தமிழ்த்தாய் வாழ்த்து: "இந்தப் போக்கு தொடரவேண்டும்!" - தவெக அரசை பாராட்டும் கமல்ஹ...
சர்ச் நிர்வாகம் யாருக்கு? ஆர்த்தடாக்ஸ் - யாக்கோபாய பாதிரியார்கள் மோதல்; 22 பேர் மீது வழக்கு
கேரள மாநிலத்தில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆர்த்தோடாக்ஸ் பிரிவினருக்கும், யாக்கோபாய பிரிவினருக்கும் இடையே சில சர்ச்களை நிர்வகிப்பது சம்பந்தமாக வழக்கு நடைபெற்று வருகிறது.
சில சர்சுகள் சம்பந்தமாக கோர்ட் அளித்த தீர்ப்புகள் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்களும் இருந்துவருகின்றன. எர்ணாகுளம் மாவட்டம் பிறவம் பகுதியில் உள்ள பிறமாடம் சர்ச் நிர்வாகம் சம்பந்தமாக ஆர்த்தோடாக்ஸ் சபை மற்றும் யாக்கோபாய சபையினரிடையே மோதல் இருந்து வருகிறது.
அந்தச் சர்ச் நிர்வாகம் சம்பந்தமான வழக்கில் யாக்கோபாய சபையினருக்குச் சாதகமாக மூவாற்றுப்புழா சப் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்த்தோடாக்ஸ் சபையைச் சேர்ந்தவர்கள் பிறமாடம் சர்ச்சுக்குள் வழிபாட்டுக்காகச் சென்றுள்ளனர்.
அப்போது அவர்களை யாக்கோபாய சபையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பாதிரியார்கள் உள்ளிட்டோர் மாறி மாறி அடித்துக்கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

புனிதமாகக் கருதப்படும் பலிபீடம் அருகே இருதரப்பினரும் மோதிக்கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து ராமமங்கலம் போலீசார் இரு தரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாகத் தடுத்து நிறுத்துதல், அபாண்டமாகப் பேசுதல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோர்ட் உத்தரவுபடி சர்ச்சுக்கு வந்த ஆர்த்தடாக்ஸ் சபையினரைத் தடுத்து நிறுத்தி தாக்குதலில் ஈடுபட்டதாக யாக்கோபாய சபை பாதிரியார் லால்மோன் பட்டருமடம் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
அதுபோன்று, சர்ச்சுக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஆர்த்தடாக்ஸ் பாதிரியார் எபின் ஆபிரஹாம் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இருதரப்பையும் சேர்ந்த பாதிரியார்கள் உள்பட 22 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இரு சபைகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சினையில், தேவைப்பட்டால் அரசுத் தரப்பில் மத்தியஸ்தம் வகிக்கத் தயாராக இருப்பதாகக் கேரள அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆர்த்தடாக்ஸ் மற்றும் யாக்கோபாய சபையினரிடையே சர்ச்சுகளை நிர்வகிப்பது சம்பந்தமாக சட்டப் போராட்டங்களும், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களும் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த விவகாரம் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
















