தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் பாஜக முத்திரை! - வலுக்கும் கண்டனங்கள்
தஞ்சை: விஜய் வாகனத்தைப் பின்தொடர்ந்ததில் விபத்து: சிகிச்சையில் இருந்த கல்லுாரி மாணவர் பலி
தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிப்பட்டியில், கடந்த 4ம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். திருச்சியில் இருந்து கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த விஜய்யின் வாகனத்தை, கட்சித் தொண்டர்கள் பலர் டூவீலரில் பின்தொடர்ந்து வந்தனர். விஜய் வாகனத்தைப் பின்தொடர வேண்டாம் என தவெக நிர்வாகிகள் எச்சரித்தனர்.

இந்நிலையில், திருச்சி, கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் விக்னேஷ், 19, அவரது நண்பர் ஹாரூண், 20 இருவரும் டூவீலரில் பின்தொடர்ந்து வந்த போது விபத்தில் சிக்கினர்.
இதில் விக்னேஷ்க்கு தலையில் பலமாக அடிப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
காலில் பலத்த காயம் ஏற்பட்ட ஹாரூணுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து செங்கிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில், விக்னேஷை தவெக நிர்வாகிகள் கண்டு கொள்ளவில்லை என விமர்சனம் எழுந்தது. இதையடுத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தஞ்சாவூர் எம்.பி., முரசொலி ஆகியோர் சிகிச்சையில் இருந்த ஹாரூணை மட்டும் சந்தித்து ஆறுதல் கூறி சென்றனர்.
விக்னேஷ் ஐ.சி.யு வார்டில் இருந்ததால் அவரைச் சந்திக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதைதொடர்ந்து தவெக மத்திய மாவட்ட கழகம் சார்பில் சிகிச்சைக்குச் செய்யப்பட்ட செலவு உள்ளிட்ட விவரங்களுடன் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், விக்னேஷ்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் அவரது பெற்றோர் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் இருந்து, கடந்த மார்ச். 20ம் தேதி, டிஸ்சார்ஜ் செய்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காகச் சேர்ந்தனர்.
அங்கு சிகிச்சை இருந்த விக்னேஷ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


.jpeg)













