நாம் தமிழர் சீமான் உருக்கமான பேச்சு, கண் கலங்கிய Audience - Nambikkai Awards Par...
"உன் கணவர் இறந்துவிடுவார்" - போதைப்பொருள் கொடுத்து பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடர்
நாசிக்கில் ஜோதிடராக இருப்பவர் அசோக் கராட். தன்னை கேப்டன் என்று அழைத்துக்கொண்ட அசோக் கராட், தான் கப்பலில் வேலை செய்து ஓய்வு பெற்ற அதிகாரி என்று அனைவரிடமும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.
இவர் தன்னிடம் வரும் பெண்களிடம் அவர்களது தனிப்பட்ட பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதாகக் கூறுவார். அவரை 2022-ஆம் ஆண்டில், 28 வயது பெண் ஒருவர் தனக்கு ஒரு திருமண வரன் அமைந்ததைத் தொடர்ந்து, அந்த ஜோதிடரை அணுகினார்.
அந்த ஜோதிடர் அவருக்கு ஒரு பதக்கத்தைக் கொடுத்து, அதை ஒருபோதும் கழற்றக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
இருப்பினும், ஒரு தேர்வு எழுதுவதற்காக அப்பெண் அந்தப் பதக்கத்தைக் கழற்றினார். துர்வாய்ப்பாக, ஒரு வாரத்திற்குள்ளாகவே அவரது திருமணப் பேச்சு முறிந்துபோனது. இதனால் ஜோதிடர் மீதான நம்பிக்கை அப்பெண்ணுக்கு மேலும் அதிகரித்தது.

இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஜோதிடர், தனக்கு தெய்வீக சக்திகள் இருப்பதாக அப்பெண்ணை நம்பவைத்து, சடங்குகளைச் செய்யுமாறு அப்பெண்ணைக் கட்டாயப்படுத்தினார்.
பின்னர், உடலை மரத்துப்போகச் செய்யும் ஒரு கலவையை அப்பெண்ணுக்குக் கொடுத்து, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததார். அதை எதிர்த்தால் அவருக்கு ஒருபோதும் திருமணம் நடக்காது என்று மிரட்டி இக்காரியத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 2022ம் ஆண்டில் இருந்து 2025ம் ஆண்டு வரை இது போன்று செய்து இருக்கிறார். அப்பெண் மட்டுமல்லாது அங்கு வரும் பெண்களிடம் இது போன்று அவர்களது பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதாகக் கூறி அவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
அதோடு அந்த ஜோதிடர் பெண்களின் மனதில் அவர்களின் கணவர்களுக்கு மரணம் நேரிடும் என மிரட்டியோ அல்லது மாந்திரீகச் சடங்குகள் தொடர்பான பயத்தை ஏற்படுத்தியோ அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
ஜோதிடர் தனது அலுவலகத்தில் ரகசியமாகக் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வைத்திருந்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 28 வயது பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
58 பெண்களின் ஆபாச படங்கள்
அவரை நேரடியாகச் சென்று கைது செய்தால் பிரச்னை ஏற்படும் என்று கருதிய போலீஸார் அவரது வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டு திருடன், திருடன் என்று கூறி கூச்சலிட்டனர். அந்நேரம் ஏற்பட்ட பரபரப்பில் போலீஸார் ஜோதிடர் வீட்டிற்குள் நுழைந்து படுக்கை அறையில் இருந்த அசோக்கைக் கைது செய்தனர்.
அவரிடமிருந்து பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆய்வு செய்தபோது 58 பெண்களின் ஆபாச படங்கள் இருப்பது தெரிய வந்தது.
அவர் தனது அலுவலகத்தில் ஓகஸ் பிராபர்டி டீலர் என்று பெயர் வைத்திருந்தார். ஆனால் ஒருபோதும் அத்தொழில் செய்தது கிடையாது என்று போலீஸார் தெரிவித்தனர். அதோடு சமுதாயத்தில் தன்னை மிகவும் அந்தஸ்துள்ள ஜோதிடராகக் காட்டிக்கொண்ட அசோக் அரசியல்வாதிகளுடன் நெறுங்கிய தொடர்பு வைத்திருந்தார்.
நாசிக் அருகில் உள்ள மிர்கான் பகுதியில், அவருக்குச் சொந்தமான ஈசான்யேஸ்வர் கோயிலும், ஒரு ஆடம்பரமான ஓய்வு இல்லமும் அமைந்துள்ளன. அங்கு பல முக்கியப் பிரமுகர்களும், அரசியல்வாதிகளும், செல்வாக்கு மிக்க நபர்களும் அடிக்கடி வருகை தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
போலீஸார் அவரது பண்ணை வீட்டில் ரெய்டு நடத்தியதில் துப்பாக்கி மற்றும் தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர அவருக்குச் சொந்தமான கோயிலிலும் ரெய்டு நடத்தி முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா முழுவதும் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க மாநில அரசு ஐ.பி.எஸ். அதிகாரி தேஜஸ்வினி தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து இருக்கிறது.



















