குடும்பத்துக்கு பயந்து ரூ.5 லட்சத்தை புதைத்து வைத்த விவசாயி - அரித்து சேதப்படுத்...
மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை; யாருக்கும் தெரியாமல் எரித்த வனத்துறையினர் - அதிர்ச்சி பின்னணி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச் சரகம், அத்தாணி பிரிவு, மாதையன் கோயில் காப்புக்காடு பகுதியில் சுமார் 3 மாதங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. அதன் உடல் முழுமையாக அழுகி சிதைந்த நிலையில் இருந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனவிலங்குகள் இறந்தால், அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை செய்த பின்னரே சிறுத்தை போன்ற விலங்குகளின் உடலை முறைப்படி எரிக்க வேண்டும்.
ஆனால், அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்ட வனக் காப்பாளர் மைதிலி மற்றும் வனக் காவலர் பிரவீன் ஆகிய இருவரும் சிறுத்தை இறப்பு குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

மேலும், அழுகிய நிலையில் இருந்த சிறுத்தையின் நகங்கள், பற்கள் உள்ளிட்ட முக்கிய உடல் பாகங்களை எடுத்துச் சென்று தனியாக எரித்து அப்புறப்படுத்தியதாவும் கூறப்படுகிறது. இந்த விதிமீறல் குறித்து ரகசியத் தகவல்களைப் பெற்ற புதிய வனச்சரக அலுவலர் நந்தினி, அந்த இடத்திற்குச் சென்று நேரில் ஆய்வு செய்து குற்றத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார். வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தகவலை மறைத்து சிறுத்தையின் உடல் பாகங்களைச் சட்டவிரோதமாக அப்புறப்படுத்திய குற்றத்திற்காக மைதிலி மற்றும் பிரவீன் ஆகிய இருவரையும் மாவட்ட வன அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சிறுத்தையின் பற்கள் மற்றும் நகங்களை இவர்கள் கைப்பற்றி பதுக்கியுள்ளார்களா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


















