ஒரே இரவில் 'ஓகே' ஆன கூட்டணி; கச்சிதமாக முடித்த மூவர் அணி! - திமுக முகாமில் தேமுத...
சென்னை: வீட்டு ஓனரின் மகளை நம்பவைத்து நூதனமுறையில் ஏமாற்றிய அப்பா, மகள் - தங்க நகைகளுடன் கைது!
திருவண்ணாமலை மாவட்டம், கருடாழ்வார் நகரைச் சேர்ந்தவர், புனிதாஸ்ரீ (22). இவரின் வீட்டின் கீழ் தளத்தில் கோவையைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவர், மனைவி மற்றும் மகளுடன் வாடகைக்கு வசித்து வந்தார். அப்போது புனிதாஸ்ரீ குடும்பத்துடன் ஜெகதீஸ் குடும்பத்தினர் நன்றாகப் பழகி வந்தனர். குறிப்பாக புனிதாஸ்ரீயிடம் ஜெகதீஸின் 16 வயது மகள், தங்கைபோல பழகி வந்திருக்கிறார். இந்த நிலையில் 16.06.2025-ம் தேதி புனிதாஸ்ரீயை சென்னைக்கு ஜெகதீஸ், அவரின் மகள் ஆகியோர் அழைத்துச் சென்றனர். இவர்கள் அனைவரும் காரில் திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு வந்தனர்.

சென்னையில் போட்டோ ஷூட் எடுக்கலாம் எனக் கூறி புனிதாஸ்ரீயிடம் தங்க ஆரம், தங்கச்சங்கிலி, மோதிரம், கம்மல் என 16 சவரன் தங்க நகைகள் ஆகியவற்றைக் கொண்டு வரும்படி ஏற்கெனவே ஜெகதீஸ் கூறியிருந்தார். அதன்படி புனிதாஸ்ரீயும் தங்க நகைகளை வீட்டிலிருந்து எடுத்து வந்தார். அதைத் தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள ஒரு துணிக்கடைக்கு புனிதாஸ்ரீ, அவரின் தம்பி மற்றும் ஜெகதீஸ் அவரின் மகள் ஆகியோர் சென்றனர். அங்கு புனிதாஸ்ரீக்கும் அவரின் தம்பிக்கும் ஜெகதீஸ் புதிய துணிகளை எடுத்துக் கொடுத்தார். அதை அங்குள்ள உடைமாற்றும் அறைக்கு எடுத்துச் சென்று போட்டு பார்க்குமாறு ஜெகதீஸ் புனிதாஸ்ரீயிடம் கூறினார்.
உடனே புதிய டிரஸ் போட்டு பார்க்கும் ஆசையில் புனிதாஸ்ரீ, தான் வைத்திருந்த தங்க நகைகளை ஜெகதீஸிடம் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார. பின்னர் புனிதாஸ்ரீ வெளியில் வந்து பார்த்தபோது ஜெகதீஸ், அவரின் மகளான 16 வயது சிறுமி ஆகியோர் அங்கு இல்லை. அதனால் வணிக வளாகம் முழுவதும் புனிதாஸ்ரீயும் அவரின் தம்பியும் ஜெகதீஸையும் அவரின் மகளையும் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து புனிதாஸ்ரீ, போன் மூலம் தன்னுடைய குடும்பத்தினருக்கு ஜெகதீஸ் குடும்பம் குறித்து விசாரித்திருக்கிறார். அப்போது ஜெகதீஸ் குடும்பம் வீட்டுக்கு வரவில்லை எனத் தெரியவந்தது. அவர்களது குடும்பத்தினரின் செல்போன்கள் அனைத்தும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகே ஜெகதீஸ் குடும்பத்தினர் மீது புனிதாஸ்ரீக்கு சந்தேகம் எழுந்தது.

பின்னர், அண்ணாசாலை காவல் நிலையத்தில் 16 சவரன் தங்க நகைகள், செல்போன்கள் ஆகியவற்றை நூதன முறையில் ஏமாற்றி எடுத்துச் சென்ற ஜெகதீஸ், அவரின் மகளான 16 வயது சிறுமி ஆகியோர் மீது புனிதாஸ்ரீ புகாரளித்தார். அதன்பேரில் அண்ணாசாலை போலீஸார் வழக்குப்பதிந்து ஜெகதீஸையும் அவரின் மகளையும் தேடிவந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த ஜெகதீஸ்(52) அவரின் மகளான 16 வயது சிறுமியை போலீஸார் கண்டுபிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போதுதான் ஜெகதீஸின் சுயரூபம் வெளியில் தெரியவந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீஸ், அவரின் குடும்பத்தினர் வாடகை வீட்டுக்கு செல்லும் இடங்களில் வீட்டின் ஓனரிடம் நெருங்கிப் பழகி தங்க நகைகளை ஏமாற்றுவதை வாடிக்கையாக வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதைப் போல புனிதாஸ்ரீயிடம் இருந்து ஏமாற்றிய 16 சவரன் தங்க நகைகளை ஜெகதீஸிடமிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜெகதீஸின் மகளான 16 வயது சிறுமியை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் போலீஸார் சேர்த்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஜெகதீஸ், சென்னை சாஸ்திரி நகர், வேளச்சேரியில் வாடகைக்கு வீடு எடுத்து அந்த வீட்டின் ஓனர்களையும் ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு ஜெகதீஸ், சிறையில் அடைக்கப்பட்டார்.




















