TVK : முதுகுளத்தூரை கேட்கும் இமானுவேல் சேகரன் பேரன்! - முட்டுக்கட்டை போடுவது யார...
சென்னை: `தனிமையில் சந்திக்கலாம் வா' - தனியார் ஊழியரிடம் பெண் குரலில் பேசி வழிப்பறி செய்த டிரைவர்கள்
சென்னை, அயப்பாக்கத்தில் வசித்து வருபவர் லோகநாதன் (23). இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 16.03.2026-ம் தேதி இரவு செல்போன் செயலி மூலம் பெண் ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். லோகநாதனும் அந்தப் பெண்ணுடன் பேசியபோது இருவரும் தனிமையில் சந்திக்க முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி 17-ம் தேதி அதிகாலையில் மதுரவாயல் மேம்பாலம் அருகில் அந்தப் பெண்ணை சந்திக்க லோகநாதன் சந்தோஷமாக சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் லோகநாதனை சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள்.

பின்னர் லோகநாதனின் பைக், செல்போனை பறித்துக் கொண்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றது. அதனால் அதிர்ச்சியடைந்த லோகநாதன், வானகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து லோகநாதனை மதுரவாயல் பைபாஸ் சாலைக்கு வரவழைத்த பெண் யார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவரோடு போனில் பேசியது பெண் இல்லை, ஆண் எனத் தெரியவந்தது. இதையடுத்து லோகநாதனின் பைக், செல்போனை பறித்துச் சென்றது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அப்துல் ரகுமான் (20), சரத்குமார்,(26) கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமலைவாசன்(29) எனத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் இவர்கள் மூன்று பேரும் சென்னையில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, தனியார் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வருவது தெரியவந்தது. இதில் முகமது அப்துல் ரகுமான் மூலம் லோகநாதனை மதுரவாயல் வரவழைத்து இந்த வழிப்பறியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து லோகநாதனின் செல்போன், பைக்கை போலீஸார் மீட்டனர். பின்னர் குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய 4 செல்போன்கள், கத்தியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பிறகு மூன்று பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து வானகரம் போலீஸார் கூறுகையில், ``தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் லோகநாதன், பார்த்த செல்போன் செயலி மூலம் அறிமுகமான முகமது அப்துல் ரகுமான், தன்னை ஒரு பெண் என்று கூறியிருக்கிறார். அதோடு இருவரும் தனிமையில் சந்திக்கலாம் எனக் கூறி லோகநாதனை மதுரவாயல் பகுதிக்கு வரவழைத்திருக்கிறார். அதை நம்பி சென்ற லோகநாதனிடம் முகமது அப்துல் ரகுமான், பேசிக் கொண்டிருக்கும்போதுதான் அவரின் கூட்டாளிகளான சரத்குமாரும் திருமலைவாசனும் அங்கு வந்து லோகநாதனை மிரட்டியும் தாக்யும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட முகமது அப்துல் ரகுமான், சரத்குமார், திருமலைவாசன் ஆகியோரின் செல்போன்களை ஆய்வு செய்து வருகிறோம்'' என்றனர்.





















