வந்தே மாதரம்: ''நீங்கள் இந்த நாட்டில் வாழ விரும்பினால்..." - மேற்கு வங்க அரசின் ...
தவெக: `முக்கியப் பிரச்னைகளில் மௌனம்... மேடையில் நக்கல்' - முதல்வர் விஜய்யின் உரை அரசியல் அநாகரிகமா?
2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க 107 இடங்களுடன் சட்டமன்றத்துக்குள் நுழைந்தது. தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், வி.சி.க ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைக்கும்போதே, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஆளுநர் முன்னிலையில் மூன்றாம் இடம் அளித்தது சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து, 200 யூனிட் மின்சாரம் இலவசம், விவசாயிகளின் குறைந்தப்பட்ச பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்பைப் பெற்றன. அதேநேரம், புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் 'ரீல்ஸ் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்' என்ற விமர்சனம் கூடுதல் கவனம் பெற்றது.

தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் 'பவர் கட்' பிரச்னைகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், சட்டம் ஒழுங்கு அதளபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர். முதல்வர் விஜய்-யின் உத்தரவின்பேரில் டாஸ்மாக் மூடப்பட்டாலும், தனியார் பார்கள் திறக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவாக, சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வைரலானது.
எனவே, ஆட்சி அமைத்த சில வாரங்களிலேயே இவ்வளவு குற்றச்சாட்டுகளை எதிர்க்கொண்ட முதல்வர் விஜய், 'இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?' என மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது. இந்தச் சூழலில்தான் திருச்சி கிழக்கு தொகுதியில் வென்ற விஜய், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவிக்கவிருக்கிறார் என்றச் செய்தி வெளியானது. எனவே, த.வெ.க தொண்டர்கள் ஆரவாரத்துடன் காத்திருந்தனர்.
ஆனாலும், '5000 பேர் மட்டுமே முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியும், க்யூஆர் கோடு, கார்டு இருந்தால் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி' எனக் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும், த.வெ.க தொண்டர்களின் ஒரு குழு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு அருகில் 'அனுமதி கார்டு இருந்தும் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கவில்லை' எனப் போராட்டம் நடத்தின. இத்தனை களேபரத்துக்கு மத்தியில்தான் முதல்வர் விஜய் பேசப்போகும் பேருந்து மேடை கூடுதல் கவனம் பெற்றது.
மேடையில் மைக்கைப் பிடித்த விஜய், ``திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்குத் சிறப்பான நன்றி. தமிழகத்தின் இதயம் போன்ற திருச்சி, என் இதயத்திற்கும் நெருக்கமானது. புதிய ஆட்சி அமைந்ததும் 'ஆறு மாத காலத்திற்கு அமைதியாக இருப்போம்' என்று கூறிவிட்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற அரை மணி நேரத்திலேயே விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர் ஆகியோரின் வழியில் நடக்கும் தவெக கட்சி, 1977-ம் ஆண்டு தேர்தலை விட அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. நான் தமிழ்நாட்டின் முதன்மை சேவகன்.
தமிழக அரசியலில் த.வெ.க மற்றும் தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்கு இடையேதான் போட்டி. மற்ற அல்லு சில்லுகளுக்கு இங்கு வேலை இல்லை. தி.மு.க நமக்குச் செய்யும் எதிர்ப்புகள் அனைத்தும் நன்மையிலேயே முடியும். இளைய தலைமுறையைக் கவர தி.மு.க-வினர் காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள். தான் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் ஸ்டாலின் சார் மிகத் தீவிரமாக இருந்தார். `தற்குறிகள்... தற்குறிகள்' என்று விமர்சித்தவர்கள்தான் இன்று உங்கள் அரசியல் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளனர். தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டால் நல்லவர்கள், த.வெ.க-வுக்கு ஓட்டு போட்டால் தற்குறிகளா?

தி.மு.க-வினர் மக்களைத் தவறாகப் பேசினால் இந்த விஜய் சும்மா இருக்க மாட்டான், தட்டிக்கேட்பான். தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கத்தை தொடக்கத்திலேயே தடுக்கத் தவறிவிட்டனர். சட்டம் ஒழுங்குப் பிரச்னைக்குத் என் மீது பழி போடுகின்றனர். பெண்களின் பாதுகாப்புக்கான 'சிங்கப்பெண் படை' அடுத்த வாரமே அறிமுகம் செய்யப்படும். அரை நூற்றாண்டு கால சாதி, மத அரசியலைத் த.வெ.க உடைத்தெறிந்துள்ளது. திருச்சி இடைத்தேர்தலில் மக்களில் ஒருவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். அவரை ஆதரியுங்கள்" எனத் தேர்தல் வாக்கு சேகரிப்புடன் உரையை முடித்தார். 'நல்லா வாய்ல வருது...' உள்ளிட்ட முதல்வர் விஜய் உரையின் பெரும் பகுதி சமூக ஊடகங்களில் விமர்சனங்களை எதிர்க்கொண்டது.
அதைத் தொடர்ந்து, முதல்வர் விஜயின் உரைக்கு பதிலளித்த தி.மு.க எம்.பி.ஆ.ராசா, `` நூலிழை பெரும்பான்மையில் ஆட்சி அமைத்துவிட்டு, தனித்து பெரும்பான்மை பெற்றது போல விஜய் திருச்சியில் கத்தி, வீணான வீரவசனம் பேசியுள்ளார். முதலமைச்சர் நாற்காலியின் தகுதிக்குக் குறைவான, அரசியல் சட்ட ஒழுக்கமற்ற பேச்சு இது. சட்டமன்றத்திற்குள் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் பேப்பரைப் பார்த்துப் பதுங்கிய முதலமைச்சர் விஜய், வெளியே வந்து நக்கல், நையாண்டியுடன் கர்ஜிப்பது போல நினைத்து கத்திக்கொண்டிருக்கிறார்.
அ.தி.மு.க உள்ளிட்ட பிற கட்சிகளை 'அல்லு சில்லு' என விமர்சிக்கும் விஜய், அதே கட்சிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கெஞ்சிக் கூத்தாடி ஆதரவு பெற்றுத்தான் ஆட்சியைத் தக்கவைத்துள்ளார். தமிழ் தாய் வாழ்த்து, மும்மொழி கொள்கை, EWS இட ஒதுக்கீடு எதிர்ப்பு ஆகியவற்றில் தி.மு.க-வின் உறுதியான நிலைப்பாடுதான் ஸ்டாலின் சார் ஆட்சியின் வலிமை. ஆளுநரின் செயல்களையோ, பாசிசத்தையோ எதிர்க்கும் துணிச்சல் உங்களிடம் இருக்கிறதா?
தினசரி நடக்கும் கொலை, கொள்ளைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் 'சிங்கப் பெண்' திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு கூட செய்யாமல் வெறும் விளம்பரம் செய்கிறார். கோடைகால மின் தேவையை முன்கூட்டியே திட்டமிடத் தெரியாமல், மின்வெட்டுக்கு தி.மு.க மீது பழி போடுகிறார். 70 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாகப் பொய் விளம்பரம் செய்துவிட்டு, அதற்கு அருகிலேயே 'மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் மது விற்பனை நடத்த இந்த அரசு வழிவகை செய்துள்ளது. தி.மு.க-வையும் அதன் தலைவரையும் எப்போதும் குறை கூறிக் கொண்டிருக்காமல் குறைந்தபட்சம் அவரின் வாக்காளர்களில் 10 சதவிகிதம் பேரையாவது தக்க வைக்க முயற்சிக்கலாம். முதலமைச்சர், பொதுப்படையாகச் 'சூழ்ச்சி செய்கிறார்கள்' என்று பேசுவது இருட்டில் நின்றுகொண்டு 'பேய் வருது' என்று பயமுறுத்துவதற்குச் சமம்" என விமர்சித்திருந்தார்.

இந்த இரு தரப்பு கருத்தையும் கவனத்தில் எடுத்து, 'முதல்வர் விஜய்-யின் உரையை எப்படிப் பார்க்கிறீர்கள்?' என மூத்த ஊடகவியலாளர் தராசு ஷ்யாமிடம் பேசினோம். அவர், ``எளிமையான மேடை, மற்றும் அலங்காரம். வழக்கமான அலங்காரங்கள் இல்லாத பேச்சு இந்த இரண்டும் பாசிட்டிவ். மற்றபடி முதலமைச்சர் விஜய் அவர்களின் முதல் பேச்சு பெரிய ஏமாற்றம். இன்னும் கூடுதலாக ஓட்டு போட்டு இருக்கலாம் என்று அவர் கூறியது அரைகுறை வெற்றி என்பதை ஒப்புக் கொண்டதாகும். தி.மு.க கூட்டணியில் வென்ற கட்சிகளின் தயவோடுதான் புதிய ஆட்சி அமைந்துள்ளது என்பதை முதலமைச்சர் மறைமுகமாக ஏற்றுக் கொள்கிறார். எம்.ஜி.ஆரை விட அதிக ஓட்டு வாங்கியதாக விஜய் கூறுவது தவறு.
அ.தி.மு.க 1977 போட்டியிட்டது 200 இடங்கள் மட்டுமே. விஜய் 233 இடங்களில் போட்டியிட்டார். எனவே ஒட்டுமொத்த வாக்கு கூடத்தான் செய்யும். ஆனால் 1977 எம்.ஜி.ஆரின் வெற்றி கிட்டத்தட்ட 140. மாற்று கூட்டணியில் இருந்து ஆதரவு பெறாமல் அவர் ஆட்சி அமைத்தார். எனவே ஒப்பீடு தவறு. கிட்டத்தட்ட 20 இடங்களில் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் விஜய் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 6 மாவட்டங்களில் எந்த இடமும் கிடைக்கவில்லை. விஜய் அலை என்று எதுவுமே இல்லை. ஒரு தேர்தலில் அலை ஏற்பட்டுள்ளது என்றால் குறைந்தபட்சம் 180 இடங்களில் வெற்றி கிடைத்திருக்க வேண்டும். 'அல்லு சில்லு' கட்சிகள் என்று விஜய் வர்ணிக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு பெற்றுத்தான் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டது.

தேர்தலுக்கு முன் 'கல்லாப்பெட்டி கூட்டணி' என்று விஜய் வர்ணித்த அதே கூட்டணியின் கட்சிகள் ஆதரவுடன் தான் நம்பிக்கை தீர்மானம் நிறைவேறி இருக்கிறது. 200 யூனிட் இலவச மின்சாரம், கூட்டுறவு கடன் தள்ளுபடி ஆகியவற்றில் எழுந்துள்ள சர்ச்சைகள் அதிகம். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளவை இப்போது திறக்கப்படுகின்றன. மேகதாது பிரச்னை, திருவள்ளுவருக்கு காவி, தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை... இப்படி முக்கிய பிரச்னைகள் எதையும் விஜய் தன் முதல் பேச்சில் தொடக்கூட இல்லை. 'எனக்கு ஏதாவது வாயில வரப்போகிறது' என்று முதலமைச்சர் பேசியது அரசியல் அநாகரிகம்." எனத் தெரிவித்திருக்கிறார்.












