Karuppu: "ஏ.ஆர். ரஹ்மான் விலகிய பிறகு, சாய் அபயங்கரைத் தேர்வு செய்தது ஏன்?" - ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்
ஆர்.ஜே. இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் மே 14-ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் த்ரிஷா, நட்டி, ஸ்வாசிகா எனப் பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களிலிருந்து 'காட் மோட்' பாடல் முதல் சிங்கிளாக சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்கள். இன்று இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

தற்போது 'கருப்பு' திரைப்படம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு ஆர்.ஜே. பாலாஜி பேட்டியளித்திருக்கிறார். இந்தப் பேட்டியில், 'கருப்பு' படத்திலிருந்து ஏ.ஆர். ரஹ்மான் விலகியப் பிறகு, இசையமைப்பாளராக சாய் அபயங்கரைத் தேர்வு செய்ததற்கான காரணத்தை ஆர்.ஜே. பாலாஜி விளக்கியிருக்கிறார்.
அவர், "பலரும், 'ரஹ்மான் சார் போன்ற பெரிய இசையமைப்பாளர் விலகினால், அடுத்து வரும் இசையமைப்பாளரும் அதே லெவலில் இருக்க வேண்டும்' என நினைத்திருப்பார்கள்.
ஆனால் நான் அப்படி பார்க்கவில்லை. இந்தப் படத்திற்கு முன்பு நான் சாய் அபயங்கரைச் சந்தித்ததே இல்லை. அவரிடம் நான் அபரிமிதமான எனர்ஜியைப் பார்த்தேன். அந்த எர்ஜியை முழுமையாகப் பயன்படுத்த விரும்பினேன்.
அதை தயாரிப்பு குழுவிடமும் சூர்யா சாரிடமும் சொன்னேன். இயல்பாகவே அது எல்லாருக்கும் சர்ப்ரைஸ்தான். ஏனென்றால் ரஹ்மான் சாரை விட்டு ஒரு புதியவரைக் கொண்டுவருவது பெரிய மாற்றம். ஆனால் நான் என்னை நம்புங்கள் என்றேன். இது சாய் அபயங்கரின் முதல் பெரிய படம்தான்.

ஆனால் இப்போது அவர் இதுபோன்ற பல புராஜெக்ட்களில் கமிட்டாகி இருக்கிறார். இன்று எல்லாரும் இது சரியான முடிவு என்று உணர்கிறார்கள். சாய் அபயங்கருடன் நீங்கள் தொடர்ந்து உட்கார்ந்திருக்க வேண்டியதில்லை. தினமும் எதாவது ஒரு அவுட்புட்டைக் கொடுத்துவிடுவார்.
நேரம் தேவைப்பட்டால் தெளிவாகச் சொல்வார். அந்தத் தெளிவுதான் ப்ராசஸைச் சுலபமாக்கியது. ஒவ்வொரு ஜெனரேஷனுக்கும் அதன் சொந்த இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அடுத்த ஜெனரேஷன் அவருடைய பாடல்களை இன்னும் அதிகம் கேட்கப் போகிறது என்று நினைக்கிறேன்.
அவர், அவருடைய ஸ்டைலிலேயே இசையமைக்க வேண்டும் என்று விரும்பினேன். நான் அவருக்குக் கிட்டத்தட்ட எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கவில்லை" எனக் கூறியிருக்கிறார்.

















