலோசனை செய்கிறோம். கழிவறைக்கான வழிகாட்டி பதாகைகள் விரைவில் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
ஆயிரம் ஆயிரம் மக்கள் புழங்கும் இத்தகைய முக்கிய பேருந்து நிலையத்தில், சுகாதாரம் பேண வேண்டியது, அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் பொறுப்பு மட்டுமல்ல... பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும் மக்களும், இந்த அவலத்துக்குப் பொறுப்பேற்று, நிலையத்தின் தூய்மையைக் காக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும்!












