Iran நோக்கி விரையும் US படைகள் - Middle Eastல் போர் பதற்றமா? | Trump | Khamenei ...
"தமிழக அரசு ரூ. 3000 கொடுத்துவிட்டு ரூ. 850 கோடியை TASMAC மூலம் பெற்றுக்கொண்டது" - சௌமியா அன்புமணி
மகளிர் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ள பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது, ''தமிழகத்தில் பெண் தெய்வ வழிபாடுகள் உண்டு, ஆனால், பெண்களுக்கு இங்கு மரியாதை இல்லை, தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக மூவாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு 850 கோடி ரூபாயை டாஸ்மாக் மூலம் பெற்றுக்கொண்டது.

டாஸ்மாக் காலி மது பாட்டில்களைச் சேமித்து வைக்க குடோன் இருக்கும்போது விவசாயிகளின் மலர்களைச் சேமித்து வைக்க குடோன் இல்லை. மலர் விவசாயம் மட்டுமல்ல, தென்னை விவசாயம், மா விவசாயம் என எந்தவொரு விவசாய வளர்ச்சிக்கான கட்டமைப்பும் இந்த ஆட்சியில் செய்யப்படவில்லை.
மாவுக்கு மதிப்புக்கூட்ட இப்பகுதியில் தொழிற்சாலை இல்லை, ஆனால், இப்பகுதி இளைஞர்களுக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுப்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். மா விவசாயமும் பெருமளவு குறைந்துவிட்டது.
மாவிற்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியைத் தரம் உயர்த்தியதால்தான் நாம் அதைப் பயன்படுத்தி வருகிறோம். இல்லையென்றால் பெங்களூருக்குத்தான் செல்ல வேண்டும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி இருந்தபோது கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் திட்டம் மூலம் இன்றும் மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.

மூன்று போகம் விளைச்சல் தரும் விளைநிலத்தைப் பறித்து தொழிற்சாலை அமைப்பது நல்லதல்ல. ஒகேனக்கல் குடிநீர் திட்டம், மாவட்டத்தில் பல பகுதிகளுக்குப் போய்ச்சேரவில்லை. அதேபோல் கிராமங்களுக்குச் சரியான பேருந்து வசதிகள் இல்லை, இந்தப் பகுதியில் கல்லூரிகள் கிடையாது.
கிரானைட் குவாரிகளில் வெடி வைப்பதால் விலங்குகள் ஊருக்குள் வருகின்றன. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக இக்குவாரிகளுக்கு 200 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் கோடி சம்பாதிக்கும் கிரானைட் நிறுவனங்களுக்கு அபராதத்தைக் கட்ட இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகள் வாங்கும் கடனுக்கு இவ்வளவு சலுகைகள் கொடுப்பது இல்லை.
மதுவால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. மக்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுப்பவர் அன்புமணி ராமதாஸ்.
நாம் நன்றாக இருக்க வேண்டும், நம் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கட்டாயம் வேண்டும், அதை உணர்ந்து வாக்களியுங்கள். மதுக்கடைகளை மூடுவதாகக் கூறிவிட்டு புதிய மதுக்கடைகளைத் திறப்பவர்களுக்கு நீங்கள் வாக்களிக்கக் கூடாது" என்று பேசினார்.














