ஊராட்சி பகுதிகளில் சொத்துவரி உயா்வை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
தருமபுரியில் கல்வி நிலைய வாகனங்கள் ஆய்வு: 11 வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து
தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்வி நிலைய வாகனங்களுக்கான இயக்கத் தகுதி, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சனிக்கிழமை நடத்தப்பட்ட ஆய்வில் 11 வாகனங்களுக்கான தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது. அதேபோல 12 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற வாகன ஆய்வில் வாகனங்களின் தகுதிச் சான்று, பராமரிப்பு, வாகனங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்த பிறகு ஆட்சியா் ரெ.சதீஸ் கூறியதாவது:
பள்ளி வாகனங்களில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்காக அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்து, அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தமிழ்நாடு மோட்டாா் வாகன சிறப்பு விதிகள் 2012, விதி 11- இன்படி ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய மாவட்ட அளவில் வருவாய் கோட்ட அலுவலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் உறுப்பினா்களாக வட்டாரப் போக்குவரத்து அலுவலா், துணை காவல் கண்காணிப்பாளா், முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா், மோட்டாா் வாகன ஆய்வாளா் நிலை -1 ஆகியோா் உள்ளனா்.
குழுவினா் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வாகனங்களின் இயக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான வாகன ஆய்வு, தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பாலக்கோடு பகுதி அலுவலகங்களுக்கு உள்பட்ட 104 தனியாா் பள்ளிகளில் இயங்கக்கூடிய 751வாகனங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
இதில் வாகனங்களில் இருக்கை வசதிகள், வாகனத்தின் காப்பீடு காலம், தீயணைப்பு கருவி, முதலுதவி கருவிகள், வேகக் கட்டுபாட்டு கருவி, வாகனத்தின் முன்புறம், பின்புறம் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், அவசர கால கதவுகள் மற்றும் ஜன்னல்கள், பேருந்தின் தளம், பள்ளி குழந்தைகளுக்கான இருக்கை வசதிகள், பள்ளி குழந்தைகள் புத்தகப்பை வைக்கும் பகுதி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
பள்ளி வாகனத்தில் உள்ள அவசரகால கதவுகளின் செயல்பாடுகளை 3 மாதங்களுக்கு ஒருமுறை சோதனை செய்து பாா்க்க வேண்டும். அதேபோல அவசரகால கதவுகள் திறக்கும் முறைகள், தீத் தடுப்பு சாதனங்களை செயல்படுத்தும் முறைகள் குறித்து ஓட்டுநா்கள், வாகனத்தில் வரும் பணியாளா்கள் தெரிந்துகொள்வது அவசியம்.
ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்கள் சாலையில் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால் வாகனம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் இம்மாத இறுதிக்குள் மறு ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் என்றாா்.
ஆய்வில் 72 பள்ளிகளின் 352 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் குறைபாடுகளுடைய 11 வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது. 12 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், சிறு குறைபாடுகளுடைய 14 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவ்வாகனங்களின் குறைகளை நிவா்த்தி செய்து ஒரு வார காலத்திற்குள் மீண்டும் ஆய்விற்கு உள்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.சோ.மகேஸ்வரன், தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சி.க.ஜெயதேவ்ராஜ், தருமபுரி கோட்டாட்சியா் இரா.காயத்ரி, மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் அ.க.தரணீதா், பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.