`கோவையில் முழு வெற்றி கொடுங்கள்' - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்!
“களத்திற்கு வந்த மாப்பிள்ளை” - சபரீசனின் நேரடி அரசியல் என்ட்ரிக்கான சோதனையா?
அண்ணாநகர் தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மோகனின் மகன் கார்த்திக். இவர் தி.மு.க வின் தகவல் தொழில்நுட்ப அணிக்கு துணை செயலாளராக உள்ளார். மேலும் இவர் முதல்வரின் மருமகன் சபரீசனின் நெருங்கிய நண்பராக இருப்பதோடு, தி.மு.க தலைமைக்கும் நெருக்கமானவராக அறியப்படுகிறார்.
இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட கார்த்திக் விருப்பமனு அளித்திருந்தார். ஆனால், துணை முதல்வர் உதயநிதிக்கு நெருக்கமான சென்னை மாவட்டச் செயலாளர் சிற்றரசு, “அண்ணா நகர் தொகுதி தனக்கு வேண்டும்” என உதயநிதியிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். இதனால் அண்ணாநகர் தொகுதியை குறிவைத்திருந்த கார்த்திக் மோகனுக்கு வில்லிவாக்கம் தொகுதியை ஒதுக்கியது தி.மு.க தலைமை.

கார்த்திக்கை வில்லிவாக்கம் தொகுதிக்கு மாற்றியதில் மற்றொரு கணக்கும் தி.மு.க தலைமைக்கு இருந்தது. வில்லிவாக்கம் தொகுதியில் த.வெ.க சார்பில், ஆதவ் அர்ஜுனா களத்தில் இறங்கியுள்ளார். அவரை எதிர்த்து களமாடும் அளவுக்கு தகுதியான வேட்பளாராக அண்ணா நகர் கார்த்திக்கை பார்த்தது தி.மு.க தலைமை. அதோடு, அண்ணாநகர் கார்த்திக், ஆதவ் அர்ஜுனா, முதல்வரின் மருமகன் சபரீசன் மூவரும் ஒருகாலத்தில் நெருக்கமான நட்பு வட்டத்தில் இருந்தவர்கள். எனவே நண்பரை வைத்தே நண்பரை தோற்க டி க்க வேண்டும் என தி.மு.க யுக்தியை வகுத்துள்ளது.
இந்நிலையில் வில்லிவாக்கம் தொகுதியில் கடந்த ஒரு வாரமாக கார்த்திக் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று மாலை வில்லிவாக்கம் தொகுதியின் தி.மு.க பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. அந்த தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பிரசார வியூகம், தேர்தல் நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தெல்லாம் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட இருந்தது. இக்கூட்டத்திற்கு திடீரென எண்ட்ரி கொடுத்தார் முதல்வரின் மருமகன் சபரீசன்.
தி.மு.க-விற்காக பென் என்கிற வியூக வகுப்பு நிறுவனத்தை சபரீசன் நடத்திவருகிறார். கடந்த பத்து ஆண்டுகளாக, தி.மு.க விற்காக தேர்தல் வேலைகளையும் பின்னிருந்து பார்த்து வரும் முக்கிய நபராகவும் சபரீசன் இருக்கிறார். ஆனால்,இதுவரை நேரடியாக எந்த அரசியல் கூட்டங்களிலும் அவர் பங்கேற்றதில்லை. இந்நிலையில், நண்பரின் தேர்தல் வெற்றிக்காக முதல் முறையாக நேரடியாக அரசியல் களத்திற்கு எண்ட்ரி கொடுத்திருக்கிறார். தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வரின் மகளும், தனது மனைவியுமான செந்தாமரையுடன் பங்கேற்றார் சபரீசன். இவர்களுடன், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய சபரீசன், `வில்லிவாக்கம் தொகுதி நமக்கு சாதகமான தொகுதி. இங்கு வேட்பளாராக நிற்கும் கார்த்திக் எனது நண்பர். இந்த தொகுதியில் நான் நிற்பதும், கார்த்திக் நிற்பதும் ஒன்றே.

எனக்கு எப்படி நீங்கள் வேலை செய்வீர்களோ... அப்படி தான் கார்த்திக்கும் வேலை பார்த்து வெற்றிபெற வைக்க வேண்டும்' என்று நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.
அதன்பின்னர் அமைச்சர் சேகர்பாபுவிடம் தொகுதி நிலவரம் குறித்து ஆலோசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் சபரீசன் “த.வெ.க தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதே, அவரது தன்னம்பிக்கையின்மையை காட்டுவதாக அமைந்துள்ளது. தி.மு.க மீண்டும் ஆட்சியை பிடிக்கும்” என்றார்.
தி.மு.க சார்பாக டெல்லி அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கப்போகிறார் சபரீசன் என்கிற பேச்சு தி.மு.க-வில் உள்ளது. இந்நிலையில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து பிராசர களத்திற்கே சபரீசன் வந்துள்ளதால், விரைவில் நேரடி அரசியலுக்குள் முழுவீச்சில் இறங்கும் திட்டத்தில் மாப்பிள்ளை இருக்கிறாரோ? என்கிற பேச்சு தி.மு.க வில் எழுந்துள்ளது















