விஜய்: 23-ம் தேதி வேலூர் வருகை... பந்தல், நாற்காலி வசதியுடன் போலீஸ் 20 நிபந்தனைக...
கட்டாய கடன் வசூலுக்கு தடை! - புதிய சட்டத்தின் 'முதல்' கைது... அத்துமீறும் நிதி நிறுவனங்களுக்கு செக்!
தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெறும் ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழுக்கள், குடும்ப சூழல் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் தவணையை செலுத்த முடியாத நிலைக்குச் செல்கின்றனர்.
அதனால் அந்தக் கடனை வசூலிக்கச் செல்லும் தனியார் நிதி நிறுவன ஊழியர்களால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் அந்த மக்கள், தற்கொலை வரை செல்கிறார்கள். கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் அப்படியான சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.
அதிலிருந்து மக்களை பாதுகாக்க முடிவெடுத்த தமிழக அரசு, கடந்த 2025 ஜூன் மாதம், `தமிழ்நாடு பணம் கடன் வழங்கும் நிறுவனங்களின் கட்டாய நடவடிக்கைகளை தடுத்தல்' என்ற சிறப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்த சட்டத்தின் 20-வது பிரிவு, `கடன் தொகையை வசூலிக்கும்போது, கடன் பெற்றவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நிதி நிறுவனங்களின் கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தக் கூடாது' என்று கூறுகிறது.

தற்போது அந்த சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் முதல் வழக்கு விழுப்புரத்தில் பதிவு செய்யப்பட்டு, தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பெண்ணைவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாஸ்.
இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனம் ஒன்றிலிருந்து ரூ.9.84 லட்சம் கடன் பெற்று பொக்லைன் இயந்திரம் ஒன்றை வாங்கினார். ஆரம்பத்தில் குறித்த நேரத்தில் தவணைத் தொகையை செலுத்திய அப்பாஸ், கடந்த இரண்டரை ஆண்டுகளாக தவணைத் தொகையை செலுத்தாமல் இருந்து வந்திருக்கிறார்.
அதன்படி 2025-ம் ஆண்டு வரை ரூ.15,97,660/- செலுத்தியிருக்க வேண்டிய அப்பாஸ், ரூ.5,20,680/- மட்டுமே செலுத்தியிருக்கிறார். அவர் செலுத்த வேண்டிய ரூ.10.80 லட்சம் பாக்கித் தொகையை வசூலிக்கும் நடவடிக்கைகளில் தனியார் நிதி நிறுவனம் இறங்கியிருக்கிறது.
அதனடிப்படையில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அந்த தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளர்கள் மூர்த்தி மற்றும் தீபஜோதி உள்ளிட்ட நான்கு பேர், பெண்ணைவலம் கிராமத்திலிருக்கும் அப்பாசின் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர்.
அங்கு அவர் இல்லாததால் அவரது செங்கல் சூளைக்குச் சென்றனர். அப்போது கடன் தொகையை செலுத்தாத அப்பாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை, மூர்த்தி, தீபஜோதி உள்ளிட்டவர்கள் கடுமையாக திட்டித் தீர்த்திருக்கின்றனர்.
விரைவில் கடனை திருப்பித் தந்துவிடுகிறேன் என்று அப்பாஸ் கூறியதை பொருட்படுத்தாத அந்த அதிகாரிகள், பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்ய முயற்சித்திருக்கின்றனர். அதில் மனமுடைந்த அப்பாஸ் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை தமிழ்நாடு பணம் கடன் வழங்கும் நிறுவனங்களின் கட்டாய நடவடிக்கைகளை தடுத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸார், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மூர்த்தி மற்றும் தீபஜோதியை கைது செய்தனர்.
இதன் மூலம் தமிழ்நாடு பணம் கடன் வழங்கும் நிறுவனங்களின் கட்டாய நடவடிக்கைகளை தடுத்தல் சிறப்பு சட்டத்தின் முதல் வழக்கு, தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் பதிவாகியிருக்கிறது. இந்த தகவலை தமிழ்நாட்டு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி (பொறுப்பு) வெங்கட்ராமன் தெரிவித்திருக்கிறார்.



















