Mecca Pact: மூன்று பெரும் சக்திகள் அமைத்த 'மினி NATO?' - இந்தியாவை மிரட்டவா, ஈரா...
``தமிழ் மீதான தவறான விமர்சனத்திற்கு மன்னிப்பு கோர வேண்டும்" - அமைச்சர் மரிய வில்சனைச் சாடும் பாஜக
நேற்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய நிதித்துறை அமைச்சர் மரிவில்சன், ''நான் பிறப்பால் கிருஸ்தவன். என் மதம் எனக்கு அன்பு, கருணை, இரக்கத்தின் மொழியைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. இது தமிழ் படித்தவர்களுக்குக் கூட தெரியாது. நான் பைபிளில் படித்துள்ளேன்" என உரையாற்றினார்.
அமைச்சர் மரிய வில்சனின் இந்தப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``எம் தமிழ் மொழியின் ஆளுமையுடன், ஒரு மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரிதானா அமைச்சர் மரியவில்சன் அவர்களே?

சட்டமன்றத்தில் உங்கள் மொழியாற்றல் மீதான விவாதத்தின் போது, “எனது மதம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது” என்பதோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் அது உங்களின் தனிப்பட்ட அனுபவம். ஆனால், “எனது மதம் எனக்கு கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது” என்று நீங்கள் கூறுவது, தமிழின் மீதான தாக்குதலாகத்தான் தெரிகிறது.
“அன்பு” என்ற வார்த்தைக்கு பல மதங்கள் கற்பித்த பல அர்த்தங்களை, "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்ற ஒற்றை வரியில் தூக்கி சாப்பிட்ட மொழிதான் நம் தாய் மொழி தமிழ்.
“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை விட, இரக்கத்தைப் பற்றி இவ்வுலகில் வேறு யாரால் நுட்பமாக எடுத்துரைக்க முடியும்? “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற புறநானூற்றுப் பாடலை நீங்கள் சரியாகப் படித்து புரிந்திருந்தாலே, “அமைதி” என்ற வார்த்தைக்கு தமிழ் மொழியில் உள்ள ஆழமான அர்த்தம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
பிறப்பால் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், உணர்வால் நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சட்ட மன்றத்தில் கூட உங்கள் கட்சி தலைமையும் அதைத்தானே சுட்டிக்காட்டினார்? அப்படியிருக்கையில் உங்கள் மதத்தை நீங்கள் உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழ் மொழியை நீங்கள் தாழ்த்துவதை ஒரு போதும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இன்று உணர்ச்சி மிகுதியில் தமிழ் மொழி மீது வைத்த தவறான விமர்சனத்திற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "காலையில் தமிழை உயர்த்தி தமிழ்த்தாய்க்காகத் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். மாலையில் ஆளும் கட்சியைச் சார்ந்த ஓர் அமைச்சரே தமிழுக்கும் அன்புக்கும் சம்பந்தமில்லை என்பதை போலவும் அன்பை அவர் சார்ந்துள்ள மதம் மட்டும்தான் போதிப்பதைப் போன்றும் பேசி இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அன்பே சிவமென்று இவர் சொல்லும் மதத்திற்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆன்மீகத்தோடு தமிழ் அன்பைப் போதித்திருக்கிறது. அனைவரின் தாய் மொழியை மதிக்கிறேன். அதே நேரத்தில் காலையில் தமிழுக்காகத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, மலையாளத்தில் எழுதி தமிழைப் பேசும் விசித்திரமும் தமிழக சட்டமன்றத்தில்தான் நடந்திருக்கிறது.
ஆக இவர்கள் சொல்வது ஒன்று நடப்பது ஒன்று. ஆக தமிழ் இவர்கள் வாயளவில்தான் இருக்கிறதே தவிர வாழ்க்கையில் இல்லை என்பதை இவர்கள் உணர்த்துகிறார்கள்" எனப் பதிவிட்டிருக்கிறார்.















