கேரளம்: லாட்ஜில் அறை எடுத்து குழந்தை பெற்ற பெண்; தாயும், சேயும் சடலமாக மீட்கப்பட...
தருமபுரி: மனைவி, மகளை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை; திமுக பிரமுகரின் அதிர்ச்சிச் செயல்
தருமபுரியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் மனைவி, மகளை கொலை செய்துவிட்டு லாரி முன் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த திமுக பிரமுகரான சந்தோஷ(45), மனைவி சரண்யா (36), 9 ஆம் படித்து வந்த மகள் சாத்விகா (14) ஆகியோருடன் தருமபுரி கோட்டை கோயில் அருகே டிஎன்வி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல மகள் சாத்விகாவை பள்ளியிலிருந்து அழைத்து வந்த சந்தோஷ், பின்னர் வீட்டில் வைத்து மனைவி, மகள் இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கிளம்பிச் சென்றுள்ளார்.
சந்தோஷ் வீட்டில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். அங்கு வந்து விசாரணை நடத்திய போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் லாரி முன் விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாருக்குத் தகவல் வர, அங்கு சென்ற போலீசாருக்கு தற்கொலை செய்து கொண்டது சந்தோஷ் என்பது தெரிய வந்தது.
மனைவி, மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சந்தோஷ், திமுக பிரமுகராகப் பலருக்கும் அறிமுகமாகனவர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மனைவி, மகளுடன் எடுத்துக் கொண்ட படம் அவரது வீட்டில் மாட்டப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் தொழிலில் சிறப்பாகச் செயல்பட்டு வந்தவருக்கு இடையில் தொழில் நஷ்டம் அடைந்ததாகவும், அதன் காரணமாக அதிக அளவில் கடன் வாங்கி, கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவத்திற்கு உண்மையான காரணத்தைப் பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் தருமபுரி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது













