செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர்; ஜி.கே.எம் தமிழ்குமரன்.? - வெளியான காங்கிரஸ் ...
தஞ்சை: `நடவடிக்கை எடுத்தது வேதனையாக உள்ளது; சுயேச்சையாகப் போட்டியிடுவது உறுதி' - பாஜக-வில் சலசலப்பு
அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைமை, அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தத்தை தஞ்சாவூர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது. இது, பா.ஜ.க-வின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் முரளிதரனை, கடும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. முரளிதரன், தனக்கு சீட் கிடைக்காது என்பது உறுதியானதால், வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் முன்னரே... தஞ்சாவூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்கு கடந்த மாதம் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து கடந்த இரண்டு நாள்களாக தொகுதிக்குள் பிரசாரத்திலும் ஈடுபட்டார். இது பாஜக வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமை உறுதிசெய்த வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக நிற்கும் முடிவை முரளிதரன் எடுத்தது, கட்சி வட்டாரத்தில் சலசலப்பைக் கிளப்பியது.
இந்நிலையில், பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முரளிதரனை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``முரளிதரன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், அவர் வகித்து வந்த கட்சியின் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார். கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் முரளிதரனிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சிலரிடம் பேசினோம். ``அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் தஞ்சாவூர் தொகுதியில் முருகானந்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டவர் கருப்பு முருகானந்தம். தற்போது சட்டமன்றத் தேர்தலுக்கும் அவரையே நிறுத்தும் முடிவை எடுத்திருப்பது, கட்சிக்குள் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது.

இந்தச் சூழலில் சுயேச்சையாக மனுதாக்கல் செய்தார் முரளிதரன். இது குறித்து கருப்பு முருகானந்தம் தரப்பு தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. அதன் பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.
இது குறித்து முரளிதரன் கூறியதாவது, ``தஞ்சாவூர் தொகுதிக்கு என்னை வேட்பாளராக அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கையில், நான் வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தைத் தொடங்கினேன். ஆனால் இன்று என்னை கட்சியில் இருந்து தலைமை நீக்கிவிட்டது. கட்சி தலைமையின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். பாஜக வேட்பாளர் பட்டியல் வெளிவந்த பிறகு என் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதற்கு முன்பே நடவடிக்கை எடுத்தது வேதனையாக உள்ளது. இருந்தாலும் நான் தஞ்சாவூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவது உறுதி" என்றார்.















